Thursday, August 29, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5

குளக்கோட்டன்

திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு முன்னரும், பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் செயதுங்க வீரவரராஜசிங்கன் (கைலாயமாலை கூறும் செயவீரசிங்கை ஆரியன் ) வன்னியர்களை அடங்காப் பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான். இவர்களில் மாமுகன் என்னும் வன்னியன் வெருகல், தம்பலகாமம் என்பவற்றைக் கைப்பற்றியாளச் சென்றான் என வையாபாடல் மூலம் அறியக்கிடக்கிறது.(1)

இதனைத்தொடர்ந்து வரும் குளக்கோட்டன் காலத்தில் திருகோணமலை மாவட்டம் நாலு பற்றுக்களாக நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.
1.திருகோணமலைப்பற்று.
2.கட்டுக்குளப்பற்று (நிலாவெளி சார்ந்த பிரதேசம்)
3.கொட்டியாரப்பற்று.(மூதூர் சார்ந்த பிரதேசம்)
4.தம்பலகாமப் பற்று என்பன

குளக்கோட்டன்

இவை தனியான சுயாட்சி அலகுகள் என்பதற்கு அவை கொண்டிருந்த நில, நீதி , தண்டனை தொடர்பான அதிகாரங்களே சான்று பகருகின்றன. இவையனைத்தும் திருக்கோணேஸ்வர ஆலயத்திருப்பணிகள் இடையறாது நியமப்படி நடைபெற வேண்டும் என்பதையும், அவ்வேளைகளில் ஆலயப் பணியாளர்கள் ,சாதாரண மக்கள் என்பவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.(2)

இவ்வன்னிப ஆட்சி 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் திருகோணமலையைக் கைப்பற்றும் வரை தொடந்தது. இதில் திருகோணமலைப்பற்று, கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்று ஆகிய மூன்று வன்னிபங்களும் சுதந்திரச் சிற்றரசாகச் செயற்பட கொட்டியாரப்பற்று சிலகாலங்களுக்கு கண்டி அரசின் மேலாண்மையை ஏற்றிருந்தது.

திருக்கோணேச்சரம் - 1935
திருக்கோணேச்சரம் - 1935
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போத்துக்கீச வரலாற்றாசிரியர் குவைறோஸ் அடிகளார்   கீழைத்தேசத்தில் வாழ்கின்ற இந்துக்களின் ரோம் என்று குறிப்பிடும் திருக்கோணேச்சரம் கி.பி 1624 இல் போத்துக்கீச தளபதி கொன்ஸ்ரன்டைன் டிசா என்பவனால் கொள்ளையடித்து,இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்நிகழ்வு பற்றி முன்னமே அறிந்துகொண்ட அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர்.

தமது உயிரைப் பணயம் வைத்து மூல விக்கிரகமான கோணேஸ்வரரை இரகசியமாக காடுகள் வழியே எடுத்து வந்து தம்பலகாமம் மேற்கு மலைத்தொடரில் உள்ள கழனி மலைச்சிகரத்தில் வைத்து பூசித்து வந்தனர்.இதனால் இம்மலை சுவாமி மலை என்று அழைக்கப்படுகிறது.

சுவாமி மலை
சுவாமி மலை
பின்னர் கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து தம்பலகாமம் கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது. அன்றுமுதல் தம்பலகாமத்தில் இருந்த சிவாலயம் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயமாக மாற்றம் பெற்றது.

தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்

அதேவேளை திருக்கோணேச்சரமும் சைவப்பெருமக்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக வழிபாடியற்றப்பட்டு வருகிறது. போத்துக்கீசர் முற்றாக அழிக்க நினைத்த ஆலயம் அழிவில் இருந்து மீண்டெழுந்து திருகோணமயில்  திருக்கோணேச்சரமாகவும் தம்பலகாமத்தில் ஆதி கோணநாயகர் ஆலயமாகவும் இரு ஆலயங்களாக பரிணமித்திருக்கும் வரலாறு ஆச்சரியம் தருவதாய் இருக்கிறது .
   
த.ஜீவராஜ்
 தொடரும்.....



ஆதாரங்கள்

1. வன்னியர் - பேராசிரியர்.சி.பத்மநாதன்
2. வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன் 2003



மேலும் வாசிக்க

   வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. 
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Dear Dr
    A wonderful article. I have already read these. The world should know our heritage and culture. Our forefathers were brave people. They safeguard our history. Thanks to them.You are doing wonders.
    Kernipiththan.

    ReplyDelete