Saturday, April 01, 2023

வைராவியர் குலமகள் (பூமகள்) - (ஆதினி பகுதி 7)


நரபலி கதையை அறிவாட்டிப் பாட்டி சொல்வதாகச் சொல்லி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆதினி குட்டி போட்ட பூனையாக அறிவாட்டியின் வீட்டில் நாள்தோறும் வலம் வந்து கொண்டிருந்தாள். அறிவாட்டியை தனிமையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அமையாமலேயே போய்க்கொண்டிருந்தது. உறவு என்று சொல்ல யாருமே இல்லாமல் இடையர்கல்லிற்கு வந்த அறிவாட்டிப் பாட்டியின் ஆரம்ப நாட்கள் பற்றி முன்னம் கோமதி சொல்ல ஆதினி கேட்டிருக்கிறாள்.வாசுதேவ வாய்க்கால் பெருக்கெடுத்து பயிர் நிலங்களையும், கால்நடைகளையும் நாசம் செய்து ஊரில் பஞ்சம் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நாளொன்றில் அறிவாட்டி ஊருக்கு வந்ததாகச் சொன்னாள்.