Wednesday, October 02, 2013

பலதுறைகளிலும் சாதனை படைத்த கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு 'கடல்சூழ் இலங்கை கயபாகு மன்னன்' காலத்திலிருந்து மக்களால் பெரிதும் பேசப்பட்ட இடமாகும். இம் மன்னனின் ஏற்பாட்டில் கண்ணகியம்மன் விழா மிகச்சிறப்பாக ஆண்டுக்கொருமுறை கள்ளிமேட்டு 'வேள்வி வளாகத்தில்' நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

புகழ் பூத்த கலைஞர்களும் அண்ணாவிமார்களும் சுதேச வைத்தியர்களும் இந்தக் கள்ளிமேட்டைத் தாயகமாகக் கொண்டவர்களேயாகும். இவர்களில் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் மிகவும் பிரபலியமானவர். தனது தந்தையிடம் வைத்தியத் தொழிலை முறையாகக்கற்றுக் கொண்ட இவர் அந்தக் காலத்தில் சுதேச வைத்தியத்தில் மிகவும் பிரபலியம் பெற்றிருந்தார்.
1900 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பிறந்த இவர் கூட்டாம்புளியிலிருந்த பாடசாலையில் ஐந்தாந்தரம் வரை கல்வி கற்றார். தனது தந்தையாரான கந்தப்பர் அண்ணாவியாரிடமிருந்த வாகடங்களையும், புராண இதிகாசங்களையும் முறையாகத் தந்தையிடம் கற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பங்களில் தந்தையாரிடம் கர்நாடக இசைபற்றிய நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள அவர் தவறவில்லை. இதன் காரணமாக அவர்தனது பாடசாலைக் கல்வியை ஐந்தாந்தரத்துடன் இடைநிறுத்த வேண்டிய அவசியம் நேர்ந்தது.

கலைஞர் கணபதிப்பிள்ளை அண்ணாவியாரின் தந்தையாரான கந்தப்பர் அண்ணாவியார் தமிழ் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய அதே வேளை நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியும் வந்தார். இவரது நெறியாழ்கையில் உருவான 'விலாசம்' நாடகத்தில் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் தனது பதினெட்டாவது வயதில் மேடையேறினார். கள்ளிமேடு 'ஆலையடி வேள்வி வளாகத்தில்' மேடையேறிய இந்நாடகம் கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.

இதன் பின்னர் தந்தையின் வழிகாட்டலைப் பின்பற்றி கணபதிப்பிள்ளை அண்ணாவியார் நாடகங்களைப் பழக்கி மேடையேற்றத் தொடங்கினார். இவரது முதல் நாடகம் 'கோவலன் சரித்திரம்' 1924 ஆம் ஆண்டு தை மாதம் 'ஆலையடி வேள்வி வளாகத்தில்' மேடையேறியது. இந்நாடகம் மக்களின் ஏகோபித்த பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'சகுந்தலா' 'சிறுத்தொண்டர் சரிதம்' 'அசுவகுமார்' 'லலிதாங்கி' போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

இவர்கள் ஒரு நாடகத்தைப் பழக்க ஒரு வருடம் செல்லுமாம். இதற்கென பிரத்தியேகமாகக் கொட்டில்கள் அமைத்து அதில் பழக்குவார்களாம். நடிகர்கள் அனைவரும் சேர்ந்து ஒவ்வொருநாள் செலவையும் பொறுப்பேற்பார்களாம். நாடகம் முற்றிலும் இலவசமாகவே மேடையேற்றப்படுமாம். நாடகம் மேடையேற்றப்பட்ட பின்னர் அண்ணாவியாரும் நடிகர்களும் ஊருக்குள் செல்வார்களாம். பொதுவாக அண்ணாவியாருக்கு சால்வை பணம் முதலியவற்றை அன்பளிப்பாக வழங்குவார்களாம். நாடகம் மேடையேற்றப்பட்ட சந்தர்பங்களிலும் அன்பளிப்புகள் வழங்கப்படுமாம்.

தம்பலகாமத்தில் எப்பகுதியில் நாடகம் பழக்கப்பட்டாலும் அதிகமான நாடகங்கள் கள்ளிமேட்டு 'ஆலையடி வேள்வி வளாகத்திலேயே' மேடையேற்றப்படும். அக்காலத்தில் ஒருசில நாடகங்களே 'சிப்பித்திடல்' 'கூட்டாம்புளி' 'நாயன்மார்திடல்' போன்ற இடங்களில் மேடையேற்றப் பட்டன.
கலைஞர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் சிறந்த கைதேர்ந்த வைத்தியராகவும் விளங்கியதால் அவரிடம் வைத்திய உதவிகளைப் பெற்றவர்கள் அவரது வைத்தியத்திறமைகளைப் பாராட்டி 'கைமோதிரம்' 'மாடுகள்' போன்றவற்றையும் அன்பளிப்பு செய்ததாக அறியக் கூடியதாக உள்ளது.

தம்பலகாமத்தில் மட்டுமின்றி 'ஆலங்கேணி' போன்ற அயல்கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள கலைஞர்களை ஒன்று திரட்டி நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி மக்களைக் கவர்ந்த பெருமை கலைஞர் கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்குண்டு.

1921 காலப்பகுதியில் மதார் சாகீப் என்ற இந்தியக்கலைஞர் தம்பலகாமத்தில் நடைபெற்ற திருமண வைபவத்திற்கு கச்சேரி செய்வதற்காக வந்திருந்தார். மதார் சாகிப்புக்கு கரீம்பாய் என்ற அண்ணனும் சின்னையா சாய்பு என்ற தம்பியும் இருந்தார்கள். இந்தத் திருமண வைபவத்தில் மதார் சாகீப் ஆமோனியம் வாசித்தார். இவருடைய ஆர்மோனிய வாசிப்பு நமது கலைஞர் கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் அவரிடம் முறையாக ஆர்மோனியம் பழக ஆரம்பித்தார். இயல்பாகவே இவரிடம் காணப்பட்ட இசையார்வமும் பாண்டித்தியமும் மதார் சாகிப்புக்கு மிகவும் பிடித்திருந்தது.

இரண்டு வருடங்கள் இவரிடம் ஆர்மோனியத்தை முறையாகக் கற்றுக் கொண்டார். இதன் பின்னர் மதார் சாகிப்புவின் தம்பி சின்னையா சாய்பு தம்பலகாமம் வந்திருந்த பொழுது அவரைத் தன் வீட்டிலேயே தங்க வைத்து அவரிடமும் ஆர்மோனியத்தைக் கற்றுக் கொண்டார். இவ்வாறு முறையாக ஆர்மோனியத்தைப் பழகிய கணபதிப்பிள்ளை அண்ணாவியார் திருகோணமலை மாவட்டத்திலேயே சிறந்த ஆர்மோனியக் கலைஞராக பின்னாளில் பிரகாசித்ததை இங்கே சுட்டிக்காட்டுதல் சாலச் சிறந்ததாகும்.

இரண்டு கரங்களாலும் சரளமாக ஆர்மோனியம் வாசிக்கும் திறமை பெற்ற கலைஞராக இவர் தமது காலத்தில் விளங்கியது குறிப்பிடத்தக்கதாகும். தந்தை கந்தப்பர் அண்ணாவியாரிடமிருந்த வைத்திய வாகடங்களை தந்தை மூலமாகத் துறைபோகக் கற்ற இவர் சிறந்த சுதேச வைத்தியராகவும் பின்னாளில் பிரகாசித்தார்.  எனது பதினைந்தாவது வயதில் இவரது வைத்தியத் திறமையை நேரடியாக அறியும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'எக்ஸிமா'என்ற தோல் சம்பந்தப்பட்ட நோயால் பீடிக்கப்பட்டு நான் துயருற்ற போது 'யாமிருக்கப்பயமேன்?' என்றவாறு அந்நோயை விரட்டியடித்த பெருமை அவருக்குண்டு.

தமது இருபதாவது வயதில் சிவகாமிப்பிள்ளை என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். இதன் பயனாக இத்தம்பதிகளுக்கு சின்னநாச்சியார் ,பாக்கியம், தியாகேஸ்வரி ,சண்முகலிங்க,ம் மகாலிங்கம், சிவம்மா ஆகிய பிள்ளைகள் பிறந்தனர்.
கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் கலைஞர் திரு.க.மகாலிங்கம் ஆகிய இருவரும் தம்பலகாமத்தில் புகழ்பூத்த கலைஞர்களாக தந்தையின் வழி நின்றனர்.

இதே போல அவரது பேரப்பிள்ளைகளான 'சண் இசைக்குழு' ஸ்தாபகர் கலைஞர் திரு.ச.முருகதாஸ் வாய்பாட்டுக்கலைஞர் திரு.ம.நாகராசா போன்றோர் நமது பெருமைக்குரிய திரு.கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியாரின் வாரிசுகளாக அவரது பெருமைக்கு மேலும் மெருகூட்டும் வகையில் வாழ்ந்து வருகின்றனர்.

திரு.கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் தாம் வாழும்காலம் வரை சுதேச வைத்தியத் தொழிலையும், இசை, நாடகம் போன்ற கலைகளையும் உயிரென மதித்துப் போற்றி வளர்த்தமையை இன்றும் நினைவு கூர்ந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வேலாயுதம் தங்கராசா

உசாத்துணை.

1.நினைவில் நிற்கும் கலைஞர் வரிசையில். தம்பலகாமம் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை - கலாபூசணம் சித்தி அமரசிங்கம்.

2.ஆலங்கேணி என்னும் அற்புதக்கிராமம். - கலாபூசணம் திரு.ச.அருளானந்தம்.



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment