Thursday, August 02, 2012

கப்பல் துறை


கப்பல் துறை எங்கள் துறை
கன்னித் தமிழர் வாழ்ந்த துறை
கலம் செலுத்தி தமிழ் இளைஞர்
காவியம் படைத்த துறை


சரசோதி மாலை என்னும்
சாஸ்திர நூல் தந்த துறை
சரித்திரப் புகழ் வாய்ந்த
தம்பையின் கப்பல்துறை

பழம் பெருமை கொண்ட எங்கள்
பார் புகழும் தம்பை நகர்
வளம் பெருகச் செய்த துறை
வள மார்ந்தகப்பல் துறை

பதினோராம் நூற்றாண்டில்
பராக்கிரம பாகு என்பான்
கரந்துறைந்து வாழ்ந்த துறை
கழனி சூழ் கப்பல்துறை.

முத்துக் குளித்த துறை
முத்தமிழ் வளர்த்த துறை
வித்தகர் பலர் சேர்ந்து
வெற்றியுடன் வாழ்ந்த துறை.

பாண்டியன் ஆண்ட துறை
பல்கலையும் செழித்த துறை
மாண்புறு தமிழரன்று
மகோன்னதமாய் வாழ்ந்த துறை

அரசுகளின் போர் வெறியால்
அன்றழிந்த கப்பல் துறை
தரணியிலே சிறந்த துறை
தம்பை தந்த கப்பல்துறை

வளமார்ந்த எங்கள் துறை
வரலாற்றை நாமறிவோம்
உளமார்ந்த மகிழ்ச்சியுடன்
ஊர் பேரைப் போற்றிடுவோம்.

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment