Thursday, February 23, 2023

ஊர்ப்பெயர் ஆய்வோடு ஒரு பயணம்


எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது. 

2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியது. விடுமுறை முடிந்து மீள பல்கலைக்கழகம் செல்வதற்கான பயணநாள்.  வீடு பிரிந்து செல்லும் அன்றைய பயணம் பெரும் சலிப்பைத் தருவதாக இருக்கும் என்ற எண்ணமே மனச்சோர்வைத் தந்தது. என்ன செய்வது நெருங்கி வரும் பரீட்சைகள் பற்றிய பயம் பின்னால் இருந்து உந்தித்தள்ள அரைமனதோடு அதிகாலை வேளையிலேயே பயணப்பொதிகளுடன் புறப்பட ஆயத்தமானேன். விடுமுறையில் படிப்பதற்காக எடுத்துவரப்பட்டிருந்த பக்கம் எதுவும் புரட்டப்படாத பாரம்கூடிய புத்தகங்களின் கனம் கையைப் பதம்பார்த்தது.

திருகோணமலைப் பேருந்து நிலையத்தில் நின்ற யாழ்ப்பாணத்திற்கான பேருந்து பல்கலைக்கழக மாணவர்களாலும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களாலும் மற்றும் சாதாரண பயணிகளாலும் நிறைந்திருந்தது. என்னுடன் சேர்ந்து பயணித்த பலரின் முகங்கள் வீடு பிரிந்த சோகத்தாலும், சோதனைச்சாவடிகள் பற்றிய பயத்தினாலும் இறுகியிருந்தது. சமாதான காலமென்றாலும் பாதைகளில் எதிர்ப்படும் பாதுகாப்புக் கெடுபிடிகள் பயணங்களின் சுவாரசியங்களை விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருந்த காலமது. அளவுக்கதிகமான பயணிகளுடன் அந்தரித்துக்கொண்டிருந்த பேருந்து நேரக்காப்பாளனின் ஞாபகப்படுத்தலின் பின் மெல்ல தனது பயணத்தினை ஆரம்பித்தது. 

சன நெரிசலில் உடல் பிதுங்கிக்கொண்டிருக்க யன்னல் ஊடாக கடந்துபோகும் இடங்களைப் பார்த்தபடியே என் நேரம் கரைந்துகொண்டிருந்தது. உவர்மலை, (இ)லிங்கநகர், அபயபுரச்சந்தி (உப்புவெளிச் சந்தி) என்று கடந்து அனுராதபுரச் சந்தியில் நின்ற பேருந்தில் பலர் ஏறிக்கொண்டார்கள். மகிந்தபுர, கன்னியா, வெல்கம் விகாரை (இராஜராஜப் பெரும்பள்ளி) என்று ஒவ்வொரு இடத்திலும் நின்று பயணிகளை ஏற்றிகொண்டு வந்த பேருந்து பன்குளம் ஊடாக வேகமெடுத்துச் சென்றுகொண்டு இருந்தது. தொடர்ச்சியாக நடந்த இன வன்முறைகளும், இடப்பெயர்வுகளும், குடியேற்றத் திட்டங்களும் எமது வாகனம் கடந்து செல்கின்ற இடப்பெயர்களில் கணிசமான மாற்றங்களை உண்டுபண்ணி இருந்தது. 

மொறவெவ (முதலிக்குளம்), மகதிவுல்வெவ (பெரிய விளாங்குளம்), கோமரங்கடவெல (குமரேசன்கடவை), ஹொரவப்பொத்தான (உறவுப்பெற்றாணை) என்று பேருந்து நடத்துனர் உரத்த குரலில் இடப்பெயரைக் கூவி பயணிகளை இறக்குவதும் ஏற்றுவதுமாக இருந்தார். திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிய தொண்ணூற்றைந்து கிலோமீற்றர் தூரப்பயணம் பெயர் மாறிப்போன ஊர்ப்பெயர்கள் பற்றிய நினைவுகளோடு கரைந்து போனது.

நன்றி 
சித்திரம் வைத்தியர் ரோமன் ஜெபரட்ணம்

எதிர்ப்படும் சோதனைச் சாவடிகளிலெல்லாம் பயணப்-பொதிகளுடன் ஏறுவதும், இறங்குவதும், அடையாள அட்டைதனை நீட்டியபடி வரிசைகளுக்குள் நெரிபடுவதுமாக இருந்த பயணம் ஓமந்தைச் சோதனைச் சாவடியுடன் ஒரு முடிவுக்கு வந்தது.  நீண்டநேர சோதனைகளுக்குப் பின்னர் பயணக்களைப்புடன் திருகோணமலையிலிருந்து நான் வந்திருந்த பேருந்திலிருந்து இறங்கி யாழ்ப்பாணம் கண்டிவீதியில் (A9) முகமாலை நோக்கிப் பயணப்பட ஆயத்தமாக இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன்.  இனி வரும் மூன்று மணிநேரம் முகமாலைவரை  நிம்மதியாகப் பிரயாணிக்கலாம் என்ற எண்ணமே சற்று ஆறுதல் தருவதாக இருந்தது.  

பெரும்பாலும் எந்தவூர் சென்றாலும் தனியாகப் பிரயாணிக்க நேர்ந்தால் பேருந்தில் செல்வதையே விருப்பமாகக் கொண்டிருக்கிறேன். அப்படியான பயணங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளனின் பயணக்குறிப்புகளுக்கு இணையான மனப்பதிவுகளை மிக எளிதாக என் மனதில் விதைத்துச் சென்று விடுகிறது என்பதே இத்தேர்வுக்கான காரணமாக இருக்கிறது. வாழ்வில் இவர்களை நாம் மீண்டும் சந்திக்க முடியுமா? என்று தெரியாத மனிதர்களுடனான பயணப் பழக்கங்கள் அலாதியானவை. எனது இருக்கைக்கு அருகில் யன்னலோரமாக இருந்த சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் எனது அன்றைய பயணத்திற்கான சிந்தனையைத் தூண்டிவிட்டார்.

தம்பி திருகோணமலையா? என்றபடி சற்று எனது பக்கம் திரும்பி ஒரு நீண்ட உரையாடலுக்கான அடித்தளத்தினைப் போட்டார் அவர்.

ஓம்.திருகோணமலையில் தம்பலகாமம் என்றேன் புன்னகைத்தவாறே நான்.

என்ன! தம்பலகாமமோ? என்ர  தேப்பன் ஒரே சொல்லுவார் தம்பலகாமத்துத் தயிரையும், சோறையும் மறக்கேலாது எண்டு என்றார் உற்சாகமாக.

எப்போதும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் நம்மையோ, நம்மூரையோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களையோ புகழ்ந்து பேசும்பொழுது ஒருவகை உற்சாகம் நம்மையும் அறியாமல் பற்றிக்கொள்வது வழமையல்லவா? எனக்கும் அப்படித்தான். பயணக்களைப்பெல்லாம் மறைந்து அவருடன் உரை யாடுவதற்கான ஆர்வம் அதிகரித்தது. இருவரும் பரஸ்பரம் குடும்ப விபரங்கள், உள்நாட்டு நடப்புகள், உலக விவகாரங்கள் என்று எங்களை மறந்து கதைத்துக் கொண்டிருந்தோம். சுவாரசியமான உரையாடல்களுக்கு நடுவில் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவர் போல தம்பி உங்கட ஊரிண்ட பேர் தம்பலகமமா? இல்ல தம்பலகாமமா?| எனக் கேட்டதோடு நின்றுவிடாமல் அவ்வாறு கேட்டத்திற்கான காரணத்தையும் கூறினார். தனது தந்தை தம்பலகாமம் என்று சொல்லு கின்றபோதிலும் தான் வாசித்த பல செய்தித்தாள்களில் தம்பலகமம் என்றே எழுதப்பட்டிருந்ததால் இந்தச் சந்தேகம் ஏற்பட்டதாக கூறினார். அத்துடன்  நின்றுவிடவில்லை. நல்ல காலம் பாத்தியளே! ஞாபகம் வந்திட்டுது. எண்டைக்-கெண்டாலும் இந்தச் சந்தேகத்தை உங்கட ஊர்க்காரர் யாரிட்ட எண்டாலும் கேட்கோணும் எண்டு இருந்தனான். இண்டைக்கு நீங்க வந்து மாட்டினியள் என்றார்.

பல வருடங்களாக இடப்பெயர் ஆய்வு பற்றி நான் தேடிச் சேகரித்த விடையங்கள் எல்லாவற்றையும் தம்பலகமமா? அல்லது  தம்பலகாமமா?  என்ற ஒற்றைவரிக் கேள்விக்குள் கேட்டுவிட்டிருந்தார் அவர். அமர்ந்திருந்த பேருந்தின் வேகத்தினைவிட அதிவேகமாக எனது எண்ணங்கள் இடப்பெயர் ஆய்வு பற்றி நான் சேகரித்திருந்த விடயங்களை அசைபோடத்தொடங்கியது. 

என்ன தம்பி ஊர்ப்பெயர கேட்டதும் வீட்டு ஞாபகம் வந்திட்டுதோ? சத்தத்தையே காணல? என்று அவர் அருகில் இருந்து கேட்டபோதும் அது கிணற்றுக்குள் இருந்து வரும் சத்தம்போல் இருந்தது எனக்கு. ஞாபகச் சுழல்களில் இருந்து விடுதலையாகி ஒரு மெல்லிய புன்முறுவலுடன் பதிலளிக்கத் தொடங்கினேன்.

எனது ஊர்ப்பெயர் சமகாலத்தில் இருவேறு விதமாக பயன்படுத்தப்படுவதை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன். தம்பலகமமா? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி இன்றுவரை எங்கள் ஊரில் பலரைப் பிரித்து வைத்திருக்கிறது. சிலர் தம்பலகாமம் என்றும் வேறு சிலர் தம்பலகமம் என்றும் முரண்பட்டு எழுதியும், பேசியும் வருகிறார்கள். இவர்களுக்கு நடுவில் எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் அரசின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் இந்த இடத்தின் பெயர் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நீண்டகால நிகழ்ச்சி நிரலின் கீழ் தம்பலகமுவ என்று குறிப்பிடப்பட்டு வருவதையும் அவருக்கு விளக்கமாகச் சொன்னேன்.

ம்ம்................ தம்பலகாமம், தம்பலகமம், தம்பலகமுவ ......... உங்கட ஊரின்ட பெயர் இப்படியே மாறிப்போய்விடுமா? என்று சந்தேகத்துடன் கேட்டார் அவர். இல்லை அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என்று சொல்லத் தைரியம் வரவில்லை எனக்கு. ஏனெனில் நான் அன்று கடந்துவந்த பாதை இதுபோன்ற பல ஊர்ப்பெயர் மாற்றங்களைப் பதிவுசெய்து வைத்திருந்தது. அனுபவம் தந்த படிப்பினை காரணமாக ஒரு நீண்ட பெருமூச்சுடன் உங்கட கேள்விக்கு காலந்தான் பதில் சொல்லும் என்றேன். அவர் என்னை விடுவதாக இல்லை. தம்பலகாமம் என்ற பெயரில அப்படி என்னதான் பிரச்சனை ? என்று எங்கள் உரையாடல் களத்தினை ஓய்வெடுக்கவிடாமல் தொடர்ந்தார். வேறென்ன காமம்தான் பிரச்சனை என்றேன். புருவங்களைச் சுருக்கிப் புரியாமல் பார்த்தார் அவர். இன்றுள்ள பலர் காமம் என்பதனை இடத்தின் ஈற்றுப்பெயராக ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறார்கள். காமம் என்ற சொல் பாலுணர்வு சம்பந்தமானதாக, அதுவும் பொதுவெளியில் நாகரிகம் கருதி பயன்படுத்தக்கூடாத சொல்லாக மாறிப்போன அவலமே இதற்கெல்லாம் காரணம் என்றேன். 



காமம் என்ற வடிவத்தில் மக்கள் செறிந்து வாழும் ஊர்களைக் குறிக்கும் வழக்கம் இன்று தமிழ்நாட்டில் இல்லையென்பதையும் ஆனால் இலங்கையில் உள்ள பல சிற்றூர்களின் பெயர்களில் அது இன்றும் நிலைத்திருப்பதையும் விளக்கிக் கூறியதோடு இவ்வகையான இடப்பெயர்கள் தனித்துவ அடையாளம் கொண்டவையாகவும், இலங்கைத் தமிழர் வரலாற்றின் தொன்மையை நிலைநாட்டும் உறுதியான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டவையாகவும் இருப்பதைக் குறிப்பிட்டேன். 

மதியத்துக்குப் பின்னான விரிவுரைகளில் தூக்கக்கலக்கத்துடன் இருக்கும் மருத்துவபீட மாணவனைப் போலிருந்த அவரை உற்சாகப்படுத்தி உரையாடலில் உள்ளிழுக்க விரும்பினேன். அந்த நோக்குடன் உங்களுக்குத் தெரிந்த இலங்கையில் உள்ள காமம் என்ற ஈற்றுப்பெயருடன் முடிவடையும் இடப்-பெயர்களைப் பட்டியலிடுங்கள் பார்க்கலாம் என்றேன். சொன்னதுதான் தாமதம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம்,  முன்னர் வேலை செய்த இடங்களான முல்லைத்தீவு, மன்னார் முதலிய இலங்கையின் பல பிரதேசங்களில் இருக்கும் காமம் என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்களை  பாடசாலைச் சிறுவனின் உற்சாகத்துடன் பட்டியலிடத் தொடங்கினார். அந்த இடங்களில் அவர் சந்தித்த மனிதர்கள், சுவாரசியமான சம்பவங்கள், ஆலயங்கள், தலவரலாறு, திருவிழாக்கள், பயண அனுபவங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்று ஒவ்வொரு இடத்தினைப்பற்றியும் மீட்டுப் பார்ப்பதற்கு நிறைய ஞாபகங்கள் அவரிடமிருந்தது. அவர் காட்டிய உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது.

அவருக்குமட்டுமல்ல எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. கொடிகாமம், வலிகாமம், வீமன்காமம், பனங்காமம், அம்பகாமம், தம்பகாமம், கதிர்காமம், இறக்காமம், சாகாமம், பழுகாமம், உறுகாமம் என்று காமம் என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த பல இடப்பெயர்கள் இருக்குமென்று நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. கைவசம் இருந்த சிறிய குறிப்பேட்டில் எனக்குத் தெரிந்திராத பெயர்களைக் குறிப்பெடுத்துக் கொண்டேன். அன்றிருந்த நாட்டு நிலமையில் திருகோணமலையைத் தவிர்த்து ஏனைய பிரதேசங்களுக்கு நான் பயணித்திருக்கவில்லை. ஆனால் இலங்கையில் பல மாவட்டங்களிலும் இருக்கும் காமம் என்ற ஈற்றுப்பெயர்  கொண்டமைந்த இடங்களைத் தேடித் தொகுத்திருந்தேன். அத்துடன் அவ்வூர்கள் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளும் எனது சேகரிப்பில் இருந்தது.

காமம், காமம் என்று ஊர்ப்பெயர்களை இருவரும் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு வந்த சந்தோசத்தில் அருகில் இருப்பவர்களை மறந்திருந்தோம். முன்னிருக்கையில் இருந்த வயதான நபரும், எதிர்ப்பக்கத்தில் இருந்த நடுத்தர வயதுப்பெண்மணியும் அடிக்கடி திரும்பி எங்களிருவரையும் முறைத்துப் பார்ப்பதை அப்போதுதான் அவதானித்தேன்.

நல்லவேளையாக முறிகண்டிப் பிள்ளையார் எம்மைக் காப்பாற்றினார். பேருந்து நிறுத்தப்பட்டதும் இருவரும் இறங்கி பிள்ளையாரை வணங்கிவிட்டு மதிய உணவருந்தச் சென்றோம். ஒரு இருபது நிமிட நேர இடைவெளிக்குப் பின் மீண்டும் எமது பயணம் ஆரம்பித்தது. மதியநேர உணவு தந்த மயக்கம் மெல்ல மெல்ல கண்ணைச் செருகுவது போலிருந்தது. அவர் என்னை விடுவதாக இல்லை. நாங்கள் பட்டியலிட்ட ஒவ்வெரு ஊர்ப்பெயரும் எப்படி வந்தது என்று அவர் வினவிக்கொண்டே வந்தார். 

எமது உரையாடல் மிகச்சுவையாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு இடப்பெயரையும், எனது தேடல்களையும் அவரது அனுபவங்களையும் கொண்டு அலசினோம். என்னைவிட அவர்தான் மிகுந்த சந்தோசத்திலிருந்தார். இனப்பிரச்சினை தீவிரமடையாத காலத்தில் அவர் இலங்கையின் பெரும்பாலான இடங்களுக்குச் சென்றிருந்தார். அதனால் ஒரு அனுபவப் பெட்டகமே என் அருகிலிருந்து உரையாடிக்கொண்டிருப்பது போல இருந்தது. 

பண்டைய இலங்கைத்தமிழர் வரலாறு தந்த போதை மதியச்சாப்பாட்டின் பின் இருவருக்கும் உருவான நித்திரையை முற்றாக விரட்டிவிட்டிருந்தது. பேருந்து ஆனையிறவுப் பாலத்தினூடாக மிதமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. வீதியின் இருமருங்குகளிலுமிருந்து கடற்பரப்பின் மீதாக வீசிய மெல்லிய ஈரலிப்புடன் கூடிய காற்று ஒரு புத்துணர்வைத்தந்தது. இருக்கையில் அமர்ந்தபடி பலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். ஒருசிலர் யன்னல் வழியாக உப்பளங்கள் இருந்த வெளியையும் ஆங்காங்கே தெரியும் யுத்தம் தந்த வடுக்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழி நெடுகிலும் நாங்கள் இருவரும்தான் உரையாடிக் கொண்டிரு த்தோம். 

தொடர்ந்து கதைத்துக்கொண்டு வந்ததாலோ என்னவோ கொஞ்சம் பசியும் தாகமும் மெல்ல எட்டிப்பார்த்தது. அது அவருக்கும் இருந்திருக்கும் என நினைக்கின்றேன். இருக் கையின் கீழ் இருந்த அவரது பெரிய பயணப் பொதியிலிருந்து சில சிற்றுண்டிப் பொட்டலங்களையும், வீட்டிலிருந்து நிரப்பிக் கொண்டுவந்த தண்ணீர் போத்தல் களையும் எடுத்தார் அவர். எனது வாய் ஊறுவதற்கு முன்பாகவே அவற்றில் சிலதை எனது கைகளில் திணித்துவிட்டு முறிகண்டியில் உங்களுக்காக வாங்கினேன் என்று சிரித்த முகத்துடன் கூறினார். எனக்குத்தான் குற்ற உணர்வாகப்போய்விட்டது. வழக்கம்போல முறிகண்டியில் வெறுங்கையுடன் ஏறியிருந்தேன் நான்.

எல்லாம் சரிதான் தம்பி. இந்த ஊர்ப்பேரெல்லாம் பழங் காலத்தில இருந்து நம்மட ஊர்ப்பேரா இருக்கெண்டு கேக்க சந்தோசமாகத்தான் இருக்கு. ஆனா உங்கட ஊர்ப்பேர உப்படி இரண்டு விதமா பாவிக்காம இருக்க ஏதும் முயற்சிகள் செய்தனிகளோ? என்று மீண்டும் உரையாடலை ஆரம்பித்தார் அவர்.

நல்லவேளையாக அப்பப்பா அடிக்கடி கூறிவந்த ஆலய நிகழ்வொன்று ஞாபகத்திற்கு வந்தது. 1980 களில் ஆதிகோண நாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இடம்பெற்ற வேளை கும்பாபிஷேக மலர் அச்சிடும் போது ஊரின் பெயர் தம்பலகமமா? அல்லது தம்பலகாமமா? என்ற மேற்படி சர்ச்சை எழுந்தது. இதன்போது ஆலய நிர்வாகசபையினர் மறைந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை(1) அவர்களின் உதவியினை நாடினர். அவர் வலிகாமம், பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம் எனும் பெயர்களை மேற்கோள்காட்டி தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார். இந்த நிகழ்வுடன் சம்மந்தப்பட்ட சிலர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் தம்பலகாமம் என்பதே சரியான ஊர்ப்பெயர் வடிவம் என்பதை நிறுவியதற்குச் சாட்சியாக(2) இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்வு கும்பாபிஷேக மலர் வேலையை முடிவுறச் செய்ததேயொழிய ஊரில் இருந்த ஊர்ப்பெயர் தொடர்பான முரண்பாடுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்று அவரிடம் கூறினேன்.



பேருந்து ஆனையிறவு வெளியினைத் தாண்டிப் புதுக்காட்டுச் சந்தி, இயக்கச்சி, பளையூடாக நகர்ந்துகொண்டிருந்தது. உரையாடல் கவனிப்பில் இருந்து விலகி யன்னலுக்கூடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். திடீரென உதுதான் தம்பி என்ர சீதன வீடு என்று தனது மனைவியின் வீட்டினைக் காட்டினார். ஆர்வத்துடன் பார்த்தேன். பிரதான பாதைக்கருகாக இருந்தது அந்த இடம். வாகன வேகத்தில் கணநேரக் காட்சியாக மனதில் பெரும் சலனத்தை உருவாக்கிச் சென்றது அது. வளவின் மதில் முழுவதும் உடைந்து வாசல் பகுதியில் மாத்திரம் ஒரு சிறிய பகுதி மதிலும் அதில் துருப்பிடித்த கதவின் ஒருபாகமும் இருந்தது. வீட்டின் ஒரு பகுதி முற்றாக உடைந்து போயிருந்தது. மறுபகுதி அத்திவாரத்துடன் வெடித்து இரு பகுதியாக பிளந்திருத்தது.

யுத்தமும் சமாதானமும் மாறிமாறி வந்த காலப்பகுதிகளில் இடிந்துபோன வீடுகளும், பாழ்பட்டுப்போன பயிர் நிலங்களும், மனதளவில் மரணித்து உடலால் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களும், சீர்குலைந்துபோயிருந்த வழமைகளும் சாதாரணமாகிப் போயிருந்தது எங்களுக்கு. இருந்தும் அதுவரை அருகில் இருந்து அளவளாவிக்கொண்டிருந்த நண்பரின் வீட்டைக் கண்ட அந்தக்கணம் இதயம் கனத்துப்போனது. இழப்பின் வலியை கண்களில் சுமந்திருந்த அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. மெல்ல அவரது கையொன்றினைப் இறுகப் பற்றிக் கொண்டேன்.

வேலைவாய்ப்புக்காக, வசதிக்காக, உயர்கல்விக்காக என்று எத்தனையோ காரணங்களுக்காக உலகில் மனிதர்கள் நாளாந்தம் தங்கள் சொந்த வீட்டை விட்டு பிரிந்து செல்கிறார்கள். ஆனால் வன்முறை காரணமாக தம் சொந்த வீட்டை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டவர்களின் துயரம் தனியானதாக, தணியாததாக இருக்கிறது. பளையில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் வாடகை வீட்டில் மாறிமாறிக் குடியிருக்கும் நண்பரின் நிலையை அவர் என்னிடம் முழுமையாக விபரிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அனுபவித்ததைப் புரிந்துகொள்வதில் அப்படி என்ன இடர்பாடு இருந்து விடப்போகிறது.

வீடு திருத்த எடுத்த லோன் இன்னும் கட்டி முடியலடா தம்பி ஆனா கடைசியா நடந்த யுத்தத்தில இந்த வீடு இடிஞ்சு போயிற்று என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது இறுகப்பற்றி இருந்த கைகளுக்கூடாக இழப்பின்வலியும், ஒருவித இயலாமையும் சேர்ந்து உஸ்ணமாகப் பரவிக்கொண்டு இருந்தது.

முகமாலை வந்ததும் எல்லோரும் அவரவர் பயணப் பொதிகளைத் தூக்கிக்கொண்டு சோதனைச் சாவடி வரிசைகளில் தங்களைத் திணித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களிருவரும் அவசரப்படாமல் நிதானமாக இறங்கி எதிர்ப்பட்ட எல்லாவிதமான சோதனைகளுக்கும் முகம்கொடுத்து யாழ்ப்பாணம் செல்வதற்குத் தயாராக இருந்த ஒரு சிற்றூந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.

சிற்றூந்து பயணிகளாலும், அவர்களது சத்தங்களாலும் நிறைந் திருந்தது. நாங்கள் இருவரும் அருகருகான இருக்கைகளில் அமைதியாக அமர்ந்திருந்தோம். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. நீடித்த மௌனத்திற்குப் பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறே பேசத்தொடங்கினார் அவர்.

கனகாலத்திற்குப் பிறகு நிம்மதியாக பிரயாணம் செய்திருக்கிறன் தம்பி. வவுனியாவில் ஏறின உடனே வீட்டு ஞாபகம் வந்திடும். அந்த வீட்டில கலியாணம் கட்டின புதிசில இருந்து பிள்ளைகள் பெருசா வரும் வரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் படம் மாதிரி மனத்தில ஓடும். பிறகு பளையில யன்னனுக்குள்ளால தெரிகிற உந்த உடைஞ்சுபோன வீட்டைப் பாத்ததும் பிறசர் கூடிப்போய் தலையெல்லாம் விறைச்சு மயக்கம் வாற மாதிரி இருக்கும். கதைச்சிட்டே வந்ததால இண்டைக்கு தப்பிற்றன் என்றார் அவர். எங்களுடைய இடப்பெயர் ஆய்வு தொடர்பான  தொடர்ச்சியான உரையாடல் அவரது எண்ணங்களை பழைய துன்பவியல் நிகழ்வுகளுக்குள் மூழ்க விடாமல் கொஞ்சமேனும் ஆறுதல் படுத்த உதவியிருக்கிறது என்பது புரிந்தது. 

பேருந்து கொடிகாமம், மிருசுவில், மீசாலை ஊடாக சாவகச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தது. நண்பர் நிதானமாக இறங்குவதற்கு ஆயத்தமாக தனது பயணப் பொதிகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினார். நான் அவருக்கு உதவிக் கொண்டிருந்தேன். உங்கட ஊர்ப்பெயர் வருகிற மாதிரி ஏதும் பழைய கல்வெட்டுக்கள் இல்லையா தம்பி என்று வினாவினார் அவர். விடைபெறுகின்ற சமயம் எதிர்மறையாக இல்லை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. நம்பிக்கையுடன் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றேன் நான். புரிந்ததுபோல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். பேருந்திலிருந்து இறங்கி விட்ட பின்பும் நீண்டநேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவர் இறுதியாகக் கேட்ட கேள்வி மட்டும் மனத்தில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த நீண்ட பயணம் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நாவற்குழி, கைதடி, அரியாலை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த என்மனதில் அன்றைய உரையாடல் நிகழ்வுகள் மீளமீள தோன்றி மறைந்து கொண்டிருந்தது. 

தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது தேடல் தொடர்ந்தது. சோர்வில்லாமல் தேடிக்கொண்டிருந்த எனக்கு தம்பலகாமம் தொடர்பான சாசன ஆதாரம் 2005 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கிடைத்தது. எனது வாழ்நாளில் அந்தக் காலப்பகுதி அவ்வளவு மகிழ்ச்சிக் குரியதாய் இருக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்வில் மருத்துவபீடத்தின் கனதியான இறுதிக் கட்டச் செயற்பாடுகள் பாரிய மன அழுத்தத்தை உருவாக்கியிருந்த வேளையது. அத்துடன் நானும், என்னுடன் உடன்பிறந்தவர்கள் இருவருமாக ஒரே சமயத்தில் மூன்றுபேர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தமையால் வீட்டிலும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. இவற்றுடன் அதுவரை நாட்டில் நிலவிவந்த சமாதானச் சூழல் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கி அரசியல் வானில் யுத்த மேகங்கள் சூழ்ந்த ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி வந்த நாட்கள் அவை.

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் என் அளவற்ற மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தது அந்தக் கட்டுரை. யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலிச் சந்தியில் நான் வழமையாக தொலைத்தொடர்பு கொள்ளும் நிலையத்தில் உற்சாகத்துடன் அந்த கட்டுரையை மீண்டும், மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன். அக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசனம்) என்னும் உப தலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு என்ற அக்கட்டுரை கொழும்பிலுள்ள எனது நண்பர் ஒருவரின் உதவியினால் தொலைநகலாக கிடைக்கப்பெற்றிருந்தது. 


பலமுறை வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரை இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னால் தம்பலகாமம் என்ற எங்களது ஊர்ப்பெயரினை கல்வெட்டு ஆதாரத்துடன் ஆவணப்படுத்தி இருந்தது. அத்தோடு நின்றுவிடாமல் தம்பலகாமத்தை தமிழர்களின் வீரபட்டினமாக கொண்டாடி இருந்தது அந்தக் கட்டுரை. தலைகால் புரியாத உற்சாகத்தில் முதலில் அப்பாவிடம் தொலைபேசியில் விபரம் சொன்னேன். உரையாடல் முடிந்த பின் அப்பாவின் சந்தோசமும் என்னுள் தொற்றிக்கொள்ள இன்னும் பலரிடம் கூறி மகிழ வேண்டும் என்ற ஆசை உருவானது. முதலில் ஞாபகத்திற்கு வந்த முகம் எனது A9 பயணவழி நண்பர்தான். ஆனால் அவர் சாவகச்சேரியில் இருந்தார். கடந்த காலங்களில் இருமுறை யாழ் வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக வந்தபோது சந்தித்திருக்கிறேன். அவரது வீடு தொடர்பான விபரங்கள் அனைத்தும் விசாரித்து வைத்திருந்தேன். ஆனால் வீட்டில் அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இப்போது கால்கள் துறுதுறுத்தது. இருந்தும் அந்தப் பயணத்தில் ஒரு சிக்கலிருந்தது. யாழ்ப்பாணத்தில் அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக துப்பாக்கிச் சத்தங்களும், கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றவண்ணமிருந்தன. அதற்காக வீதிகள் எல்லாம் வெறிச்சோடி இருந்தது என்று அர்த்தமில்லை. ஆனால் உயிர் வாழ்தல் தொடர்பில் ஒரு நிச்சயமற்ற தன்மை தோன்றி இருந்தது.

அன்று ஞாயிறுக்கிழமை ஆர்வக்கோளாறில் அகப்படும் யாரிடமாவது போய் 800 வருடத்துக்கு முந்தின கல்வெட்டில் தம்பலகாமம் என்ற பேர் வந்திருக்கிறது என்று கூறினால் இதை ஏண்டா என்னைக் கூப்பிட்டு சொல்லுறாய் என்று விரோதமாகப் பார்ப்பார்கள் என்ற பயம் மனதை உறுத்தியது. வரலாற்றுத் தேடலின் நுணுக்கமான சந்தோசங்களைப் புரிந்துகொண்ட ஒருவருடனேயே அந்த மகிழ்ச்சியை மனநிறைவுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். எனவே பயம் தடுத்தாலும் அந்தக் கல்வெட்டுத் தந்த பரவசம் எனது A9 பயணவழி நண்பரின் வீட்டை நோக்கி என்னைப் பயணப்பட வைத்தது. 

அவசரவேலை கெதியா திரும்பித் தருகின்றேன் என்ற வாக்குறு தியுடன் நண்பனின் உந்துருளியைக் கடன்பெற்று சாவகச்சேரி நோக்கிப் பயணமானேன். வழி நெடுகிலும் கடந்து போனவர்கள் முகங்களிலெல்லாம் யுத்தம் பற்றிய பீதி தெரிந்தது. காவலரண் பாதுகாவலர் ஒவ்வொருவரினதும் கைகளில் இருந்த துப்பாக்கிகள் குண்டு நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருந்தது. எதிரில் வரும் நபர்களில் எவர் கைக்குண்டை வீசுவார் அல்லது துப்பாக்கியால் சுடுவார் என்பது தெரியாததால் எதிர்ப்படும் எல்லோரினதும் நெஞ்சுக்கு குறிவைத்தபடி இருந்தது அவர்களது துப்பாக்கி. ஒவ்வொரு காவலரணையும் நெருங்கும் பொழுதும் தயார் நிலையில் உள்ள துப்பாக்கி நம்மை நோக்கி இருக்கிறது என்ற எண்ணமே நம் நெஞ்சைக் கூசச் செய்யும். காவலரணைக் கடந்த பின்னால் நம் முதுகு கூசும். 

ஒருவாறு காவலரண்களால் நிறைந்திருந்த வீதிகளில் இருந்து விடுபட்டு பரந்த செம்மணி வெளியூடாக பயணம் தொடர்ந்தது. இத்தனை கஸ்டங்களுக்குள்ளும் இப்படியொரு பயணம் தேவையா என்ற பெருங்கேள்வி எனக்குள்ளே எழுந்து மறையா மலில்லை. ஒருவகையில் பார்த்தால் வரலாற்றுத் தேடலும் ஒருவகைப் போதையே. நாம் தேடிச் செல்லும் விடயங்களில் பதிய தகவல்கள் கிடைக்கக் கிடைக்க  அது இன்னும் பல புதிய விடயங்களை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வரலாற்றைத் தேடிச் சென்றவர்களின் விபரங்களைக் கேட்கையில் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத் தென்படும். ஆனால் நாமே வரலாற்றுத் தேடல்கள் தரும் மனக்கிளர்சியையும் ஒருவகை நிறைவையும் அடையும் போதுதான் அதுதரும் போதையைப் புரிந்துகொள்ள முடியம். வரலாற்றின் சுவாரசிய முடிச்சுக்களைத் தேடி அவிழ்ப்பதும் அதனை ஆர்வமுள்ளோரிடம் பகிர்ந்து சந்தோசிப்பதும் தரும் இன்பம் இணையில்லாதது. வண்டிச் சக்கரத்தினைப்போல எனது எண்ணச் சக்கரமும் இடைவிடாமல் சுழன்றுகொண்டே இருந்தது. இப்படியே எதிர்ப்பட்ட எல்லா கண்டங்களில் இருந்தும் தப்பி சாவகச்சேரியில் உள்ள எனது பயண நண்பரது வீட்டினை நெருங்கி இருந்தேன்.

பத்திரமாக நான் எடுத்துவந்திருந்த தம்பலகாமம் கல்வெட்டு என்ற கட்டுரையினை எடுத்துக் கொண்டு அவரது வீட்டு வளவின் முன் வந்து சேர்ந்தேன். மிக அண்மையில் அந்த வீட்டில் ஒரு துக்ககரமான சம்பவம் நிகழ்ந்ததை அங்கிருந்த வீட்டுச் சூழல் புரியவைத்தன. அத்தனை தூரம் நான் சுமந்துவந்த சந்தோசமெல்லாம் கீழிறங்கி எங்கோ ஓடிவிட்டது போலிருந்தது.

வாசலில் இருந்த கதிரையில் ஒரு பெரியவர் நாளிதல் வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் நண்பரின் பெயரினைக் கூறி அவரது வீடா என்று தயக்கத்துடன் விசாரித்தேன். வாங்க தம்பி என்று வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவர். மேசையொன்றில் வைத்து விளக்குக் ஏற்றப்பட்டிருந்த படத்தில் இருந்தவரைப் பார்த்த எனக்கு செல்லொன்று தலைக்குள் வெடித்தது போலிருந்தது.



பெரியவரின் குரலுக்கு வீட்டுக்குள் இருந்து பதிலளித்தபடி வெளியில் வந்த பெண்மணி ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்தபடி நின்றிருந்தார். எனது ஊகிப்பின் படி அவர் இறந்த நண்பரின் மனைவி. தனக்கும் கணவனுக்கும் சொந்தமில்லாத இந்தப் பெடியன் யாராக இருக்கக்கூடும் என்ற கேள்விக் குறியோடு அவர் நின்றிருக்கக்கூடும். ஊகித்தது சரியாக இருந்தது. நீங்க அவருக்கு.....என்று வினாவினை முடிக்காமல் இழுத்தார் அவர். என்ன வகையில் தெரியும் என்பதனை அறிய கேட்கிறார் என்பது புரிந்தது. பிரயாணங்களில் பழக்கம், நல்ல நண்பர் என்று சொன்னேன்.

இந்த மனிசன் எல்லோருடனும் இப்படித்தான் நல்லா பழகும் என்று தொடங்கி தனது கணவரின் ஞாபகங்களை துக்கம் தொண்டையை அடைக்க கூறிக்கொண்டிருந்தார். இடையிடையே அவரது கணவர் பளையிலுள்ள வீட்டைத் திருத்துவதற்காக அடிக்கடி போய்வந்ததையும், காணியின் பின் வளவினை துப்பரவாக்கும் போது. மிதிவெடி ஒன்றில் அகப்பட்டதையும். அதனால் அவரது வலதுகால் முழங்காலுக்கு கீழ் அகற்றப்பட்டதையும். நீரழிவு நோயுள்ள அவர் வீட்டு வேலைகளை விரைவாக முடிக்கவேண்டி கால்காயம் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாததால் நுண்கிருமி இரத்தத்தில் பரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையும் கூறினார்.

இத்தனையும் மூன்று மாதங்களுக்கு முன் நான் விடுமுறையில் திருமலை சென்றிருந்தபோது நாங்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே நிகழ்ந் திருந்தது. மனித வாழ்வினை யுத்தம் தனது கோரப்பற்களால் எப்படியெல்லாம் அவலத்துக்குள்ளாக்கி இருக்கிறது என்பதனை நேரடியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

கணவரைப் பிரிந்த சோகத்தினைச் சொல்லி அழுது முடித்திருந்த அவரிடமிருந்து விடைபெற்று வாசலுக்கு வந்தேன். கொஞ்சம் நில்லும் தம்பி என்றபடி அவசர அவசரமாக உள்ளே சென்ற அவர் எனது கையில் சிறிய நினைவு மலரைத் திணித்தார். அது நான் தேடிவந்த எனது நண்பரின் 31 ஆம் நாள் நினைவு மலர்.

வாகனத்தில் ஏறும்போது எனது கைகளில் இரண்டு கல்வெட்டுக்கள் இருந்தது ஒன்று நண்பரிடம் காட்டுவதற்காக நான் கொண்டு வந்திருந்த தம்பலகாமம் கல்வெட்டு மற்றையது எனது நண்பரின் கல்வெட்டு. யாழ்ப்பாணத்தில் நினைவு மலரை கல்வெட்டு என்றும் அழைப்பார்கள்.

நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com


உசாத்துணை

 (1)  பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1899 - 1986)

யாழ்ப்பாண மாவட்டத்தின் மட்டுவில் என்ற ஊரினைச் சேர்ந்தவர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியவர். இவர் இத்துறைகளில் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இருபத்துமூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

 (2) 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தம்பலகாமம் தொடர்பான பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை தனது வாழ்வியல் அனுபவங்களுக்கூடாக வலைப்பதிவில் எழுதி இணையவெளியில் தம்பலகாமத்திற்கு என்று ஒரு இடத்தினை ஏற்படுத்தி இருந்தவர் மலைநாடான் என்ற புனைப்பெயரால் அறியப்படுகின்ற சிவஸ்ரீ நாகேஸ்வரக்குருக்கள் கஜேந்திரசர்மா அவர்கள். இன்றைய நிலையில் எழுத்தாளனாக, பத்திரிகையாளனாகப்; பல பரிணாமங்களை எடுத்திருக்கும் அவர் தம்பலகாமம் இடப்பெயர் தொடர்பில் பண்டிதமணி அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை இவ்வாறு தனது வலைப் பதிவில் பதிவேற்றி இருந்தார்.

தம்பலகமம் என்பது சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில் எழுந்தபோது மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள் பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம் எனும் பெயர்களை மேற்கோள்காட்டி தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார். அதைவிடவும் தம்பலகமம் என பெயர் விளித்துவருங்கால் அது பின்னாட்களில் சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

https://maruthanizal.blogspot.com




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. அருமையான விளக்கமும் தெளிவும்….🙏🏻

    ReplyDelete
  2. உங்களுக்குள் இருக்கும் வரலாற்றுத் தேடல் மிகச் சிறப்பு.அதைவிட பேருந்து நண்பரூடாக நீங்கள் அளவலாவிய விடயங்கள் அனைத்தும் சுவாரசியம் மிக்கதாகவும்,இடையிடையே நகைச்சுவை உணர்வமிக்கதாகவும் இருந்தது.நண்பரை தேடி பல இன்னல்களுக்கு மத்தியிலும் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சென்றபோது ,அங்கே துன்பகரமான நிகழ்வு இடம்பெற்றிருந்த சம்பவம் வாசிக்கும் எனக்கே கவலையை ஏற்படுத்தியது.அச்சமயம் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இருப்பினும் நீங்கள் கூறவந்த விடயத்தை மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள்.உங்கள் ஆய்வுகள் என்றும் தொடரவேண்டும்.எனக்கு இன்னும் உங்கள் நூல்கள் கிடைக்கப்பெறவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான சம்பவங்கள் நேரடியாக சந்தித்தது என்பதால் சுவாரிசயமாக இருக்கிறதோ தெரியவில்லை. உங்கள் பெற்றோர் எனது அம்மாவிடம் நூலினை பெற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்தேன். விசாரித்துப் பார்க்கிறேன்.

      Delete