Sunday, October 27, 2013

சர்வதேச விருது பெற்ற ‘அடிவானம்’ குறும்பட இயக்குனர் பல்துறைக் கலைஞர் திரு.யோகராசா சுஜீதன்

அடிவானம்

‘விம்பம்’ சர்வதேச ஏழாவது குறுந்திரைப்படவிழா ‘இலண்டன்மா நகரில்’ 2011.நவம்பர் 11ஆந் திகதி மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தென்இந்தியாவில் சிறந்த படங்களான ‘சாமுராய்’ ‘காதல்' 'கல்லூரி’ 'வழக்குஎண் 18/9' ஆகிய படங்களை இயக்கிப் புகழ்பெற்ற திரு.பாலாஜீ சக்திவேல் அவர்களும் ஆய்வாளரும், அரங்கியலாளரும், நாடக விமர்சகருமாகிய திரு.யு. ராம்சுவாமி போன்ற பலரும் மத்தியஸ்தம் வழங்கினர்.
உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து போட்டிக்கு வந்திருந்த குறும்படங்களுடன் போட்டியிட்டு திருகோணமலை மண்ணின் படைப்பாக sky Creation நிறுவனத்தின் தயாரிப்பில், திரு.யோ.சுஜீதன் இயக்கிய 'அடிவானம்’ ( Horizon ) சிறந்த குறும்திரைப்படத்திறக்கான விருதைத் ( The Best Short Film Award -2012 ) தட்டிக்கொண்டது.  இக்குறும்திரைப்படத்தில் முதன்மை பாத்திரமாக நடித்த தம்பலகமத்தைச் சேர்ந்த ஜெகன் ஹரிஸ் அவர்களுக்கு சிறந்த குழந்தை நடிகர் Best Child Artist 2012 விருதும் கிடைத்தது. ‘அடிவானம்’ ஒரு கலைப்படைப்பு. ஏழை மக்களின் பசியையும் பொருளாதார நிலையினையும் ஆழமாக விமர்ச்சிக்கிறது. நாட்டில் ஒரு ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள மதிப்பை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது. ஒரு ஏழைச்சிறுவனின் உணர்வுகள் ஏக்கங்கள் தத்துவ ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
யோகராசா சுஜீதன்

இரண்டாவது இடத்தை இந்தியாவில் தயாராகிய ‘தமில்’ என்ற படமும் மூன்றாவது இடத்தை பிரஞ்சு நாட்டில் தயாராகிய ‘நகல்’ என்ற படமும் பெற்றுக்கொண்டன. இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய ஏழு குறும்படங்கள் லண்டனிலுள்ள ‘சட்டனநகரிலுள்ள’ தியேட்டரில் திரையிட்ட பொழுது ‘அடிவானம்’ மிகுந்த வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்பட விழாவின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்;ட தென்னிந்திய திரைப்பட இயக்குனர் திரு.பாலாஜீ சக்திவேல் அவர்கள் உரையாற்றும் போது  அடிவானம் இயக்குனர் திரு.யோகராசா சுஜீதன் அவர்களுக்கும், அதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய சிறுவன் ஜெகன் கரிஸ் அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு எனக் கூறியதுடன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு சிறந்த இயக்குனராக வர என்னாலான சகல உதவிகளையும் செய்வேன்'' எனக் கூறினார்.

 ஜெகன் கரிஸ்

தொடர்ந்து பேசிய அவர் “குறுகிய வசதி கொண்ட இன்றைய வாழ்க்கையில் இதற்கென பணமொதுக்கி இப்படிப்பட்ட ஒரு குறும்படத்தைத் தயாரித்திருப்பது சாதாரண விடயமல்ல. எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமல் தன் அறிவுக்கெட்டிய வகையில் இப்படி ஒரு படத்தைத் தயாரித்திருப்பதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன் “என்றார். அடிவானம் குறும்படத்தின் படப்பிடிப்பு படத்தொகுப்பை திரு.சி.தர்சன் அவர்களும் பின்னணியை திரு.ச.சிவச்செல்வன் அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

2012 ஆம் ஆண்டு உயர்கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே 'ஆற்றல்’ (Talent ) நிகழ்ச்சி கொழும்பில் ‘நேத்ரா’தொலைக்காட்சியின் அனுசரணையுடன் இடம் பெற்றது. இதில் குறும் திரைப்படப்பிரிவில் ‘அடிவானம்’ முதற்பரிசைத் தட்டிக் கொண்டது.

திருகோணமலையில் மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் விழாவில் 2013இல் ‘அடிவானம்’ திரையிடப்பட்டது. ‘அடிவானம்’ முதன் முதலாக அவுஸ்திரேலியாவில் ‘சிட்னி’ நகரில் திரையிடப்பட்டது. இவை தவிர சுஜீதனுடைய இரண்டாவது குறுந்திரைப்படமான ‘மாங்கா’வின் முன்னோட்டக் காட்சிகளும் அவருடைய இசையில் உருவான ‘பாடல்’களும் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்தப்படத்தின் தயாரிப்பு கதை திரைக்கதை, வசனம், இயக்கம் என்பவற்றுடன் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஒப்பனை, படத்தொகுப்பு என்பனவற்றை செய்ததோடு இந்தப்படத்தில் ஒரு பாத்திரமேற்றும் நடித்துள்ளார் திரு.யோ.சுஜீவன் அவர்கள்.

மாங்கா

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாச்சார பீட நாலாம் வருட மாணவனான திரு.யோ.சுஜீதன் அவர்கள் ஓவியம் வரைவதிலும் சிற்பங்கள் வடிப்பதிலும் திறமை பெற்றிருந்தார். சிறுவயதிலிருந்தே கதை ,கவிதை எழுதுவதிலும் ஆர்வம்காட்டி வந்தார். புகைப்படக்கலை ,படப்பிடிப்பு, படத்தொகுப்பு போன்றவற்றிலும் ‘கைதேர்ந்த கலைஞராக’ விளங்கினார்.

‘இதயக்கரம்’ என்ற அமைப்பினூடாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.இதுவே தனது வாழ்க்கை இலட்சியம் எனக்கூறும் அவர் தனது வளர்ச்சிக்கு தந்தையும், தாயும் தனது சித்தப்பா குடும்பத்தினரும், நண்பர்களும் அளித்த ஊக்கமும் உதவியுமே காரணம் என நன்றியறிதலுடன் கூறிக் கொள்கிறார். பல்துறைக் கலைஞராகிய அவரின் கனவுகள் நனவாக வேண்டும் எனப் பிராத்திப்போம்.

வேலாயுதம் தங்கராசா
தம்பலகாமம்.

Short Film Adivaanam(Horizon) with English Subtitles


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment