Tuesday, August 27, 2013

நாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்

 திசவீரசிங்கம்

திரு.மாசிலாமணி அவர்களுக்கும் வீராசி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த
நாடகக்கலைஞர் திசவீரசிங்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகக் கடமையாற்றியவர். தம்பலகாமம் ‘நடுப்பிரப்பந்திடலில்’தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

நாடகத்துறையில் மிகுந்த அனுபவம் மிக்க இவர் முற்போக்கானசிந்தனையாளன்.  தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற என்னையும் எனது சினேகிதர்களாகிய திரு.ச.மனோகரலிங்கம், திரு.க.சின்னராசா , திரு.சி.குணரத்தினம் போன்ற கலையார்வம் மிக்க மாணவர்களையும் ஒன்றாக இணைத்து 'கொலைகாரன்',‘சுமதி எங்கே?’ ,‘தூக்குத்தூக்கி’ போன்ற சமுக நாடகங்களை அரங்கேற்றினார்.
இவர் ‘மேடையமைப்பு’, ‘ஒப்பனை’,  ‘நவீனமுறைகளைக் கையாளுதல்’ ஆகியவற்றில் மிக நுணுக்கமான ஆற்றல்பெற்றவராக விளங்கினார். சண்டைப் பயிற்சிகளை தத்துவ ரூபமாகப் பழக்கும் ஆற்றலும் இவரிடம் காணப்பட்டது.

இந்த இரு நாடகங்களில் “சுமதி எங்கே?’ என்ற சமுக நாடகம் ‘நாயன்மார்திடலில் உள்ள வைரத்தடி ஆலய வளாகத்தில்’ இதற்கென பிரத்தியேகமாக அமைக்பட்ட மேடையில் சிறப்பாக மேடையேறி தம்பலகாமம் இரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றது.
இந்த நாடகத்தில் கதாநாயகனாக நானும் கதாநாயகியாக திரு.ச.மனோகரலிங்கமும் வில்லனாக திரு.க.சின்னராசாவும் சிறப்பாக நடித்து மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டோம். இந்த நாடகத்தின் இயக்குனரைப் பற்றி மக்கள் பெரிதும் சிலாக்கியமாகப் பேசிக்கொண்டனர்.

இதில் வில்லனாக நடித்தவர் துப்பாக்கியுடன் இரசிகர்கள் மத்தியிலிருந்து வந்ததையும் துப்பாக்கி முழங்கியதும் கதாநாயகன் இரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு துடித்ததையும் கண்டு இரசிகர்கள் மெய்சிலிர்த்தனர்.

தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்ட ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’ ‘சாம்ராட் அசோகன்’ ‘சோக்கரடீஸ்’ ‘இராசராசசோழன்’ ஆகிய நாடகங்களில் கதாநாயகன் பாத்திரமேற்று நடிக்கும் சந்தர்பம் எனக்குக் கிடைத்தது.இந்த பாத்திரங்களில் நான் மிகச்சிறப்பாக சோபித்ததற்கு எனது நாடகக் குருவாக விளங்கிய திரு.திசவீரசிங்கமே மூலகாரணமாக இருந்தார்.

பாடசாலைக்கு வெளியே அவர் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் இந்நாடகங்களுக்கான காட்சிகளை அவருடன் இணைந்து நடித்துப் பழகியதால்தான் எனது நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.

நாடகக்கலைஞர் திரு.திசவீரசிங்கம் தம்பலகாமத்தின் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக விளங்கினார்.அவரது கலைப்படைப்புகள் இன்றும் இரசிகப்பெருமக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

வேலாயுதம் தங்கராசா



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. anpin thanka!
    naam valum nadkalil namathu kirhmththin sirappai aavanappaduthal sirantha muyatsi. intha muyatch paraddappada vendum.
    Dr. we have to document these valuable and historical events. Try to bring into book form. Now I am sending forms to enrolled as members in Tamil Sangam.If I get about 150 members, then I can publish our members' books. to become a member is to send a letter with Rs.100 as membership fees. On the other hand lifelong member fees is 1000. My dream is to publish our members books. If I get 100,000 then no need to collect funds to organize cultural events.Unfortunately Thanka is confined to bed. Anyhow I have confidence to fulfill my dream.
    I congratulate your efforts.
    Kernipiththan

    ReplyDelete