Friday, October 25, 2013

'தமிழ்ப்பாஷை' நூல் வெளியீடு

தமிழ்ப்பாஷை

இந்நூல் எழுநா, நூலகம் ஆகியவற்றின் கூட்டுவெளியீடாக கடந்த 19.10.2013 இல் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் "பகிர்வு" இலக்கியக்  குழுமத்தின் "முற்றத்துச் சந்திப்பில்" வெளியிடப்பட்டது.

தமிழ்ப்பாஷை நூலுக்கு கலாநிதி செ.யோகராசா அவர்கள் வழங்கியிருக்கும் முன்னுரையின் சிறுபகுதி ..


தமிழ்ப்பாஷை என்ற இந்நூல் முக்கியமாகப் பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றது. தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம்.

மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு நுணுகி நோக்குகின்ற போது தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான சில விடயங்கள் பற்றி இந்நூல் முதன் முதலாகப் பேச முற்படுவது புலப்படுபடுகின்றது. சுருங்கக்கூறின் ஈழத்தவரான தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப்பாஷை என்ற நூல் தமிழ்மொழி வரலாற்று உருவாக்கத்திலும், தமிழ் இலக்கிய வரலாற்று உருவாக்கத்திலும் முக்கியமான நூலாகும்.
கலாநிதி செ. யோகராசா
மொழித்துறை – கிழக்குப் பல்கலைக்கழகம்

'தமிழ்ப்பாஷை'  என்ற கட்டுரை 1892 இல் சென்னையில் இருந்து வெளிவந்த விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வெளிவந்ததாகும். இதனுடன் அவரது மற்றைய படைப்புக்களான.
‘தத்தைவிடு தூது”
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
கோணை முத்துக்குமாரசுவாமி ஊஞ்சல்
வாகை மாலை
முதலான பிரபந்தங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பாஷை


தி. த. சரவணமுத்துப்பிள்ளை

இந்நூலின் ஆசிரியர் திரு.சரவணமுத்துப்பிள்ளை  (1865 - 1902) இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி என்ற புதினத்தை 1895 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டவர்.

தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். கனகசுந்தரம்பிள்ளையின் சகோதரரான இவர் தமது தமையனாரைப் போலவே தத்துவ சாஸ்திரத்தில் B.A  பட்டம் பெற்று தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர்.

தமிழ்ப்பாஷை, தி.த. சரவணமுத்துப்பிள்ளை கடமைபுரிந்த சென்னை துரைத்தனப் பாடசாலைத் தமிழ்ச் சங்கத்தில் அன்னார் ஆற்றிய உரையின் நூல்வடிவமாகும். இவர்1902 இல் தனது 37வது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழ்ப்பாஷை - மறுபதிப்பு - 2013

எழுநா, நூலகம் அகியவற்றின் கூட்டுவெளியீடாக கனடா சுஜன் சண்முகசிங்கம் அவர்களின் பொருளுதவியில் வெளிவந்திருக்கும் இந்நூல் சற்குணம் சத்தியதேவனால் பதிப்பிக்கப்பட்டது.

திருகோணமலையின் முக்கிய கலை , இலக்கியச் செயற்பாட்டாளரும், வரலாறு, மற்றும் வழக்காறுகள் குறித்து ஆழமான தேடலும், அக்கறையும் உள்ள திரு.சற்குணம் சத்தியதேவனது இம் முயற்சி பாராட்டுக்குரியது.

 'தமிழ்ப்பாஷை'  நூல் வெளியீடு
 'தமிழ்ப்பாஷை'  நூல் வெளியீடு
 'தமிழ்ப்பாஷை'  நூல் வெளியீடு
(நன்றி  - படங்கள் - விழாக்குழு)

கவிஞரும், இலக்கிய சமூக செயற்பாட்டாளருமான தி. பவித்திரன் நிகழ்வை தொடக்கி வைக்க,  'தமிழ்ப்பாஷை'  நூல் அறிமுகத்தை மு. மயூரன் அவர்கள் செய்ய, வெளியீடும் ஏற்பும்  சத்யன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து பேராசிரியர் சிவத்தம்பியும் சில நினைவுகளும் என்ற தலைப்பில் யதிந்திரா அவர்களின் உரையும், பின்னர் திருகோணமலையின் பிரதேச இலக்கியப்போக்கு எனும் தலைப்பிலான கலந்துரையாடல் திருமலைநவம் அவர்களின் தொடக்க உரையுடன் நிகழ்ந்தது. பத்மபிரஷன் நிறைவுரை நிகழ்த்தினார்.
 த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. தொகுத்து வழங்கியமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆரவாரமின்றித் தமிழ் வளர்க்கும் உங்கள் திறன், பொறாமைப்படவைக்கிறது. தமிழ்நாட்டில் இது சாத்தியமில்லை. வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) சென்னை

    ReplyDelete
  3. Thanks Dr.
    naan Sathyathevanai paaraddukiren.. thodarka avauaJ pani.
    Kernipiththan

    ReplyDelete
  4. ஒரு முக்கிய நூல் பற்றிய பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete