Tuesday, December 30, 2008

சிறைவைக்கப்பட்ட வீடு


நேற்றுப்போல் இருக்கிறது
நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த  வீடு
பாதைவழியே தொடங்கிய –எம்
நெடுந்தூரப் பயணம்.

Wednesday, December 24, 2008

என்ன வித்தியாசம் சுனாமிக்கும் நமக்கும்......

tsunami மனதுமறக்காத நாளானது
மார்கழி இருபத்தாறு
துறைமுக அலை
துயரத்தின் பேரலையானது
ஆழிப்பேரலை நம்
ஊரை உலுக்கியது
உறவுகளைப் பிரித்து
உடமைகளை உருக்குலைத்தது.

Tuesday, December 23, 2008

காதலின் மொழி

 love
இருவருக்கும் இடையில்
கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்
எதுவுமே பேசவில்லை
இதுவரையில் நாம்

Saturday, December 13, 2008

கடவுள் எழுதிய கவிதை

கவிதை
கண்களைமூடிக் கைகளைக்
கூப்பியிருந்தான் அவன்
இதயம் மட்டும் திறந்திருந்தது
எதிரே நிற்கும் எழிலின் இமைகள்
திறக்கும் எப்போதென்று

Tuesday, December 09, 2008

உலகம் புரியும்

கவிதை
அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்

Monday, December 08, 2008

மீள்குடியமர்வு

கவிதை
சொல்லிலடங்காத
சோகங்களின்
தொகுப்பு

Sunday, December 07, 2008

வலிக்கும் வார்த்தைகள்

கவிதை
நிறையவே நான் வருந்தியதுண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் போனதுக்குமாக

Friday, December 05, 2008

எழுதப்படாத கடிதம்...

காதல்

எப்போதாவது தோன்றும்
இதயத்தைப் பிழிந்து
எடுத்த சாற்றில் -உனக்கு என்
உணர்வுகளை எழுதவேண்டும்
ஒருதரமாவது என்று

Thursday, December 04, 2008

தொடரும் பயணம்......

கவிதை
எப்போதாரம்பித்தது
என்பயணமென்பது
இப்போதும் தெரியாதெனக்கு

Wednesday, December 03, 2008

பொய்கள்............

காதல்
நானாகத் துரத்தவில்லை –உன்னால்
தூக்கமிழப்பதாய்ச் சொல்லி
துயர்கொள்ளவில்லை

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை.

Thampalakamam
தம்பலகாமம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும்.திருகோணமலையிலிருந்து 22 km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

Tuesday, December 02, 2008

மீளும் நினைவுகள்

மீளும் நினைவுகள்
எப்போதும் போலவே
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப்போனதன்றும்

இப்படியும் ஒரு வாழ்க்கை...

வாழ்க்கை
ஏக்கம்,துக்கம் ஏன் இந்த
வாழ்வென்ற விரக்தியோடு
விடிந்துகொள்கிறது பகல்

Monday, December 01, 2008

பறிபோன இரவு

 இரவு
என் இன்றைய இரவும்
என்னுடையதாகவே இருந்திருக்கும்

குட்டிக் கவிதைகள்

சமூகம்
தெய்வங்களின் 'ஊர்வலம்'தெருத்தெருவாய் வந்தது –மனித
உள்ளங்கள் ஒருமுகப்பட்டு
ஒன்றாகும் வரை.

Thursday, November 27, 2008

வாழ்க்கையில் வாகனங்கள்

சமூகம்

வாகன நெரிசலுக்குள்
தொலைந்துபோய்விடுகிறது- வாழ்க்கை
பயன் தரும் வேலைகளைவிட – அதற்குப்
பயணப்படும் நேரங்களே – நாளில்
அதிகமிருப்பதாய்ப்படுகிறது.

Thursday, November 20, 2008

திருகோணமலை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்,இலங்கை..

திருமலை
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேரூந்து தரிப்பிடத்துக்கு மிக அருகாமையிலும் திருகோணமலை புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.

Saturday, November 15, 2008

மூத்த எழுத்தாளர் தம்பலகாமம் க.வேலாயுதம் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு...

 திருமலை தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஞானவிநாயகர் ஆலயத்தில் பொங்கல்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Sunday, November 02, 2008

தமிழ்மண நட்சத்திரவாரம் - ஒரு மீள்பார்வை

நட்சத்திரம்
கடந்த வாரம் ஜீவநதி வலைப்பூவினை தனது இந்தவார நட்சத்திரமாக ஏற்றுச் சிறப்பித்த தமிழ்மணத்திற்கும், தமிழ்மண நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆரம்பித்து 80 நாட்களை இன்றுடன் பூர்த்தி செய்யும் ஒரு வலைப்பூவிற்கு இப்படியொரு அறிமுகம் கிடைத்திருப்பது மனமகிழ்வைத் தருகிறது. வலையேற்றிவைத்த எண்ணங்களை சகபதிவர்களுடனும் வலைப்பூ வருகையாளர்களிடமும் பகிர்ந்துகொள்வதில் தன் சிறப்பான பங்கினை வகித்திருக்கிறது இந்த தமிழ்மண நட்சத்திரவாரம்.
.
வருகைகள்
நட்சத்திரம்
திகதி


.
மேலே காட்டப்பட்டிருப்பது ஜீவநதி வலைப்பூக்கான வருகைகள் பற்றிய கணிப்பீடு. {தமிழ்மண நட்சத்திர வாரம் 27இருந்து 2 வரை}

{நன்றி Histats.com }
நீலநிற வரைபு - Page views
மஞ்சள்நிற வரைபு - Visitors
கபிலநிற வரைபு - new visitors

இந்த நட்சத்திரவாரத்தில் சகபதிவர்களும், வலைப்பூ வருகையாளர்களும் எனது பதிவுகளுக்குத் தந்த வரவேற்பும், மறுமொழிகளும் சந்தோசத்தையும் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் தந்தது.
எனவே தொடர்ந்து வரும் நாட்களிலும் இதே உற்சாகத்தோடு ஜீவநதி உங்கள் வலைநாடி வரும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். வணக்கம்....
த.ஜீவராஜ்

மீண்டும் சந்திப்போம்

கவிதை யாழ் மருத்துவ பீட 'MEDICOS' NITE ' இதழுக்காக  எழுதியது மாற்றம் ஏதுமில்லாமல் பகிர்தலுக்காக.................


வெள்ளைக் கட்டடத்திற்கு
விடைகொடுக்கும் நாளின்று
விழாமுடியும்வரை
விளங்கப்போவதில்லை
பிரிதலின் பெறுமதி

நாளையவிடியலில்
நாற்திசையாய் நண்பர்கள்பிரிய
மெல்லமாய் வெறுமை
கள்ளமாய் உள்னுழையும்
ஆறுவருட பந்தமென்பதொன்றும்
அற்பமானதல்லவே

நினைக்கையில்
நேற்றுப்போல் இருக்கும்
வாசற்படி தொழுது
வரவேற்கப்பட்ட முதல்நாள்
காலச்சக்கரம் கனகதியில்
சூழல்கிறது

விடைபெற்றபின்னும்
மீளவும் வரலாம்
விரிவுரையாளனாக
விருந்தினராக மற்றும் பலவாக
முடியாததொன்றுதான்
மறுபடியும் மாணவனாக

உறவுகளில் விசித்திரம்
“நட்பு”
உருவாதல்மிகஎளிது
அதுபோலவே உடைதலும்

நினைவு தெரிந்தநாளிலிருந்து
நீடுகொண்டேயிருக்கும்
நண்பர்கள் பட்டியலில்
நல்லதோர் இடம் நிட்சயம்
இங்கும் இருக்கும்

பிரிவுஎன்பதொன்றும்
வேரோடுறவைப்
பிடுங்கிச் செல்வதல்லவே
உணர்வுகளைப் பங்கு
பிரித்துச்செல்வது


உள்ளகப் பயிற்சி தொடங்கி
உறவுகள் புதிதாய் மலர்ந்து
உலகத்து நடைமுறைவாழ்வில்
நமைத்தொலைத்து
உருமாறிப் போய்விடும் - ஓர்
நாளில் வரும்
நண்பனின் சந்திப்பு
ஞாபகங்களைத் தாலாட்டும்
நடப்பு வயதினைக் குறைத்து
நம்மைச் சிலிர்ப்பூட்டும்
நம்பிக்கை தரும்
வாழ்வின் வடுக்களை
மறைக்கும்

ஆதலால்
நல்லனவற்றோடு பிரிவோம்
அல்லாதனவற்றை மறப்போம்
மறுபடியும் மீண்டும் சந்திப்போம்
2005.
த.ஜீவராஜ்

Wednesday, October 29, 2008

எல்லாமே முடிந்துபோயிருந்தது…..

எல்லாமே
முடிந்து போயிருந்தது

ஊர்த்தொடக்கமே
உதிரத்தால் உறைந்திருக்க
வாழ்விழந்த மக்களது
மரண ஓலம்
வழியெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது

நீண்டு வளர்ந்த எத்தனையோ
தென்னைகள் ஏற்றிருந்தன
‘செல்’ விழுப்புண்களை - இருந்து
இலக்கின்றி விழுந்தவையெல்லாம்
எதையாவது அழித்திருந்தன.

‘மாலா’ அக்காவின்
மண்வீட்டுக் கூரைபிளந்து
கொழுவி இருந்த ‘தொட்டில்க் குஞ்சு’
தரையில் சிதறியிருந்தது
அவசோகமாற்ற யாருக்கும் திரணியில்ல

கண்ணன் மாமா
விமலன் அத்தான்
பக்கத்து வீட்டுப் பரிமளம் புரிசன்
இன்னும் எத்தனையோ
இளசுகளெல்லாம் - கிராமத்தெல்லையிலேயே
எமலோகம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்
பிணங்கள்கூட இன்னும் வயலில்தானாம்

சசி அக்கா
குண்டு மாமி
குஞ்சி மகள் என்று
நீண்ட வரிசைக்கப்பால்
என் கிராமமும் சேர்ந்து
கற்பிளந்து போயிருந்தது.

பாதைகளில் ‘ரயர்’ குவியல்
வீடுகளில் இரத்தக்கறைகள்
வயல்வெளியில் பிணக்குவியல்
இன்னும் எல்லாம்
அப்படியே இருக்கிறது.

சிற்றூர் பிரளயத்தில்
நாங்கள் மட்டுமல்ல
கோணேசரும் தப்பவில்லை
கோயிலெல்லாம் குண்டுதுளைத்து
குற்றுயிராய் இருந்தது

எங்கோ ஏதோவோர்
சண்டை நடந்ததற்காய்
இங்குநாங்கள்
சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


த.ஜீவராஜ்

Monday, October 27, 2008

தமிழ்மணம் நட்சத்திரவாரம்



அது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத்தது. தமிழ்மண உதவிப்பக்கம்மூலம் வலைப்பூ உருவாக்கிய எனக்கு குறுகிய காலத்தில் கிடைத்த நல்லதொரு அங்கீகாரமிது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், சகபதிவர்களுக்கும் ,வலைப்பூ வருகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனக்கும் இணையத்துக்குமான உறவு யாழ் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் எனக்கு இணையம் ஒரு செய்தி ஊடகமாகவே அறியப்பட்டிருந்தது (அடிபாடு {சண்டை} நடந்தால் ஓடிப்போய் எல்லோருமாகப் பார்ப்போம்) இருந்தும் பின்னாளில் சாதாரண இணையப்பக்கங்கள் பார்வைக்கு கிடைக்கத்தொடங்கிய வேளையில் (கவிதை சம்மந்தமான ) நாமும் இதுபோல ஒரு வலைப்பூ தொடங்கலாமே என சின்னதாய் ஆசையொன்று மனதில் துளிர்விடும். ஆனாலும் கணிணி பற்றிய அடிப்படைக்கு குறைவான அறிவும், வலைத்தளம் உருவாக்கவும் அதை தொடர்ந்து செயற்படுத்தவும் நிறையச் செலவாகுமென்ற பயமும் கிடப்பில் போட்டிருந்தது எனது வலைப்பூக்கான முயற்சிகளை. பின்னாளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, கல்விக்கான எனது போராட்டம் என்பவற்றில் வலைப்பூ ஆசைகள் அடிபட்டுப்போனது.

சற்றும் மனந்தளராத விக்கரமாகித்தனாக இணைய வேதாளத்துடனான எனது வலையேற்றும் முயற்சிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு மீள ஆரம்பிக்கப்பட்டது.அதிஸ்டவசமாக இலவச வலைத்தளம் உருவாக்குவதற்கான முயற்சியில் கூகிளில் தேடியலைந்துகொண்டிருந்தபோது  ‘தமிழில் எழுதலாம் வலையில் பரப்பலாம் வாருங்கள்’ என்ற அழைப்பு என்னையும் உள்ளழைத்துக்கொண்டது. பிறகென்ன இருவாரங்கள் தட்டுத்தடுமாறி முட்டி மோதி,பல நாட்கள் உறங்காமலே விடிய, ஒருவாறு 13.08.2008 அன்று எனது முதல் பதிவினை வெற்றிகரமாக வலையேற்றினேன்.

என்னுடைய எண்ணங்களைக் கவிதையாக எழுதிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். முழுமையான சுதந்திரத்துடன் எனது எண்ணங்களைப் பிரசுரிக்கிறேன் என பொய்சொல்ல முடியவில்லை. நானாக வகுத்துக்கொண்ட சில மட்டுறுத்தல்களுடன் வலைநாடி வருகிறது என் பகிர்வுகள். நீங்களதைக் கவிதையாக ஏற்றுக்கொண்டால் சந்தோசம், இல்லையென்றாலும் காரியமில்லை அது ஒரு கருத்துப்பகிர்வாகவேனும் இருக்குமல்லவா?

வலைக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இந்த நட்சத்திர வாரத்திலும் வழமைபோல பதிவிட உத்தேசித்திருக்கிறேன்.

மீண்டுமொருமுறை தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

த.ஜீவராஜ்

Tuesday, October 14, 2008

வலி வந்தவனுக்குத்தான் தெரியும்



முறிந்து போனதற்கு
முற்றுப்புள்ளி வைப்பதுதானே
முறையென்றாய்
எனக்கென்னவோ அது
முட்டாள்த்தனமாய்ப் படுகிறது

முடிந்ததும் மூடிவைப்பதற்கு – என்
காதலொன்றும்
கற்றல்களுக்கு மட்டுமான
புத்தகமல்ல அகராதி
அடிக்கடி திறந்து – என்
அகவாழ்வின் அர்த்தங்களைப்
புரிந்துகொள்ளுமிடம்

அது என்
கனவுகளின் திறவுகோல்
கவிதைகளின் உற்பத்தித்தானம்
என் வாழ்வில்
விரல்விட்டெண்ணக்கூடியதாய்
விடிந்திருந்த பொழுதுகள்

அது
அடுத்தவர்களால்
புரிந்துகொள்ளமுடியாத
சோகங்களின் தொகுப்பு
ஆன்மாவின்
அழுகையால் மட்டுமே
ஆறுதல்படுத்தக் கூடிய
வாழ்வியல் துன்பம்

தொலைந்து போனதற்காய்
துயர்கொள்ளல்
உடைந்துபோனதற்காய்
உருக்குலைதல் எல்லாம் - உலக
விலைகொள் பொருட்களுக்கு
மட்டுமான விதிகளல்ல
விலைபேசமுடியாத
இதயத்தின் தொலைவுகளுக்கும்
இதுபொருந்தும்

மன்னித்துக்கொள்
என்னால்
மரணத்திலும் - அவளை
மறக்கமுடியாது
உனக்குப்
புதிராக இருக்கும்

வலி
வந்தவனுக்குத்தான் தெரியும்
வார்த்தைகளால்
புரியவைக்கலாம் என்பது
பொய்
 த.ஜீவராஜ்

Saturday, October 11, 2008

இது இறுதி அழைப்பு


உன்நினைவலைகள்
ஒன்றோடொன்று
உரசிக்கொண்டதில்
என் நெஞ்சுக்குள்
தீப்பிடித்துக்கொண்டது

Thursday, October 09, 2008

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008,திருகோணமலை,இலங்கை.

 Thampalakamam
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008, திருகோணமலை, இலங்கை. தொடர்பான புகைப்படத் தொகுப்பு ஜீவரத்தினம் தங்கராசா அவர்களின் உதவியுடன் தம்பை நகர் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளது.
http://thampainakar.blogspot.com/

Tuesday, October 07, 2008

நினைவுகளில் போராட்டம்...



ஞாயிற்றுக் கிழமை
மழைபொழியும் மாதம்
ஊசிகுத்தும் குளிர்
உடம்பை மூடிய
தடித்த போர்வை
இறுக்கி மூடிய
என்னறைக் கதவுகள்
கண்ணுக்குள்
உறக்கமும், விழிப்பும்
நெஞ்சுக்குள்
இன்றைக்கு ஒதுக்கி வைத்த
நேற்றைய வேலைகள்
நினைவுகளில் போராட்டம்
எழும்புவதா ?
இன்னும் கொஞ்சம்
படுப்பதா ?
 த.ஜீவராஜ்


Monday, October 06, 2008

வாங்க பகிரலாம்

மருத்துவம்
வணக்கம்,
நலமா ?
தலைப்பில் சொன்னது போல் இது பகிரலுக்கான தளம். எனவே கேள்விகளோடு ஆரம்பிக்கிறேன்.

கணிதம் கற்று உயர்வாய்…



கணக்கு வரா தென்று
கவலைப்படும் மகளே
கருத்து ஒன்று சொல்வேன் நீ
கவனமாகக் கேளு

கணக்கு வராதென்று
கவலைப்பட்ட சிலபேர்
கணக்கில் மேதையாக
வந்த கதைகள் உண்டு

தெய்வம் நம்முன் தோன்றி
செல்வம் தருவதில்லை
முயற்சி என்றும் வாழ்வில்
இகழ்ச்சி அடைவதில்லை

கடுமையான உழைப்பில் நீ
கவனம் செலுத்த வேண்டும்
பெருமை உனக்கு வந்து
பேரும் புகழும் சேரும்

மனத்தைக் கணக்கில் வைத்து
மகிழ்ச்சியோடு கற்றால்
வருமே உனக்குக் கணக்கு
வாழ்வும் வளமும் பெறலாம்

இதயம் எதிலும் தோய்ந்தால்
ஏற்றமுண்டு மகளே
உதயமாகும் வாழ்வு இந்த
உண்மை புரிந்து பாடு

சாதனைகள் படைத்தோர் இந்தச்
சங்கதிகள் அறிவார் நல்ல
போதனைகள் கேளு இதைப்
புரிந்து கொண்டு பாடு

முயற்சி என்றும் வாழ்வில்
முடங்கிப் போவதில்லை
உயர்ச்சியுண்டு மகனே நீ
உணர்ந்து வெற்றி கொள்ளு

எண்ணும், எழுத்தும் வாழ்வை
ஏற்றங்காணச் செய்யும்
கண்ணின் மணியே நீயும்
கணிதம் கற்று உயர்வாய்.

கலாபூசணம் வே.தங்கராசா


Saturday, October 04, 2008

BLADDY WAR ..


வலை (சினி) வாசகர்களுக்கு என் வணக்கங்கள்....

நண்பர் (தோழர் என்றழைக்கப்போய் ஏதும் பிரச்சனையில் மாட்டாமலிருக்க) விஷ்ணு நம்மையும் இந்த தொடர்விளையாட்டில் மாட்டிவிட கொஞ்சநேரம் மோட்டைப் பார்த்துக்கொண்டு உக்காரவேண்டியதாய்ப் போயிற்று. நமக்கெல்லாம் கேள்வி கேட்டுத்தானே பழக்கம். இருந்தும் மனதில் பட்டதை பதிலாக்கி இருக்கிறேன் கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன்.

சினிமா என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது BLADDY WAR என்ற வாசகம்தான் அதனால் 8வது கேள்வி முதலாவதாக.............

###8. தமிழ் தவிர வேறு இந்திய உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய ஆங்கில சினிமாக்கள் பார்ப்பதுண்டு. மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேற்றுமொழிப்படங்கள் நேரங்கிடைத்தால் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த பொஸ்னியப் படம் ஒன்றில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வில் ஊனமுற்ற குழந்தை ஒரு காப்பகத்திலும் தந்தை சிறைப்பிடிக்கப்பட்டும் போக, இருவரும் மீள இணைவதற்கான போராட்டமே திரைக்கதை. படத்தினிடையில் அந்தப் பெண்குழந்தை சொல்வதாக வரும் வசனம் ‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...

###1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

கேட்டுப்பார்த்ததில் இரண்டுவயதில் என்றார்கள். பார்த்த படம் ‘நிறம் மாறாப் பூக்கள்’ யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில். நானெங்கே பார்த்தேன் அம்மாவும் அப்பாவும் படம் பார்க்க திரை தவிர்த்து மிச்ச எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அழுது அடம்பிடிக்காமல் சமர்த்துப் பையனாய் இருந்தேனாம். இன்னும் அந்தப் படம் நான் பார்க்கவில்லை. இருந்தும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம் (என்னதான் இருந்தாலும் முதல்ப்படம் அல்லவா?)
நினைவு தெரிந்து பார்த்த முதல்ப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான வியட்நாம் யுத்தம் சம்பந்தமான படம். பெயர் ஞாபகமில்லை.
என்ன உணர்ந்தீர்கள்?உணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..

###2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
மொழி, கதை ஊகிக்கக்கூடியது என்றாலும் கவிதைபோல இருந்தது படம்.

###3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது? எங்கே? என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன் ,வீட்டில் , #@$%^$#&^%*&$^%#

###4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நாயகன்,
மணிரெத்தினம் அவர்கள் கதைசொல்லிய விதம் வேலைக்குப்போக வெளிக்கிட்டாலும் ஒருமுறை உட்கார்ந்து பார்க்கச் சொல்லும். தவிர்த்து சலங்கை ஒலி, அன்பே சிவம், மௌனராகம், குணா, அழகி, இம்சையரசன் 23ம் புலிகேசி,சிறைச்சாலை, தவமாய்த் தவமிருந்து, பாலச்சந்தர் அவர்கள் சினிமா .........என்று நீண்டுகொண்டு போகிறது வரிசை.

###5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அரசியலா............. வேணாம் விட்டிடுங்க.

###5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்
‘என் கண்மணி இளமாங்கனி எனைப்பார்த்ததும் …’ ரொம்பப் பிடிச்ச பாட்டு. வெளிவந்தது 1978ல் என்கிறார்கள். ஆச்சரியப்படவைக்கிறது ஒலிப்பதிவு . பழைய படங்களில் வரும் பிரமாண்டக் காட்சிகளும் பிரமிக்கவைக்கும்.

###6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பத்திரிகை வாசிக்கையில் சினிமாச் செய்திகளையும் வாசிப்பதுண்டு. விரும்பிப் படிப்பது வேற்றுமொழி (ஈரானிய, ஆங்கில) படவிமர்சனங்களை (ஒருவேளை பார்க்க கிடைக்காமலேயே போகுமல்லவா?)

###7.தமிழ்ச்சினிமா இசை?
வேறுயார் இசைஞானிதான். ஜென்சியின் பாட்டு ரொம்பப்பிடிக்கும். இந்தி, ஆங்கில அல்பங்களும் விரும்பிக் கேட்பதுண்டு.

###9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)

###10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய விமர்சனங்களுக்கப்பால் நல்ல படங்களும் வரத்தான் செய்கிறது. நிறைய புதுமுகங்கள் வந்திருக்கிறார்கள். புதுமுயற்சிகள் செய்கிறார்கள் இருந்தும் சில வட்டங்கள் தாண்டி வெளிவர மறுக்கிறது தமிழ் சினிமா.

அண்மையில் ஒரு யப்பானிய படம் பார்த்தேன் இரண்டாம் உலப்போர் காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் வனவிலங்குக் காப்பக விலங்குகளைச் சுட்டுக்கொண்றுவிட உத்தரவிடுகிறது அரசு. குறிப்பிட்ட சரணாலயத்தில் உள்ள தாய் யானை இந்தக் கட்டளைக்கமைய சுடப்பட அதன் குட்டியைக்காப்பாற்ற யானைப்பாகனும் சில குழந்தைகளும் மேற்கொள்ளும் போராட்டமாக அமைந்திருக்கிறது திரைக்கதை. சலிப்பில்லாமல் இறுதிவரை ஒன்றித்துப் பார்க்க வைக்கிறது படம். நம்மவர்கள் வட்டந்தாண்டி வெளிவரவேண்டும். வரவேற்கக் காத்திருக்கிறோம்.

###11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள் செய்திகள் எதுவுமே பத்திரிகைகள் தொலைக்காட்சி இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நிகழ்வு எனக்கு ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது என நினைக்கிறேன். பார்க்கவேண்டியவையென குறித்துவைத்த படங்கள் நிறைய இருக்கிறது.சினிமா வாழ்வின் ஒரு அங்கம் அது வாழ்க்கையல்ல...தமிழர்களுக்கு என்ன ஆகும் ??????

இது ஒரு தொடர் பதிவென்று நண்பர் சொல்லி இருந்தார் இருந்தும், வலைக்குப்புதியவன் என்பதாலும் எனக்குத் தெரிந்தவர்கள் ஏலவே இத்தொடரில் இணைந்திருப்பதாலும் எனது தொடரை இத்துடன் முடிக்கிறேன்.

நன்றி விஷ்ணு, சினிமா தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு.....



த.ஜீவராஜ்

Friday, October 03, 2008

ஆடக சௌந்தரி

ஆடக சௌந்தரி

வரராமதேவன் என்ற சோழ மன்னன் திருக்கோணமலையிலுள்ள சுவாமி மலையின் தவப் பெருமையைப் புராண வாயிலாக அறிந்து கடல் கடந்து திருமலை வந்து சுவாமி மலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அமைக்கும் திருப்பணி வேலைகளைச் செய்து வந்தான் எனத் திருக்கோணாசலப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.

Tuesday, September 30, 2008

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார் ?

மீளவும் ஆரம்பித்திருக்கிறது
அடிமுடி தேடும் படலம்
முன்னையவற்றை விடவும் சற்று மூற்கமாக

யுத்த காலம்
ஒண்டிரண்டாய் உயிர்போகும்
உடமைகரியாகும்
எண்ணிக்கைபற்றிய கவலையன்றி
வேறேதும் இருக்கப்போவதில்லை
இழந்தவன் தவிர்த்து மற்றவர்க்கு

சண்டைகள் நடக்கும்
சிலநூறுபேர் சாவார்
கர்த்தால் வரும்
கடையடைப்பு ,எரிப்பு
இடம்,புலம் பெயர்வுகள் நிகழும்
பட்டினி மரணங்கள்
பாவையர் கதறல்கள்
பாரினை உலுக்கும் - இருந்தும்
அரியணை தொடர்ந்திடவேண்டி
அரவமின்றி இருப்பர்
அதிகாரத்தில் இருப்போர்

சண்டைகளுக்ககும், சத்தங்களுக்கும் நடுவே
சமாதானத்துக்கான போர்
சல்லடைபோட்டுத் தேடும்
யுத்தத்தின் முடிவை
ஆட்சிக்கால எல்லைக்குள்
அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலோடு
இத்தனைக்கும் அப்பால்
உறங்கிக்கொண்டிருக்கிறது உண்மை

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர்கள்
இறந்தவர்கள் மட்டுமே …பிளேட்டோ..


த.ஜீவராஜ்

சபிக்கப்பட்ட பரம்பரை…..


தன் வாழ்நாளின்
சந்தோச தரணங்களை
சிலிர்ப்போடு அசைபோடுவார்
அப்பப்பா – அது
அவராயுளின் அரைப்பகுதி

பாடசாலைக் காலம்வரை
பட்டாம்பூச்சி வாழ்க்கையென்று
மகிழ்வார் அப்பா

தவழ்ந்தது முதல்
வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்

தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை

நாளை
எனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….

 த.ஜீவராஜ்

Sunday, September 21, 2008

இரு பிரிவுகளாக அமைந்த ஆலய வழிபாடு, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்.....

Thampalakamam
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன.வரலாற்றுப் புகழ்மிக்க இக்கோயிலை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் கட்டினான் என்றும் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள "ஸ்வாமிமலை' என்னும் இடத்திலிருந்து ஆதிகோண நாயகர் திருவுருவையும் ஏனைய பரிவாரத் தெய்வங்களையும் மேளதாளத்துடன் கொண்டு வந்து இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என்றும் திருகோணாசலப் புராணம் கூறுகிறது.
.

Friday, September 12, 2008

ஆனந்தக் கண்ணீர்



இது என் இறுதிக்கட்டம்
வாழ்க்கைப் பயணத்திற்கு
வரவிருக்கும் முற்றுப்புள்ளி
ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள்
அடைக்கலமாகும் முன்
ஆண்டவன் தந்த
அரிய சில நிமிடங்கள்

கணவனுக்காக கண்ணீர் விட்டாள்
மனைவி
தகப்பனுக்காக அழுதன
பிள்ளைகள்
உறவுக்காக ஒருகூட்டம் உருகியது
கடனுக்காகவும், இன்னபிறவுக்குமாக
யார்யாரோ அழுதார்கள்

எனக்குத் ‘திக்’ என்றது
என் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று

எட்டடி தள்ளி
மெல்லிய விசும்பல்
விழி ஊன்றிப்பார்த்தேன்
என்வரவுப் பணத்தில்
ஏதோவோர் சிறுதொகையால் வளர்ந்த
ஏழைச்சிறுவன் இன்று
எஞ்சினியராய்

இப்போது
எனக்குள் நானே
அழுதுகொண்டேன் ஆனந்தமாக……

த.ஜீவராஜ்

Sunday, September 07, 2008

இப்போதெல்லாம் அவன்



தெருத்தெருவாய் ஓடித்திரிந்தான்
தினந்தோறும் பாடிமகிழ்ந்தான்
கண்ணாடிமுன் காலங்கழித்தான்
கடிதங்கள் எழுதி ஓய்ந்தான்
பாடங்கள் படிக்க மறந்தான்
படுத்தாலும் தூக்கமிழந்தான்
நண்பர்களுக்கு அவன்தான் நாயகன்
நக்கலடிப்பதற்கென்றுமானான்
எடுக்காத போணில் எல்லாம்
ஏதேதோ பேசிமகிழ்ந்தான்
துடிக்கும் மனதை அடக்க
துணிவின்றித் தொலைந்து போனான்
எடுக்கின்ற சபதமெல்லாம்
அடுத்தநாளே மறந்து போனான்
இத்தனையும் ஏதுக்கடா?
என்றேசுவோரை அடக்கி
என்றாவதொருநாள் ஏற்றுக்கொள்வாள்
அவளெனச் சொல்லி நின்றான்.
 த.ஜீவராஜ்

Wednesday, August 20, 2008

இடப்பெயர்வு



அவசரத்தில் அவிழ்க்காமல்
விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்
கோழியும் , குஞ்சும்

Wednesday, August 13, 2008

தம்பலகாமம்.க.வேலாயுதம்,திருகோணமலை,இலங்கை.

 Thampalakamam
91ம் அகவையில் தம்பலகாமம்.க.வேலாயுதம்
தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.

வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.

1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.

இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.

அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.

91ம் அகவையிலும் தமிழ்ப்பணி செய்து வாழும் செம்மலே நீ ஆதிகோணநாயகர் அருள்கொண்டு நீடுவாழி.

முத்தும் சென்னெல்லும் தேனும் விளைகின்ற
தத்தி நீர்வழியும் தம்பலகாமத்தில்
கத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்
தித்திக்கும் சுவையூட்டும் 'செந்தமிழே' நீ வாழ்க.

அவரது நூலுருவாக்கம் பெற்ற படைப்புகள்.
‘ரங்கநாயகியின் காதலன்’
{குறுநாவல்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,
திருகோணமலை.

இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையேயான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித்திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறது.

‘தம்பலகாமம்’ நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது ‘தமிழர் பட்டணம்’ என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சு ஒரு கணம் நிமிர்கின்றன.

வல்வை.ந.அனந்தராஜ்

தம்பலகாமம்.க.வேலாயுதம்{வாழ்வியல் ஆவணம்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,
திருகோணமலை.


எந்த அளவிற்கு அவர் மூலம் அவர் பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய தகவல்களை அறியமுடியுமோ,அந்த அளவிற்கு அறிந்து இங்கு பதியவைத்துள்ளோம். ‘வாழும்போதே வாழ்த்துவோம்’
கலாவினோதன், கலைவிருதன்,
கலாபூஷணம்
த.சித்தி அமரசிங்கம்.


தமிழ் கேட்க ஆசை
{கட்டுரைத் தொகுப்பு}
வெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம்,
தம்பலகாமம்.

தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 30 கட்டுரைகள் ‘தமிழ் கேட்க ஆசை’ என்று நூலுரு பெற்று வெளிவந்திருப்பதையும்,நூலாசிரியர் கெளரவிக்கப்படுவதையும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

க.துரைரெட்ணசிங்கம்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
திருகோணமலை.

த.ஜீவராஜ்

மனம் துடிக்கும்.....



நிலவு பிடிக்கும்
நிலவெறிக்கும் நாளில் வரும் –உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்
கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும்- நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்