Thursday, August 02, 2012

தரணி போற்றச் செய்வோம்



அன்னை மொழியின் பெருமை நீ
அறிய வேண்டும் தம்பி
அன்னைத் தமிழைப் போற்றி நாம்
ஆட்சி அமைப்போம் தம்பி.

சங்க காலக் கவிதைகளின்
சங்கதிகள் அறிவோம்
எங்கள் தமிழின் பெருமையை
இணைந்து பாடி மகிழ்வோம்.

சிலம்பு பேசும் இளங்கோவின்
சிறப்புக் கண்டு மகிழ்வோம்
நலங்கள் ஓங்கும் கலித்தொகையின்
நயங்கள் பேசி மகிழ்வோமே.

கம்ப நாடார் கவிதைகளில்
நயங்கள் காண வேண்டும்
காவியங்கள் கற்றுத் தமிழில்
கனிவு கொள்ள வேண்டுமே.

வள்ளுவரின் குறளில் காணும்
வளங்கள் கண்டு மகிழ்வோம்.
தெள்ளு தமிழின் புகழை இந்தத்
தேசம் போற்றச் செய்வோம்.

எழுச்சி பொங்கும் பாரதியின்
இனிய கவிதை படிப்போம்
புரட்சிக் கவியின் மொழியிலே
புதுமை காண்போம் தம்பி.

வளங்கள் நிறைந்த தமிழின்
வண்ணம் காண்போம் தம்பி
களங்கள் அமைத்து எங்கள்
கன்னித் தமிழை வளர்ப்போம்.

இணையத்தோடு இணைந்து
இன்பத் தமிழை உலகில்
முதன்மையாக வைக்க நாம்
முயல வேண்டும் தம்பி.

கணனிக் கல்வி கற்று
கன்னித் தமிழை வளர்ப்போம்
நினைவு நல்ல தாயின் புகழ்
நீண்டு உயரும் தம்பி.

புதிய தமிழின் ஊடே நாம்
புரிய வேண்டும் புரட்சி
சங்கம் வளர்த்த தமிழை
தரணி போற்றச் செய்வோம்.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment