Thursday, August 17, 2023

வருடங்கள் 15


இணையவெளியில் ஜீவநதி வலைமனையில் குடிபுகுந்து (13.08.2008) 15 வருடங்கள் ஆகிறது. வாசகர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பினாலும், உற்சாகமூட்டலாலும் என் எழுத்துக்கள் வருடம் தோறும் மெருகேறி வருவதை வரலாறாகக் காட்டுகிறது இந்த வலைமனை. உங்கள் அனைவரின் அன்புக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

Wednesday, August 02, 2023

மரக் குதிரை - (ஆதினி பகுதி 10)


காதைக் கூர்மையாக்கிக் கொண்ட குருவும், சிஷ்யையும் பறையொலி நெருங்கி வருவதைப் புரிந்து கொண்டனர். கந்தளாய்க் குள வேள்விக்காக மாடு பிடிக்கச் சென்ற மறிகாரர்கள்தான் ஊர் திரும்பி வருகிறார்கள் என்பதை உணர்த்துவதாக அந்தப் பறையொலி இருந்தது. தனது தந்தை கேசவன் வீடு திரும்பி வருகிறான் என்ற ஆனந்தம் ஆதினியின் முகம் முழுக்க மகிழ்ச்சி ரேகைகளைப் படரச் செய்தது. அதற்கு மாறாக அறிவாட்டியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரத் தொடங்கின.