Wednesday, August 14, 2013

இயற்கை எழில் நிறைந்த தம்பலகாமம்

Thampalakamam

தம்பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து
தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்
தம்பலகாமம் என்னும் பெயரைப் பூண்டு எங்கள்
தாயகமாம் உழவர் குலம் தழைத்த நாடு
செம்பவளத் திருமேனி உடையோனான
ஜீவர்களை இரட்சிக்கும் கருணை வள்ளளல்
எம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு
இருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.


சிற்றூர்கள் ஓர் வளைவில் திடல் திடலாயத்
தெருக்களாற் தொடர்புற்றுத் தென்னை சூழ்ந்து
சிற்றாறு பலவாறாய்ப் பிரிந்து ஓடிச்
செந்நெல்லுக்கு நீர் பாய்ந்து தேங்கி நிற்கும்
வற்றாத தடாகங்கள் இவைகளிலே
வளர்ந்திருக்கும் தாமரைகள் செங்கழுநீர்
முற்றாகப் பரந்திருக்கும் பசுமைக் காட்சி
முழுவதிலும் மருத நில எழிற்கோலங்கள்

பொங்கிவரும் கந்தளாய் நீர் வயலில் பாயும்
புதுப்புனலால் நிறைகின்ற தடாகங்களில்
சங்கினங்கள் வயிறுளைந்து ஈன்ற முத்து
தாமரையின் இலைகிடக்கக் கண்டன்னங்கள்
தங்களது முட்டை என்று அடை கிடக்கும்
நிலவளமும் நீர்வளமும் நிறைந்த இவ்வூர்
மங்கையரும் ஆடவரும் சேர்ந்துழைத்து
வயல்வெளியில் நெல்விதைத்து மகிழும் நாடு

Thampalakamam

கோணேசர் கோயில்கொண்டிருப்பதாலே
கோயில் குடியிருப்பு அதற்கு அப்பால்
குணதிசையில் குஞ்சடப்பன் மாக்கைத்திடல்கள்
ஐயனார் நாயன்மார் திடல்களுக்கு
அண்மையில் நடுப்பிரப்பந்திடல் முள்ளியடி
வர்ணமேடு வன்னிச்சியார் கரைச்சைத்திடல்கள்
கண்ணகிக்கு வேள்வி செய்யும் கள்ளிமேடு
கடலோரம் சம்மாந்துறை சிப்பித்திடல்கள்

கூட்டங்கள் கூடியதால் கூட்டாம்புளி
கூட்டமாய்ப் பசு வளர்த்த பட்டிமேடு
காட்டு நிலமாயிருந்து பின் திருத்தி
கனதியாய்க் குடிசனங்கள் நெருங்கி வாழும்
மேடான புதுக்குடியிருப்பு பாலம்போட்டார்
மேற்கிலே குடியேற்றம் கப்பல்துறை
நெடிதகன்று சங்கிலித் தொடர்போலூர்கள்
நிறைந்துள்ள தமிழ்ஊரே தம்பலகாமம்.

Thampalakamam

கன்னல் வேலி வரம்புடுத்து கயல்கள் துள்ளும்
கழனி சூழ் தம்பலகாமம் வாழும் மக்கள்
ஆதியிலே இருந்துழவு செய்து நெல்லை
அமோகமாக விளைவிக்கும் அரும்பணியில்
சோதனைகள் அடுத்தடுத்து வந்தபோதும்
துயருற்று வருந்தாமல் தொடர்ந்துழைத்து
சாதனைகள் புரிந்து உலகோர் மெச்ச
தம்பலகாமத்துழவர் வாழ்தல் கண்டோம்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. அருமை. ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  2. Armaiyana kavi varikal atpotham
    Kernipiththan

    ReplyDelete
  3. Armaiyana kavi varikal atpotham
    Kernipiththan

    ReplyDelete