Tuesday, October 05, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் நிறைவுப்பகுதி


ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14
பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.


இனி...


தம்பன் கோட்டை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. கலிங்கவிஜயவாகு மன்னரின் எருதுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கோட்டைக்கான கொடி அரைக்கம்பத்தில் ஏற்றிவிடப்பட்டது. கொம்பு, குழல், தப்பட்டை, தாரை, பறை போன்ற வாத்தியங்கள் சோகமாக ஒலித்துக் கொண்டிருந்தன.


அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தில் தளபதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசருக்கு சேதி அனுப்பப்பட்டு பதில் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.


உதயனை, யானை போட்ட கல்லிலிருந்து விடிவதற்கு முன்னமே, தளபதியின் உடலை கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் இளஞ்செழியன்.


(கல் நெருக்கக் காட்டுப்பகுதியைத் தற்போதைய அரசுகள் வெடிவைத்து அழித்து குடியேற்றங்களை உருவாக்கி வயல்பூமிகளாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. காட்டில் இருந்த உதயனை யானை போட்ட கல் என்று காரணப்பெயராக அழைக்கப்பட்ட பகுதி இப்போதும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அதே பெயரோடு அறியப்பட்டு கிடக்கிறது
)


இளஞ்செழியன்தான் முதலில் சுயநினைவுக்கு வந்தவன். உடனடியாக பத்து வீரர்களை சதுர்வேதமங்கலம் நோக்கி அரசரிடம் எப்படியாவது சேதியைச் சொல்லி பதிலைக் கொண்டு வருமாறு பணித்துவிட்டு, இன்னும் பத்துப்பேரை கடும்விரைவில் கோட்டைக்குள் சென்று ஆயத்தங்கள் செய்யுமாறு பணித்து விட்டு, உதயகுமரனின் உடலை நன்கு போர்வையால் சுற்றி குதிரைமேல் கிடத்தி தம்பன் கோட்டை நோக்கி மீதி வீரர்களுடன் விரைந்தான்.


தளபதி பொறுப்பை ஏற்ற சொற்ப காலங்களிலேயே அனைவரது அன்பையும் தன் எளிமையான பண்புகளால் கவர்ந்திழுத்திருந்த தளபதியின் சாவு பற்றி அறிந்ததும் எல்லோரும் வாய்விட்டுக் கதறினர்.


ஊர் மத்தியில் சேதி பரவி சாரி சாரியாக வந்து மரியாதை செலுத்திச் சென்றனர் மக்கள். சோகத்தின் மத்தியிலும் கண்ணீர் தாரையாக வடிந்து நிற்க படைவீரர்கள்மரியாதை அணிவகுத்து நின்றனர்.


ரங்கநாயகி விடிந்ததும் விடியாததுமாக வீட்டு முற்றத்தில் வந்து நின்று கொண்டிருந்தாள்.... அவள் மனம் வெறுமையாகக் கிடந்தது உற்சாகம் உடலிலும் இருக்கவில்லை. அவள் உணர்விலும் இருக்கவில்லை.


தீடீரென்று தடதடவென்று குதிரைக்குளம்பொலி அவர்களது வீட்டுப்பக்கம் வந்து கொண்டிருந்தது. அவர் வருகிறாரோ என்று நினைத்த மாத்திரத்திலே அவள் இதயம் அவனைப் பார்த்துவிட தொண்டைக்குழிவரை வந்துவிட்டது போலிருந்தது. வந்தது உதயகுமரனில்லை. ஒரு போர்வீரன்! செய்தியை இளஞ்செழியன் அனுப்பியிருந்தான்.அவன் சொன்ன சேதியைக் கேட்டதும்
அப்பா| என்ற ஒரு அலறல் அவள் அடித்தொண்டையில் இருந்து வந்தது. பிறகு கொஞ்ச நேரம் கோட்டை இருந்த பக்கம் திரும்பி சலனம் ஏதுமின்றி
நின்றவள் அப்படியே மயங்கி வீழ்ந்தாள்.



மதியத்திற்கு முன்னதாக அவளை மயக்கம் தெளியப் பண்ணி அத்தையும், சில பெண்களுமாக கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவனைக் கடைசித் தடவையாகப் பார்க்க வேண்டும் என்று போராடத் தொடங்கிவிட்ட அவளை,அடக்கவேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை கண்டு அவளை அழைத்து வந்தனர்.


உதயகுமரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நெற்றித் திலகம் அவனது முகத்தின் கவர்ச்சியை தூக்கலாக்கியது. வயிற்றுப்பகுதி சேதத்தை மறைக்கவோ என்னவோ அவனது வாளும் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. அவனது உயிரற்ற உடலைக் கண்டதும் அவள் அலறிக் கத்திக்கொண்டு விழுந்து மூர்ச்சையானாள். அவளுக்குள் ஒரு நரம்பு அறுந்தமாதிரி ஒரு உணர்வுடனேயே அவள் நினைவிழந்தாள்.



மாட்டுவண்டி எடுத்துவந்து பிரேதம் போல அவளை வீடு கொண்டு சென்றனர். அவளுக்கு நினைவு தெளிய ஒரு நாளாயிற்று. அதற்கிடையில் உதயகுமரனை அரசரின் ஆக்ஞைப்படி சதுர்வேத மங்கலத்திற்கு மங்கலத்தேரில் வைக்கப்பட்டு எடுத்துக் கொண்டு போகப்பட்டது. தம்பலகாமம் பிரதேசம் அடங்கிலும் ஒரே சோகமயம்தான்.


இதற்கிடையில் மரக்கட்டைபோல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மகளைக் கண்டதும் வைத்திலிங்கம் பிள்ளை சிறு பிள்ளை போல அரற்றத் தொடங்கிவிட்டார். அவரைத் தேற்றுவதே பெரும்பாடாயிற்று.தம்பை நகர் என்ற தம்பலகாமத்து இராஜ வைத்தியர் நமச்சிவாயப் பரியாரியாரின் உயிர் காக்கும் மிர்தி சஞ்சீவி மாத்திரைப் பிரயோகமே அவளைப் பிழைக்கச் செய்தது.ரங்கநாயகி இறந்துவிடுவாள் என்றே பலரும் நம்பினர். ஆயினும் பிழைத்துக் கொண்டாள். கொடிய கருநாக சர்ப்பத்தின் வாயில் அகப்பட்டுத் தப்பிய தேரைபோல சில காலம் ஒடுங்கிக் போயிருந்தாள்.


முன்னாள் தளபதி தம்பருக்கே மருத்துவம் செய்து வித்தைகாட்டிய இராஜாங்க வைத்தியரின் கைராசியால் ரங்கநாயகியும் சற்றுத் தேறலானாள். அவளது சங்கீதத் திறமை, அழகு இரண்டையும் கேள்விப்பட்டு எத்தனையோ பல ஊர்களிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். தன் அருமை மகளைத் தன் கண் மூட முன்னமே ஒரு நல்லவன் கையில் கொடுத்து அவளை ஒப்பேற்றி விடவேண்டும் என்ற நினைவிலேயே இருந்த வைத்திலிங்கம் பிள்ளை வரன்களை வரச்சொல்லி அவளது பதிலைக் கேட்டபோது, ரங்கநாயகி ஒரு தர்பாரே நடத்திவிட்டாள்.


அப்பா என் அன்பர் பயங்கர மரணம் அடைந்த சேதியைக் கேட்டதுமே நான் இறந்திருக்க வேண்டும். பாவி ஏன் உயிரோடு இருக்கிறேனோ தெரியவில்லை. அப்பா... நீங்கள் நான் இருக்கின்ற காலம் வரை இந்த நிம்மதியுடன் இருக்கவிடுவதாக இருந்தால் திருமணம் என்ற பேச்சை என் காது கேட்கச் சொல்லாதீர்களப்பா!



அவள் கேவிக் கேவி அழலானாள். அவரும் அவளுடன் சேர்ந்து அழுதார். இனி அவளிடம் இந்தப் பேச்சை எடுப்பதேயில்லை... அவளாக ஒரு முடிவுக்கு வந்தாலொழிய... நானாக அவளை நெருக்கக் கூடாது என்று அவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்.


சின்ன வயதிலேயே வெள்ளை உடுத்து விதவைக்கோலம்பூண்ட ரங்கநாயகி, சமயங்களில் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பில் நின்று சத்தமாக ராகங்களை இசைப்பாள். அதை உதயகுமாரன் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டிருப்பான் என்ற உணர்வு அவளுக்குள் இருக்கும், அல்லாது போனால் கலிங்கத்து விஜயன் கட்டி கலகக்காரர்களால் அழிக்கப்பட்டுப் பின்னர் குளக்கோட்டன் மன்னனால் கட்டப்பட்ட தம்பலகாமம் கோணேச்வரர் ஆலய தெற்கு வாயிலுக்கு எப்போதாவது வருவாள். உள்ளே எழுந்தருளி இருக்கும் கோணேஸ்வரப் பெருமானை நோக்கி இரு கரங்களையும் சிரசில் கூப்பி


நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே



என்று தன் குயில்க் குரலால் பாடுவாள். அப்போது தானும் உதயகுமரனும் குடமுருட்டியாற்று வெண்மணற்பரப்பில் அமர்ந்து பாடிய நாட்கள் நினைவுக்கு வரும். அவள் கண்கள் இரண்டும் அருவியாய் மாறும்.



ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14


ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 13


இனி...

தம்பன் கோட்டைப்பயணம் பின்னிரவுப்பொழுதில் புறப்பட்டது.
பிரயாணம் செய்யும் வழி காட்டுப்பாதையாகவும், இராக்காலமாகவும் இருந்ததால், தளபதிக்கு முன்பும் பின்பும் வீரர்கள் பாதுகாப்பாக வர அணிவகுத்தனர்.


வழமைபோல் உதயகுமரன் அதைவிரும்பவில்லை. தன்னைத் தொடர்ந்து சகலரையும் வருமாறு பணித்துவிட்டு தன் வெண்புரவியிலமர்ந்து அந்தக் காட்டு வழியால் முன்னால் குதிரை மீது போய்க் கொண்டிருந்தான்.


அவன் பணித்ததுபோல குதிரைப் படைவீரர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த 18 முழப்பாதையில் வெண்ணிலவு எறித்து ஒரு வெள்ளிப்பாதையாகவே மாறிவிட்டது. ஆயினும் வண்டில் வழிக்கு அண்மித்து கிளைபரப்பி நின்ற பெரு விருட்சங்களின் அடிகளில் இருள் சூழ்ந்து நின்றது. மணல் வழிகளில் குதிரைகள் நடந்துவருவதால் பெரிதாக அரவம் எழவில்லை.


எனினும், குதிரையில் ஆட்கள் வருவதையறிந்த ஆட்காட்டிப் பறவைகள் அடிக்கடி கத்திக் கொண்டு பறந்து சென்றன. பின்னிரவின் ஆரம்பம் அது.... கரடிகளின் உறுமல்கள்.... காட்டு யானைகளின் பிளிறல்கள்.... ஒரு விசித்திரமான பின்னணியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.


சமயங்களில் புலிகளின் கர்ச்சனைகள் அச்சத்தைக் கொடுத்தன. அதைக்கேட்டு குதிரைகளும் தயங்கின. ஆந்தையின் அலறலோடு கலந்து ஒலித்த நரிகளின் ஊளை ஒலி... மனதுக்குக் கிலி கொடுத்தது. அந்தச் சத்தம் இளஞ்செழியனுக்கு நல்லதாகப் படவில்லை. ஏக்கத்தோடு ஒலிப்பதுபோல் இருந்தது. தொடங்கிவிட்ட பயணத்தை நிறுத்தவும் தளபதி விரும்பமாட்டார். இளஞ்செழியனுக்கு சகுனங்களில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு.


இதைப் போய் தளபதியிடம் கூறினால்... நரிகளின் சுபாவமே அது... நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்.என்று ஒதுக்கித்தள்ளிவிடுவான். மூன்றாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரனின் மனம் பேதலித்துப் போய் இருந்தது.... தனது கவனத்தையும், அவன் உஷாரையும் இழந்து வெகு நேரமாயிற்று.... இடையே ஒருமுறை அவர்களைத் திரும்பிப் பார்த்தான்... அவர்கள் தூக்கக் கலக்கத்தில் சற்றுப் பின்தங்கியே வந்து கொண்டிருந்தனர்.


அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டாலும் குறிப்பான ஒன்றிலும் அது குவிந்திருந்ததாகக் காணோம். வெறுமையாக அவன் முன்னால் பார்த்தபடி சென்று கொண்டிருந்தான். உண்மையில் அவனுக்காக அவன் புரவிதான் நடந்து கொண்டிருந்தது. சிந்தனையோ ரங்கநாயகியிலும், தாயிலும், அரசரிலுமாக மாறிமாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது.


அவர்களுக்கு எதிரேயுள்ள ஒரு காட்டுப் பூமிக்கடியில் ஒரு மலைத்தொடர் உருவாகி, நேர்க்கோடு இழுத்தது போல் பூமிக்குமேல் ஒரு முழம் வரை உயர்ந்தும், சில இடங்களில் பதிந்தும் இருந்தது. இந்த மலைச்சரிவை கல் நெருக்கம் என்றழைத்து வந்தனர். அந்தக் கல் நெருக்கத்தில் ஒரு பாலைமரம் நன்கு கிளைபரப்பி வெட்டப்படாமல் பெரும் மலைபோல் வளர்ந்திருந்தது. அந்தப் பால் நிலவு வேளையிலும் அந்த மரத்தைச் சுற்றிலும் காரிருள் அப்பிக் கிடந்தது. அதன் இருளில் எவர் நின்றாலும் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது.


அந்த மரத்தின் கீழ் நின்று, அதன் தாழ்வான கிளையொன்றில் துதிக்கையைப் போட்டபடி கொழுப்பான தனியன் - காட்டுயானை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரன் அவ்விடத்தை அண்மித்தபோது, ஆள்காட்டிப் பறவை ஒன்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு பறந்தது. அதன் ஓசையில் விழித்துவிட்ட தனியன், நிலவு வெளிச்சத்தில் குதிரைமீது அமர்ந்து வரும் உதயகுமரனைக் கண்டது. மெல்ல மரத்தைச் சுற்றி ஒரு அடி முன்வைத்தது.


சரியாகக் குதிரை மரத்தண்டை வந்ததும் வேகமாக முன்நகர்ந்த யானையைக் கண்டு குதிரை கனைப்பதற்குள் பாய்ந்து துதிக்கையை நீட்டி உதயகுமரனை அப்படியே உயரத்தூக்கியது. யானையின் துதிக்கையைத் தன் முகத்திற்கெதிரே கண்டபோதுதான் உதயகுமரன் விழிப்படைந்தான். இயல்பாகவே அவனது கை குறுக்காக ஓடி வாளுக்காக நீண்டபோது காலம் கடந்து விட்டது. ஒரு பிளிறலுடன் அவனை அப்படியே அலக்காகத் தூக்கி அவ்விடத்திலேயே நிலத்தில் அறைந்ததுடன் தன் முன்னங்காலால் அவன் வயிற்றிலும் மிதித்துவிட்டு காட்டின் மறு பக்கம் ஓடி மறைந்தது.

யானையின் பயங்கர பிளிறலைக் கேட்ட வீரர்கள் நித்திரைக்கலக்கத்திலேயே குதிரைகளைத் திருப்பி சிறிது தூரம் ஓடிச் சென்று காட்டுக்குள் மறைந்து கொண்டனர்.


சில மணித்துளிகள்வரை யாரும் சத்தம் எழுப்பவில்லை. அரவம் அடங்கி அமைதி நிலவியது. தமது குதிரைகளைக் கடிவாளத்தில் பிடித்தபடி வாளை உருவிக் கொண்டு முன்னேறினர்.


அப்போதுதான் தளபதியின் வெண்குதிரை தனியே, தனது முன்காலால் தரையைத் தட்டி தலையை மேலும் கீழும் அசைத்தபடி நிற்பதைக் கண்டு கிலேசம் கொண்டனர். குதிரையின் அருகில் ஒருவர் கிடப்பது தெரிந்தது. கடவுளே என்று ஓலமிட்டுக் கொண்டு ஓடிவந்து பார்த்தனர்.

தளபதிதான்... தலையால் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. வயிற்றுப் பகுதி இடுப்புப் பட்டியுடன் சேர்ந்து நசுங்கிக் கிடந்தது.


பிரபோ என்று அலறிய இளஞ்செழியன் குனிந்து சுவாசம் வருகிறதா என்று பார்த்தான்.

பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.தொடரும்......

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்


ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....



{ படங்கள் இணையத்தில் இருந்து }

Friday, October 01, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 13




இனி...


ரங்கநாயகி இரண்டு மூன்றுநாட்கள் சரியாகச் சாப்பிடவும் இல்லை தூங்கவும் இல்லை. உதயகுமரன் சொன்னவைகளையே மனதுக்குள் இரைமீட்டு முடிவெடுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.


உதயகுமரன் தனக்காக, தன் பதவி, குடும்பம், உற்றார்உறவினர் ஏன் அவனுக்கு கிடைக்கக்கூடிய எதிர்காலத்தையே உதறித்தள்ள முன்வந்துவிட்டான் என்றால், அவனது அன்பு எவ்வளவு உறுதியானது உண்மையானது என்று எண்ண எண்ண அவன் மனதில் உயர்ந்து கொண்டே போனான்.


அதே நேரம் தானும் அதற்கீடாக சகலதையும் சகலரையும் துறந்து அவனே தஞ்சம் என்று அவன் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொண்டு அவனோடு சென்றுவிடவேண்டியதுதான். அதிலும் அவளுக்கு முடிவெடுக்கச் சிரமமாக இருந்தது.



தன்னை வளர்த்து ஆளாக்கி அறிவூட்டி... தன் கடைசிக் காலத்துக்கென தன்னையே நம்பியிருக்கும் தன் தந்தையை விட்டுச் செல்வது துரோகம் ஆகாதா? யாரோடும் அவளால் இதுபற்றி கலந்து பேச முடியவில்லை. அவளுக்கு நெருங்கிய சினேகிதி என்று யாரும் இருந்ததில்லை. குழப்பம் கூடக் கூட பசி குறைந்தது.


வயிறு வெறுமையாக நித்திரை தொலைந்தது. இதற்கிடையில் நாளை மறுநாள் அவர் என்னைச் சந்திக்கும்போது என்ன கூறப்போகிறாரோ... நான் என்ன சொல்லப்போகிறேனோ? என்ற பதைபதைப்பு அவளுக்குள் உருவாகத் தொடங்கிற்று.


இதுவரைக்கும் தன்னைப்பற்றியோ, தன்வாழ்க்கை எப்படி அமைந்திருக்கவேண்டும் என்பதைப் பற்றியோ கொஞ்சமும் கவலையின்றி திரிந்தவளுக்கு, எல்லாம் அப்பாவுக்கு தெரியும்... அவர் பார்த்துக் கொள்வார்... என்ற முனைப்பில் வாழ்ந்தவளுக்கு... இப்போது எல்லாம் ஒரே சுமையாகத் தெரிந்தது. இதைவிட குடமுருட்டியாற்று பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்.... அவரைக் காணாமல் இருந்திருக்கலாம்.... இந்த உறவை தொடங்காமலே இருந்திருக்கலாம் என்ற சிந்தனைகூட
களைத்துப்போன அவள் மனதில் இருந்து வந்தது.


கோணேஸ்வரா நான் சிறு பெண். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நீயே ஒரு வழிகாட்டு. அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு, அத்தையை துணைக்கு கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போய்வந்தாள்.


சதுர்வேத மங்கலத்தில் படைவீரர்களுக்குள் ஒரு விவாதமே நடந்து கொண்டிருந்தது. நாளை சுட்டெரிக்கும் கோடை வெயில் பயணமா? இன்றேல் இதோ வெண்ணிலவு பகலாய்க் காயும் குளிரான இரவில் புறப்பட்டு தம்பன் கோட்டையில் ஆறுதலாக ஓய்வெடுப்பதா?
சதுர்வேத மங்கலத்தின் விழா பரபரப்பு, சந்தடி, இரைச்சல்கள் சரியாக ஓய்வெடுக்க அவர்களை அனுமதித்திருக்கவில்லை. எவ்வளவு விரைவாகத் தம்பலகாமம் செல்லமுடியுமோ அவ்ளவுக்கு அதிகமாக ஓய்வெடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் இறுதியில் வந்து சேர்ந்தார்கள்.


இதற்கு தளபதியின் ஒப்புதல் வேண்டுமே, இளஞ்செழியனைப் பார்த்தார்கள். அவனுக்கு தளபதியைக் குழப்ப விருப்பமில்லை. யோசித்தான்....இவர்கள் சொல்வதுபோல் பயணத்தை விரைவுபடுத்தினால், அவரும் அவரது முடிவைப்பற்றி ரங்கநாயகி அம்மையாருடன் சீக்கிரம் பேசி அவரது குழப்பத்திற்கெல்லாம் முடிவு கட்டலாம் அல்லவா?... இளம் பராயத்து நண்பனான அவனுக்கு உதயகுமரன் ரங்கநாயகி பற்றி தன்னுடன் அதிகம்பேசாதது குறித்துக் கொஞ்சம் உள்ளூர மனவருத்தம்தான். இருந்தாலும் அவன் இத்தனை தூரம் கலங்கி நின்றதை அவன் அறியான்.


ஆதலால்.... விரைவில் ஒரு முடிவைக் காண்பது நல்லது என்றே பட்டது. உதயகுமரனை நெருங்கினான். பிரபோ! (என்னதான் நண்பனாக இருந்தாலும் தளபதிக்குரிய மரியாதையை அவன் கொடுக்கத் தயங்கியதில்லை.) முழுநிலவின் வெளிச்சத்தில் பயணப்பட்டு சீக்கிரமே கோட்டையைப் போயடைந்தால் ஆறுதலாக ஓய்வெடுக்கலாம் என்று படையினரின் ஆசையாக இருக்கிறது. தங்கள் முடிவு?என்று இழுத்தான்.


எதிர்காலம் பற்றியே முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் இது பற்றி என்னமுடிவெடுப்பது? எப்போதாவது போகத்தானே போகிறோம். இப்போது போனால் என்ன? பிறகு போனால் என்ன. இருந்தாலும் படைவீரர்களின் நலனில் அவனுக்கு இருந்த அக்கறை அவனுக்கு சரி அவர்களிஷ்டம் போல் புறப்படலாம் ஆயத்தமாகச் சொல் இரவு உணவான பிறகு ஒரு நாழிகையானதும் புறப்படலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டான்.


தொடரும்.....

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்




ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Wednesday, September 29, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 12

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11
அவர் படுக்கையை விட்டெழ ரொம்பநாளாகும் என்றார்களே பிரபு

உண்மைதான்.... ஆனாலும் தளபதி தம்பன் நினைத்தால் எமனையே புறமுதுகிட வைத்து விடுவார் என்பதல்லவா பிரபலம், அவனை ஒருமுறை உற்றுப்பார்த்தவர் தொடர்ந்தார்.


அவருக்குப் பரிபூரண சுகம் இல்லைதான். ஆனாலும் அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் அவர் உடல்நிலைபற்றி மலையாளத்தில் நல்ல அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள்... அதைக்கேட்ட இவர்... எனக்கிப்போ பரவாயில்லை என்றும் கலம் ஏறி வந்துவிட்டார் போலிருக்கிறது..... நானும் அவரைக் கண்டபிறகுதான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்.

தளபதி குணமாகி வந்து விட்டார் என்ற சேதி உறைத்ததும் உதயகுமரனின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்து மறைவதை மன்னர் அவதானித்தாரோ இல்லையோ.... அவர் முகத்தில் இள நகை படர்ந்தது.


தளபதி தலைநகர் திரும்பியதற்கென்ன அங்கேயே அவருக்கு நிறைய அலுவல்கள் காத்திருக்pன்றன. தம்பன் கோட்டைப் பொறுப்பைவிட மேலான பொறுப்புக்கள் அவருக்கு இருக்கப் போகின்றன. தம்பன் கோட்டை தொடர்ந்தும் உன் பொறுப்பில்தான் இருக்கும். என்றார்... அவர் சிரிப்பு அகன்றது. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க முனைவது அவருக்கு புரிந்தது... ஆனாலும் அவனைப்பேச அனுமதிப்பதாகக் காணோம்.


சரி சரி நீ எப்போது கிளம்பப்போகிறாய்? என்று கேட்டார்.

நாளைய பொழுது புலர்ந்து வரும் வேளையில் புறப்பட ஆயத்தம் பண்ணச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறேன் பிரபு


நல்லது நானும் நாளையே கிளம்புகிறேன். அதோ இரதத்தையும் தயார்படுத்துகிறார்கள். என்று சுட்டிக்காட்டினார். தங்கமாய் மின்னிய அவரது இரதம் கழுவப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு மட்டுமல்ல, உனக்கும் ஓய்வு வேண்டும். விடைபெற்றுக் கொள். என்று கூறிவிட்டு உரையாடல் முடிந்து விட்டது என்பது போல் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு ஆசனத்திற்காக நகர முற்பட்டார் சக்கரவர்த்தி.


உதயகுமரனுக்கோ முகம் வாடிவிட்டது. இனி மன்னனுடன் பேசமுடியாது. வந்தவேலை நிறைவேறப்போவதுமில்லை. ரங்கநாயகியிடம் நான் என்ன சொல்வேனோ?... இதை நினைக்கும்போதே அவன் முகம் கறுத்து வாடியது.

வேறு வழிதெரியாது இயந்திரம்போல் வெளியேற, திரும்பி அவன் ஒரு சில அடிகளே வைத்திருப்பான்.

உதயகுமரா...! என்று அழைத்தார். அவன் இரண்டே எட்டில் அவர் அருகில் நின்றான். நீ வாலிபன், துடிப்புக்கள் அதிகமான பருவம், அதனால்தான் நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நீ அரசகுலத்தினன் என்பதையோ, அரசகுலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது என்பதையோ மறந்துவிடாதே... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள்... நீ சிந்தித்துப்பார்.... மக்கள்.... நாடு... இதை முன்நிறுத்தியே முடிவு எடுக்கவேண்டியவர்கள் அரசகுலத்தினர். நீ முன்னேற்றம் அடையவேண்டும், பேர் புகழ் ஈட்டவேண்டும், என்பதுதான் என்னுடையதும் உன் அன்னை இரத்தினாவதி தேவியினதும், உன் சிற்றன்னையினதும் எதிர்பார்ப்பு....எங்கள் எதிர்பார்ப்பைச், சிதைத்துவிடாதே... அரசகுலத்தவருக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கமுடியாது....இருக்கவும் கூடாது...


அரசர் பேசப் பேச சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னைப்பற்றித் தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது.!


நீ போகலாம்... என்று உள்அறைக்குச் சென்றுவிட்டார் மன்னர். அவனால் ஓரடி கூட எடுத்து வைப்பது சிரமமாக இருந்தது. தம்பன் கோட்டையில் அவன் கட்டியது வெறும் மணல் கோட்டைதானா? மன்னன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் நாராசம் போல் பாய்ந்தன. அப்படியானால் ரங்கநாயகி...? அவளை மறந்துவிடவேண்டியதுதானா?


தளபதி தலைநகர் வந்துவிட்டார் என்றதுமே அவனுக்கு ஒரு வகையில் ஏக்கம் பிடித்துவிட்டது. அப்படியென்றால் தம்பரிடம் கோட்டையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு தலைநகருக்கு கிளம்பவேண்டியிருக்குமே... அப்படியானால் ரங்கநாயகியை எப்படி சந்திப்பது? என்ற ஏக்கம்அவனுக்கு.... மறுகணமே ஒரு நப்பாசையும் உதித்தது. தம்பரிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு பொறுப்பகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ரங்கநாயகியுடன் இந்தியா கிளம்பிவிடலாமா? என்று ஆசை கிளம்ப, மன்னரிடமே அதை சொல்லிவிடுவது என்று சிந்திக்க தலைப்பட்டான்.


ஆனாலும் எந்த சிந்தனைகளும், திட்டங்களும் மன்னரின் முன்னிலையில் எடுபடவேயில்லை.... மாறாக அரச குலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள் எங்களை ஏமாற்றிவிடாதே, என்ற மன்னரது வார்த்தைத் தொடர்கள் அவன் நாடி நரம்புகளை எல்லாம் ஒடுங்கச் செய்துவிட்டன.


அதுமட்டுமல்ல மன்னரது ஆற்றல்மீது அவனுக்கேற்பட்டுள்ள மலைப்பும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. என் ஒவ்வொரு அசைவும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவரை விஞ்சி இந்த இராச்சியத்திலும் சரி, நாட்டிலும் சரி எதுவும் நடந்துவிடமுடியாது என்ற எண்ணம், அவனுக்கு அரசர் மீது இருந்த மதிப்பைப் பலமடங்கு உயர்த்தி விட்டது.


எனினும் தன் வாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது அவனுக்குக் கோபத்தைத் தந்தது.... தன்னால் நினைத்தபடி எதையும் செய்துவிடமுடியாது என்ற எண்ணம் தலைதூக்கியபோது ஆத்திரமல்ல இயலாமை அவனை மேற்கொண்டது.


நடைப்பிணமாக வீரர்களுடன் விருந்தினர் விடுதிக்குத் திரும்பினான் உதயகுமரன். அவன் மனதில் உற்சாகம் அற்றே போய்விட்டது.தான் எடுக்கப்போகும் முடிவால் யார் யாருக்கு என்ன நடக்கக் கூடும் என்று சிந்தித்துப்பார்த்தே களைத்துப்போனான். வழியில் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் அவனைக் குழப்பவில்லை. அவன் குதிரைகூட துள்ளல் நடையில்தான் போய்க் கொண்டிருந்தது. எஜமானைக் குழப்ப அதற்கும் இஸ்டம் இருக்கவில்லை.


அன்று பூரணை முழுநிலவு நாள்! ஏற்கனவே அடிவானில் தங்கத்தாம்பாளம் போல் சந்திரன் அடிவானில் உதயமாகிக் கொண்டிருந்தான்.



தொடரும்......

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்







ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....





{ படங்கள் இணையத்தில் இருந்து }

Monday, September 27, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11




திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.


இனி...


தம்பன் கோட்டையை விட்டுப்புறப்பட்ட அந்த அணி சதுர்வேத மங்கலம் என்ற கந்தளாயை நோக்கி நகர்ந்தது. தளபதியைப்போல வீரர்களும், குதிரையை ஓட விரட்டாமல், சிறு பாய்ச்சலிலேயே செல்ல அனுமதித்தனர்.



பயணம் சேனை வழிக்கல்வழியூடாகச் செல்லலாயிற்று. சேனைவழிக்கல்வழி சதுர்வேத மங்கலத்திற்கும் (கந்தளாயிற்கும்) தம்பலகாமத்திற்கும் இடையில் இரு ஊர்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாகும். இரண்டு ஊர்களுக்கும் இடையே 24 மைல் தூரம் அடர்ந்த காடு ஆகும். இந்தப் பெரும் வனத்தை ஊடறுத்து அமைவதுதான் இந்த ஒரே பாதையான சேனைவழிக்கல்வழி. பொதுவாக இது மாட்டு வண்டிப்பாதையாகவே அமைந்திருந்தது.



இரண்டு ஊர்களையும் இக்கானக நெடுஞ்சாலை இணைத்து நின்றதால் இரண்டு ஊர்களதும் அரச நிர்வாகம் இவ்வழியின் இரண்டு மருங்குகளையும் இரு ஊரவர்க்கும் பங்கு வீதம் அளந்து கொடுத்து சுமார் ஐந்து முழ அகலத்திற்கு மரம் செடி கொடிகளை வெட்டியழித்து துப்பரவு செய்யப்பணித்திருந்ததால் இந்தப் பெரும் வனத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய எட்டு முழத்திற்கும் (25 அடிவரை) அதிக அகலமான இப்பாதைவழியில் பயணிகள் அச்சமின்றிப் போகக்கூடியதாக இருந்தது.




காலத்திற்குக் காலம் வழியின் இருமருங்கும் ஐந்து முழ அகலம் என்று காடு வெட்டி துப்புரவு செய்திருந்தாலும் பாதையை ஒட்டி நின்ற பாலை, இலுப்பை போன்ற விருட்சங்களை விட்டு வைத்தும் இருந்தனர். எண்திசையும் கிளை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிழல் தந்தவண்ணம் இம்மரங்கள் இருந்தன.



வழியில் இத்தகைய மரங்கள் இரண்டு ஒன்றாகி இருந்த இடத்தில் நிழல்போதுமானதாக இருந்ததால் ... குதிரைகளை ஓரமாகக் கட்டிவிட்டு அத்தனைபேரும் அமர்ந்து, கொண்டுவந்திருந்த புளிச்சாதத்தை சாப்பிட்டு சில கணங்கள் இருந்துவிட்டுப் புறப்பட்டனர்.



வேறெங்கும் நிற்காமல் சதுர்வேதமங்கலத்தை (கந்தளாய்) வந்தடைந்த உதயகுமரனையும், குதிரைப்படைவீரர்களையும் மகாநாட்டு நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் விடுதியில் தங்கவைத்து, உடலில் படிந்திருந்த தூசியையும், வியர்வையையும் அகற்ற குளியலுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றனர்.



நாட்டின் நாலா புறமுமிருந்து கோட்டைத்தளபதிகள், படைவீரர்கள் என்று மட்டுமல்லாது மடாதிபதிகள், சமய அறிஞர்கள் வேதவிற்பன்னர்கள், யோகிகள், சமயப் பிரமுகர்கள், சைவப் பெருமக்கள் என்று திரள் திரளாய் வந்து சதுர்வேத மங்கலத்தை நிறைத்துக்கொண்டிருந்தனர். அரோகரா ஒலிகளும் ,ஓம் உச்சாடனங்களும் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தன.

அன்று மதியத்திற்கு பின்னர் பொலன்னறுவையிலிருந்து கலிங்க விஜயவாகு மன்னர் நால்வகைச் சேனைகளும் புடைசூழ, வாத்திய கோஷங்கள் முழங்க, அமர்க்களமாக சதுர்வேதமங்கலம் வந்தடைந்தபோது, உதயகுமரனும், ஏனைய தளபதிகள், அதிகாரிகளுடன் சென்று வணக்கம் செலுத்தினான்.

அன்று மாலையே விழா ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால்... மன்னர் அதிகளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்காமல் ஒரு சில முக்கியமான கோட்டைகளின் தளபதிகளுடன் மட்டும் கலந்துபேசினார். அவர் உதயகுமரனின் முறை வந்தபோது, தம்பன் கோட்டையின் குறிப்புக்களைச் சொல்லி விபரங்கேட்டபோது, அவன் அசந்தேபோனான். இத்தனை தெளிவாக கோட்டையின் மூலைமுடுக்குகள், பாதாள அறைகள், களஞ்சிய சாலை... சிறைக்கூடம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிராரே... என்று வியந்தான். மறுகணம் இல்லையென்றால் பௌத்தர்களின் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்யமுடியுமா என்று கலிங்கவிஜயபாகு சக்கரவர்த்தியின் ஆட்சிவண்ணத்தை மெச்சவும் செய்தான்.




வேளையானதும் மேள தாள சீர்களுடன் அரசர் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும் கூட பல பாகங்களிலிருந்தும் தவசிரேஷ்டர்கள், தத்துவ ஞானிகள், யோகிகள், வேதாகமப்பண்டிதர்கள், அரச பிரதிநிதிகள், தளபதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் என்று வந்திருந்து மண்டபத்தை நிறைத்திருந்தவர்கள் மன்னரைக் கண்டதும் எழுந்து நின்று ஜயகோஷம் எழுப்பி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மன்னர் தமக்கான சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சபையும் அடங்கியது.



விழா ஏற்பாட்டாளர்கள், சம்பிரதாயபூர்வமாக, மன்னரை விழித்து, தலமை தாங்கி அம்மாநாட்டை ஆரம்பித்து வைக்குமாறு அவரிடம் பணிவாக வேண்டிக் கொண்டனர்.



கலிங்க விஜயபாகுச் சக்கரவர்த்தியும் எழுந்து, சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, குத்துவிளக்கேற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். ஆத்திசூடி பாடப்பட்டதும், மன்னர் மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் பேசத்தொடங்கினார்.



கலீரென கம்பீரமான குரலில் பேசத்தொடங்கினார் மன்னர். சபை மகுடியில் கட்டுண்ட நாகம்போல கவனம் திரும்பாமல் செவிமடுக்கலாயிற்று...
தொடர்ந்து ஒவ்வொருவராக முறையெடுத்துப் பேசலாயினர். சமயஅறிஞர்கள், யோகிகள், வேதவிற்பன்னர்கள் என்று தாங்கள் கடைப்பிடிக்கும் தெய்வக் கொள்கைகளை விளக்கி உரையாற்றலாயினர். எல்லோரது பேச்சும் மன்னர் குறிப்பிட்ட உபநிடதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதாகவே அமைந்தன. இவ்வாறாக ஆரம்பித்த வேதாகம மாநாடு மூன்று நாட்களாக இடம்பெற்றன. இடையிடையே சமயக் கருத்துக்களை விளக்கும் நாடகங்கள், நடனங்கள், தெருக்கூத்துக்கள், சங்கீதக்கச்சேரிகள் என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சிகளால் மாநாடுகளை கட்டிக் கொண்டிருந்தது.


உதயகுமரனுக்கு மனம் எதிலும் ஓடவில்லை. அவன் சிந்தனையெல்லாம் குடமுருட்டியாறு, வெண்மணற்பரப்பு, ரங்கநாயகி ஆகியவற்றிலேயே நிலைத்திருந்தது. எப்படியாவது மன்னருடன் பேசி அவளை மணம்முடிக்க அனுமதி பெறவேண்டும் என்ற உறுதி அவனுக்குள் எழலாயிற்று.



மாநாட்டு நிகழ்வுகள் களியாட்டங்களுடன் நிறைவு பெற்றன.... சகலரும் மாநாட்டைப் பற்றியும், அதை ஏற்பாடு செய்த மன்னரைப்பற்றியும் புகழ்ந்தபடியிருந்தனர். அரசரும் மறுதினமே ராஜதானி திரும்ப ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த கோட்டைத் தளபதிகள், அயல்நாட்டு பிரதிநிதிகள், பிரமுகர்கள் சக்கரவர்த்தியை வணங்கி சந்தித்து விடைபெற்று வணங்கிக் கொண்டு ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.


தன்பங்கிற்கு விடைபெற உதயகுமரன் அவசரப்படவில்லை. மன்னருடன் ஆறுதலாக ரங்கநாயகி பற்றி காதில் போட்டு எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்பதில் அவன் முனைப்பாக இருந்தான்.




உதயகுமரனும் சிலவீரர்களும், இளஞ்செழியனும் வந்து அரசரை வணங்கி நின்றார்கள். அமர்ந்திருந்த அரசர் உப்பரிகைச்சாரளத்தின் பக்கமாக உதயகுமரனை அழைத்துச் சென்றார். அவர் அப்படிச் செய்தது உதயகுமரனின் வீரர்களுக்கு பெருமையாக இருந்தது. தங்கள் தளபதி சக்கரவர்த்திக்கு நெருங்கியவர் என்பதில் அவர்களுக்கு ஏதோ உயர்ந்த எண்ணம். உதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. என்றார்.



உதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.




தொடரும்......


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

தொல்லைதரும் பேன்கள் / Pediculosis



மனித உடலில் புற ஒட்டுண்ணியாக வாழ்ந்து மனிதருக்குப் பெரும் துன்பம் தருகின்ற கிருமி பேனாகும். இவை மனித குருதியை உறிஞ்சிக்குடிக்கின்றன , அத்துடன் இவற்றின் கழிவுகளால் மனித உடலில் ஒவ்வாமை ஏற்படுகின்றது ,இவற்றோடு இவை சில வகையான நோய்களைப் பரப்பும் தன்மையையும் கொண்டிருக்கிறது.