Monday, October 06, 2008

கணிதம் கற்று உயர்வாய்…



கணக்கு வரா தென்று
கவலைப்படும் மகளே
கருத்து ஒன்று சொல்வேன் நீ
கவனமாகக் கேளு

கணக்கு வராதென்று
கவலைப்பட்ட சிலபேர்
கணக்கில் மேதையாக
வந்த கதைகள் உண்டு

தெய்வம் நம்முன் தோன்றி
செல்வம் தருவதில்லை
முயற்சி என்றும் வாழ்வில்
இகழ்ச்சி அடைவதில்லை

கடுமையான உழைப்பில் நீ
கவனம் செலுத்த வேண்டும்
பெருமை உனக்கு வந்து
பேரும் புகழும் சேரும்

மனத்தைக் கணக்கில் வைத்து
மகிழ்ச்சியோடு கற்றால்
வருமே உனக்குக் கணக்கு
வாழ்வும் வளமும் பெறலாம்

இதயம் எதிலும் தோய்ந்தால்
ஏற்றமுண்டு மகளே
உதயமாகும் வாழ்வு இந்த
உண்மை புரிந்து பாடு

சாதனைகள் படைத்தோர் இந்தச்
சங்கதிகள் அறிவார் நல்ல
போதனைகள் கேளு இதைப்
புரிந்து கொண்டு பாடு

முயற்சி என்றும் வாழ்வில்
முடங்கிப் போவதில்லை
உயர்ச்சியுண்டு மகனே நீ
உணர்ந்து வெற்றி கொள்ளு

எண்ணும், எழுத்தும் வாழ்வை
ஏற்றங்காணச் செய்யும்
கண்ணின் மணியே நீயும்
கணிதம் கற்று உயர்வாய்.

கலாபூசணம் வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment