Saturday, October 04, 2008

BLADDY WAR ..


வலை (சினி) வாசகர்களுக்கு என் வணக்கங்கள்....

நண்பர் (தோழர் என்றழைக்கப்போய் ஏதும் பிரச்சனையில் மாட்டாமலிருக்க) விஷ்ணு நம்மையும் இந்த தொடர்விளையாட்டில் மாட்டிவிட கொஞ்சநேரம் மோட்டைப் பார்த்துக்கொண்டு உக்காரவேண்டியதாய்ப் போயிற்று. நமக்கெல்லாம் கேள்வி கேட்டுத்தானே பழக்கம். இருந்தும் மனதில் பட்டதை பதிலாக்கி இருக்கிறேன் கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன்.

சினிமா என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது BLADDY WAR என்ற வாசகம்தான் அதனால் 8வது கேள்வி முதலாவதாக.............

###8. தமிழ் தவிர வேறு இந்திய உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய ஆங்கில சினிமாக்கள் பார்ப்பதுண்டு. மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேற்றுமொழிப்படங்கள் நேரங்கிடைத்தால் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த பொஸ்னியப் படம் ஒன்றில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வில் ஊனமுற்ற குழந்தை ஒரு காப்பகத்திலும் தந்தை சிறைப்பிடிக்கப்பட்டும் போக, இருவரும் மீள இணைவதற்கான போராட்டமே திரைக்கதை. படத்தினிடையில் அந்தப் பெண்குழந்தை சொல்வதாக வரும் வசனம் ‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...

###1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

கேட்டுப்பார்த்ததில் இரண்டுவயதில் என்றார்கள். பார்த்த படம் ‘நிறம் மாறாப் பூக்கள்’ யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில். நானெங்கே பார்த்தேன் அம்மாவும் அப்பாவும் படம் பார்க்க திரை தவிர்த்து மிச்ச எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அழுது அடம்பிடிக்காமல் சமர்த்துப் பையனாய் இருந்தேனாம். இன்னும் அந்தப் படம் நான் பார்க்கவில்லை. இருந்தும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம் (என்னதான் இருந்தாலும் முதல்ப்படம் அல்லவா?)
நினைவு தெரிந்து பார்த்த முதல்ப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான வியட்நாம் யுத்தம் சம்பந்தமான படம். பெயர் ஞாபகமில்லை.
என்ன உணர்ந்தீர்கள்?உணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..

###2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
மொழி, கதை ஊகிக்கக்கூடியது என்றாலும் கவிதைபோல இருந்தது படம்.

###3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது? எங்கே? என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன் ,வீட்டில் , #@$%^$#&^%*&$^%#

###4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நாயகன்,
மணிரெத்தினம் அவர்கள் கதைசொல்லிய விதம் வேலைக்குப்போக வெளிக்கிட்டாலும் ஒருமுறை உட்கார்ந்து பார்க்கச் சொல்லும். தவிர்த்து சலங்கை ஒலி, அன்பே சிவம், மௌனராகம், குணா, அழகி, இம்சையரசன் 23ம் புலிகேசி,சிறைச்சாலை, தவமாய்த் தவமிருந்து, பாலச்சந்தர் அவர்கள் சினிமா .........என்று நீண்டுகொண்டு போகிறது வரிசை.

###5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அரசியலா............. வேணாம் விட்டிடுங்க.

###5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்
‘என் கண்மணி இளமாங்கனி எனைப்பார்த்ததும் …’ ரொம்பப் பிடிச்ச பாட்டு. வெளிவந்தது 1978ல் என்கிறார்கள். ஆச்சரியப்படவைக்கிறது ஒலிப்பதிவு . பழைய படங்களில் வரும் பிரமாண்டக் காட்சிகளும் பிரமிக்கவைக்கும்.

###6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பத்திரிகை வாசிக்கையில் சினிமாச் செய்திகளையும் வாசிப்பதுண்டு. விரும்பிப் படிப்பது வேற்றுமொழி (ஈரானிய, ஆங்கில) படவிமர்சனங்களை (ஒருவேளை பார்க்க கிடைக்காமலேயே போகுமல்லவா?)

###7.தமிழ்ச்சினிமா இசை?
வேறுயார் இசைஞானிதான். ஜென்சியின் பாட்டு ரொம்பப்பிடிக்கும். இந்தி, ஆங்கில அல்பங்களும் விரும்பிக் கேட்பதுண்டு.

###9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)

###10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய விமர்சனங்களுக்கப்பால் நல்ல படங்களும் வரத்தான் செய்கிறது. நிறைய புதுமுகங்கள் வந்திருக்கிறார்கள். புதுமுயற்சிகள் செய்கிறார்கள் இருந்தும் சில வட்டங்கள் தாண்டி வெளிவர மறுக்கிறது தமிழ் சினிமா.

அண்மையில் ஒரு யப்பானிய படம் பார்த்தேன் இரண்டாம் உலப்போர் காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் வனவிலங்குக் காப்பக விலங்குகளைச் சுட்டுக்கொண்றுவிட உத்தரவிடுகிறது அரசு. குறிப்பிட்ட சரணாலயத்தில் உள்ள தாய் யானை இந்தக் கட்டளைக்கமைய சுடப்பட அதன் குட்டியைக்காப்பாற்ற யானைப்பாகனும் சில குழந்தைகளும் மேற்கொள்ளும் போராட்டமாக அமைந்திருக்கிறது திரைக்கதை. சலிப்பில்லாமல் இறுதிவரை ஒன்றித்துப் பார்க்க வைக்கிறது படம். நம்மவர்கள் வட்டந்தாண்டி வெளிவரவேண்டும். வரவேற்கக் காத்திருக்கிறோம்.

###11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள் செய்திகள் எதுவுமே பத்திரிகைகள் தொலைக்காட்சி இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நிகழ்வு எனக்கு ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது என நினைக்கிறேன். பார்க்கவேண்டியவையென குறித்துவைத்த படங்கள் நிறைய இருக்கிறது.சினிமா வாழ்வின் ஒரு அங்கம் அது வாழ்க்கையல்ல...தமிழர்களுக்கு என்ன ஆகும் ??????

இது ஒரு தொடர் பதிவென்று நண்பர் சொல்லி இருந்தார் இருந்தும், வலைக்குப்புதியவன் என்பதாலும் எனக்குத் தெரிந்தவர்கள் ஏலவே இத்தொடரில் இணைந்திருப்பதாலும் எனது தொடரை இத்துடன் முடிக்கிறேன்.

நன்றி விஷ்ணு, சினிமா தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு.....



த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

9 comments:

  1. ///ஜீவன்...‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...///

    இந்த படம் என்னையும் மிகவும் பாதித்த படம் நண்பரே ..

    ReplyDelete
  2. ///ஜீவன்..
    உணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..//

    மனதை ..மிக அதிகம் வேதனை அடைய செய்கிறது நண்பரே இந்த பதில் ..
    கண்டிப்பாக இதற்கு ஒரு விடிவு விரைவில் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் தினம் வேண்டும் நபர்களில் நானும் ஒருவனே

    ReplyDelete
  3. //ஜீவன்..
    மறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)//

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ...
    தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்ப்பார்கள் ...நீங்கள் ஆவதைப்பாருங்கள் ..

    ReplyDelete
  4. மிக நல்ல தகவல்களுடன் நல்ல ஒரு பதிவை எனது வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்டமைக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் ..நண்பரே ...

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  5. ///இறைவனிடம் தினம் வேண்டும் நபர்களில் நானும் ஒருவனே ///
    நானறிவேன் விஷ்ணு,
    காலம் பதில் சொல்லும், காத்திருப்போம்....

    ReplyDelete
  6. நன்றி விஷ்ணு
    என்னையும் இத்தொடரில் இணைத்துக்கொண்டமைக்கு....

    ReplyDelete
  7. ///உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ...
    தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்ப்பார்கள் ...நீங்கள் ஆவதைப்பாருங்கள்///

    நன்றி விஷ்ணு
    உங்கள் கருத்துரை உற்சாகம் தருகிறது

    ReplyDelete
  8. ///இந்த படம் என்னையும் மிகவும் பாதித்த படம் நண்பரே ..///


    வேறென்ன சொல்ல ///இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்///

    ReplyDelete