Friday, May 15, 2009

திருக்கோணமலையின் தெய்வீகச் சிறப்பு

திருமலை
இந்த நில உலகத்தில் உச்சமான உயரத்தில் சிவபிரான் உமாதேவியோடு உறையும் மகா மலைத்தலம் கைலாயம். கடலின் மேல் மட்டத்தில்
இருந்து 22028 அடி உயரத்தில் இமய மலையின் உச்சியில் பார்வதி சமேதரரான சிவபெருமான எழுந்தருளி உள்ள கைலாய மலை உள்ளதென வரலாறு கூறுகின்றது.இறைவன் ஆதிசேடன், வாயுதேவன் இவர்களின் பலப்பரீட்சை காரணமாக கைலாய மலையின் சிகரங்களில் ஒன்றை இலங்கையின் வட கடலில் விழச் செய்து தென் கைலையாகிய திருக்கோணமலை என்ற திருப்பதியை உருவாக்கித் தந்தான் எனப் பக்திபூர்வமாகச் சைவ மக்கள் நினைவு கூருகின்றனர்.
திருக்கோணமலைத் தலத்தின் தெய்வீகப் பெருமையை ஒரு பிராமணன் மூலம் அறிந்து வரராம சோழன் வந்து கோயில் கட்டினான் எனத் திருக்கோணாசலப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது. அந்தணன் கூற்றைக் கேட்டு அகமகிழ்ந்துவகை கொண்டு முந்தையோர் எறிந்த வெற்பில் மொய்க் கதிர்குலத்து வேந்தன் மந்திரமனைய பொற்றோள் வரராம சோழ மன்னன் வந்திங்கு கோயில் கட்டும் திருப்பணி செய்யலானான். வரராம தேவசோழர் திருமலை வரும்படலம், திருப்பணி செய்படலம் என்று திருக்கோணாசலப் புராணத்தில் நூற்றுக்கணக்கான செய்யுள்களைக் கொண்ட இரண்டு அதிகாரங்கள் இருந்தும் திருமலைக் கோணேஸ்வரர் ஆலயத்தை வரராம தேவ சோழன் கட்டியதாக இன்றுவரை யாரும் கூறவில்லை. காரணமென்ன? வரராமதேவ சோழன் கோயிலைக் கட்டி வழிபாட்டு ஒழுங்குகளைச் செய்ததுடன், அவர் பெயர் மறைந்து விட்டது.

தந்தையைப் போல் தானும் ஒரு பெரிய சிவாலயம் அமைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த இளவரசன், தந்தை திருமலையில் செய்யும் திருப்பணி வேலைகளைப் பார்த்து மகிழ்ந்திருந்த வேளை, தம்பலகமத்தில் ஒரு பெரிய ஆலயம் அழிந்து கொண்டிருப்பதைக் கேள்வியுற்ற குளக்கோட்டன், உடனே படைகளுடன் அங்கு விரைந்து கோயிலைப் புதுப்பித்துக் கட்டினான். கோயில் தயாரிப்புக்கென ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்களைத் திருத்தினான். இந்த வயல்வெளிக்கு நீர்பாய்ச்சக் கந்தளாய்க் குளத்தையும் அமைத்தான் ஆயினும் நெற்செய்கை சிறக்க ஒரு சமயம் மழையும் இன்னொரு சமயம் வெயிலும் வேண்டுமே என்ன செய்வது? என்று குளக்கோட்டன் யோசித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் வந்த குரு வசிட்ட மகரிஷியிடம் மழை, வெயிலைக்கோரிப் பெறக்கூடிய வழிபாட்டு முறையை தெரிவு செய்து தருமாறு வேண்டினான். ரிஷி சிவாகமம் முழுவதையும் துருவி ஆராய்ந்து உருவ - அருவக் கிரியை வழிபாட்டைச் செய்யுமாறு அருளினார். இந்த வழிபாடு இரு பிரிவாகக் கோயிலிலும் வெளியிலும் செய்ய வேண்டிய கிரியைகளை உடையது. வரராம தேவ சோழன் திருமலையில் கோணேஸ்வரத்தை அமைத்ததுடன், நின்று விட்டதைப்போல் அல்லாமல் தனையனான குளக்கோட்டன் தம்பலகமத்தில் கோயில் பராபரிப்புக்காக வயல் திருத்துதல், குளம் அமைத்தல் என்று தொடர்ந்து தர்ம நீர்ப்பாசனப் பணி புரிந்ததால், இளவரசன் குளக்கோட்டனின் பெயர் மிகப் பிரசித்தம் அடைந்திருந்தது.

கோணேஸ்வரர் ஆலயத்துக்குப் பறங்கியரால் ஏற்படப் போகும் தீர்க்க தரிசன உரையைக் கூறவந்தவர், முன்னே வரராமன் மூட்டும் திருப்பணியை என்று தந்தை வரராம தேவ சோழன் நூற்றுக்கணக்கான செய்யுள்களில் இரு படலங்களில் உள்ள திருப்பணியைக் கூறாது, பிரசித்தமான பெயர் உடைய தனையன் குளக்கோட்டன் பெயரில் முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியை என்று கூறியிருக்கலாம் என்றே எண்ண வேண்டி உள்ளது.
கோயிலைப் பறங்கியர் அழித்தால், பிறகு கோணேஸ்வர வழிபாடு என்ன முறையில் நடைபெறும் என்ற கேள்வி அந்தக் காலத்திலேயே எழுந்தபோது.......

மாந்தளிர் போல் மேனி உடைப்பறங்கி வந்து
மாகோணைப் பதியழிக்க வரும் அந்நாளில்
லேந்த தென்பாலக் கழனி மலை ஒன்று உண்டாங்
கீசனுக்கு ஆலயம் அமைத்துப் பின்பு
(கோணேசர் கல்வெட்டு)

என்று கூறும் கோணேசர் கல்வெட்டு, பின் இலங்கையை ஆளப்போகும் அரசுகளைப் பற்றிக் கூறிவிட்டு கழனி மலையில் கோணேஸ்வரரின் உருவைக் கொண்டு வந்து வைத்துப் பூசித்துக் கொண்டு இருக்கும்போது:

வணங்குமரன் பூசை முன் போல் நடக்கும் காலம்
மகாவிலங்கைப் பதியாளும் வாலசிங்கன்
இணங்கும் நவ ரெத்தினத்தால் பொன்னால் முத்தால்
இறைவனுக்கு ஆலயமங்கியற்றும் காலம்
சுணங்கலில்லை மானிடர்க்குத் துக்கமில்லைச்
சொல்லரிய போகமெல்லாம் தூய்த்து வாழ்வார்.
(கோணேசர் கல்வெட்டு)

என்கிறது. இந்த வாலசிங்கன் என்ற அரசன், உக்கிரசேன சிங்கனுக்கும், மாருதப்புரவீக வல்லிக்கும் மகனாக உதித்த வாலசிங்கன் பராய வயதை அடைந்து மதுரை நாட்டரசன் மகள் சமதூதியை மணந்து, கண்டியை அடுத்துள்ள செங்கடக நாட்டு மன்னனாக முடி சூடிக் கொண்டதும் ஜெய துங்கவரராச சிங்கன் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றான்.

உக்கிரசேன சிங்கன் உதவிய சிறுவனான
மைக்கிடு களிற்றுத்தானை வரராச சிங்கமன்னன்
மிக்க சீர் இலங்கை நாட்டில் விரி கதிர்ப்பரிதியோச்சிப்
புக்கமன்றவர்கள் போற்றப் பொருவிலா தரசு செய்தான்
(திருக்கோணாசலப் புராணம் தம்பைநகர்ப் படலம்)

திருமலைக் கோணேஸ்வரர் ஆலயத்தை 1624ஆம் ஆண்டு இந்து மக்களின் சித்திரை வருடப்பிறப்பன்று இடித்து அழிப்பதெனப் பறங்கியர் தளபதி கொனட்டாண்டீசா திட்டமிட்டு இருந்தான். பிரஸ்தாபக் கல்வெட்டுப் பாடல்கள்களில் கூறி இருந்ததுபோல், கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, இடிபட இருக்கும் கோயிலுக்குள் ஒரு இரவு புகுந்து, தாங்கள் வணங்கி வந்த கோணேஸ்வரரின் திரு உருவை எடுத்துக் கொண்டு, இரவிரவாக காட்டுவழியே தெற்கு நோக்கி ஓடித் தம்பலகமம் மேற்கு மலைத்தொடரில் உள்ள கழனி மலைச் சிகரத்தைக் கண்டு பிடித்து, அதில் கோணேஸ்வரப் பெருமானின் திருவுருவை வைத்துப் பூசித்து வந்தனர். அடர்ந்த மலைக்காட்டில் சுவாமிக்கு நைவேத்தியம் வைக்க அரிசி இல்லாமல் அந்த மலைக் காட்டிலுள்ள ஒரு வகைக் கிழங்கைப் பிடுங்கி அவித்துச் சுவாமிக்கு நைவேத்தியம் வைத்துத் தாங்களும் உண்டனர்.

தம்பலகாமம்
அந்தக் காட்டுக்கிழங்கு, கோணா மலைக் கிழங்கு என்ற காரணப் பெயரைப் பெற்றது. சுவாமியின் உருவை வைத்துப் பூசித்த மலைச்சிகரம் சுவாமி மலை என்றே அழைக்கப்படுகின்றது. இந்த மலை அடிவாரம் வரை பெரும்பான்மையினர் குடியேறி வாழ்வதாக தெரிகிறது. இந்து மக்களின் வழிபாட்டுக்குரிய சுவாமிமலைப் பகுதியின் மிகுதியை மீட்டெடுக்க வழி இல்லாது இருப்பது வருந்துவதற்குரியது. திட்டமிட்டபடியே பறங்கியர்கள் 1624 ஆம் ஆண்டு திருமலைக் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்து அழித்தார்கள். தம்பலகமத்தில் குளக்கோட்டனால் கட்டப்பட்ட கோணேஸ்வரர் ஆலயத்தையும் சமூகவிரோதிகள் அழித்தார்கள். திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து கோணேஸ்வரர் வழிபாடு அருகி மறைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்ட காலப்பகுதியில் செங்கடக நாட்டு மன்னர் ஜெயதுங்க வரராசசிங்க மன்னன் கனவில், கோணேஸ்வரப் பெருமான் தோன்றி இட்ட ஆணைக்கமைய, அம்மன்னனால் தம்பலகமம் கோயில் குடியிருப்பில் இருக்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம் நானூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்று ஸ்தல புராணம் பின்வருமாறு கூறுகின்றது.

கன்னல வேலி வரம்படுத்த கழனி சூழ்த்த தம்பைநக
ரென்னும் நாட்டில் இலங்கு மணிப் பொன்னாலயமும்
சொன்ன முறையிற்றான மைத்துத் தூய பூசை தேர்ந்திருந்தாள்
மன்னவ நீ செய்கென அருளி மறைந்தான் கோணமலை நாதன்
(திருக்கோணாசல புராணம் - தம்பை நகர்ப்படலம்)

குளக்கோட்டு மன்னர் உருவ, அருவ வழிபாடாக கோயில் பூசை வழிபாடுகள் நடைபெறச் செய்திருந்தது போலவே ஆலயம் அமைத்த ஜெயதுங்க வரராச சிங்கன் தொழும்பு முறையை நிரைப்படுத்தி முன் போலவே கிரியை வழிபாடுகள் நடைபெறச் செய்தான். திருக்கோணமலைக் கோணேஸ்வரர் ஒரு முறை பறங்கியரால் அழிக்கப்பட்டது. தம்பலகமத்தில் எழுப்பப்பட்ட கோணேஸ்வரம் இரு முறை அழிந்து மீண்டும் கட்டப்பட்டுள்ளது. அழித்தாலும் அழியாத ஒரு தெய்வீகச் சிறப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்றினையழிக்க ஒன்று தோன்றிய அற்புதத்தால்
இன்றைய உலகில் கோணைப்பதிகங்களுக்குவுமையுண்டோ
மான்கன்றினைக் கரத்தில் ஏந்தும் கடவுளின் கருணை வேண்டிவ்
சென்று போய்க் கோணைநாதன் சேவடி போற்றல் செய்வோம்
(திருச்சிற்றம்பலம்)

தம்பலகாமம்.க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Inthap pakkangal AAngilaththil moli peyarkkap pattu blog il ida vendiya onru.

    ReplyDelete