Tuesday, November 08, 2016

தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமுகத்தின் தொல்மரபுகள் பல அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிராமங்களில் இதுவுமொன்று. இலங்கையில் ஐரோப்பியரின் மேலாதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் இன்றைய தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேச செயலாளர் பிரிவுகள் மூன்றையும் உள்ளடக்கிய பிரதேசம் “ தம்பலகாமப் பற்று” எனும் சுயாட்சி அதிகாரமுள்ள வன்னிச் சிற்றரசராக இருந்தது.

வயலும், வயல் சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் தம்பலகாமப்பற்றின் சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து இயற்கை வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக்கொண்ட பூமியாக அது இருந்தது. போர்த்துக்கேயரின் வருகையின் போது நெல்லுற்பத்தியில் தன்னிறைவு கொண்டிருந்த இப்பிரதேசத்தில் இருபோக விதைப்புக்காக தம்பலகாமத்திலும், கந்தளாயிலும் 10,000 அவணம் நெல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வந்த காலங்களில் ஆட்சி, அதிகார, குடிப்பரம்பல் என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னர் கந்தளாய், கிண்ணியா என்பன தனித்தனியான பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரிந்தன. அதனை தொடர்ந்து 48 கிராமங்களை உள்ளடக்கிய 12 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட பிரதேசச் செயலகப் பிரிவாக தம்பலகாமம் அடையாளப்படுத்தப்பட்டது.

மிக நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தம், திட்டமிட்ட குடியேற்றங்கள், பாரிய உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள், படுகொலைகள், வன்செயல்கள் என்று பல்வேறு காரணிகளால் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இதுவுமொன்று.

2014 ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரங்களின் படி இங்கு 17153 முஸ்லீம்களும், 7785 சிங்களவர்களும், 6232 தமிழர்களுமாக 31170 பேர் வாழ்கின்றார்கள். 75% தமிழ் பேசும் மக்கள் வாழும் இப்பிரதேசத்தின் பெயர் சுமார் இரு தசாப்தங்களுக்கு முன்னர் ‘தம்பலகமுவ’ என அரசினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று இங்கு வாழும் தமிழ்பேசும் மக்களால் இப்பிரதேசம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு என அழைக்கப்பட்டாலும், அரச ஆவணங்களிலும், நிர்வாகச் செயற்பாடுகளிலும் ‘தம்பலகமுவ’ என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு
1 பாலம்போட்டாறு 2 புகுக்குடியிருப்பு 3 பொற்கேணி 4 தம்பலகாமம் 5 கோவிலடி 6 மீரா நகர் 
7 சிறாச் நகர் 8 முள்ளிப்பொத்தானை வடக்கு 9 முள்ளிப்பொத்தானை கிழக்கு 
10 முள்ளிப்பொத்தானை 11 கல்மிட்டியா தொற்கு 12 கல்மிட்டியா வடக்கு

தம்பலகாமப் பற்று என்னும் சுயாட்சியுடன் கூடிய வன்னிச்சிற்றரசு பெயர் பெறுவதற்குக் காரணமான தாய்க்கிராமம் “தம்பலகாமம்” என்ற அதே பெயருடன் 14 சிற்றூர்களை இரு கிராமசேவையாளர் பிரிவுகளுக்குள் உள்ளடக்கியதாக இன்றுவரை நிலைத்திருக்கின்றது. ‘தம்பலகாமம் கள்ளிமேட்டில் ஒரு கல்வெட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது உடனே வா’ அன்ற அப்பாவின் பரபரப்பான அழைப்பு திருகோணமலை நகரில் இருந்து என்னை அவசரமாக பயணிக்க வைத்தது.

திருகோணமலை நகரில் இருந்து கண்டி நோக்கிய A6 நெடுஞ்சாலையில் கிழக்காகப் பிரிந்து செல்லும் தம்பலகாமம் கிண்ணியா வீதியில் 3.5Km தூரத்தில் அமைந்திருக்கின்றது தம்பலகாமம். பல சிற்றூர்கள் ஒரு சங்கிலித் தொடர் போல் பசுமையான வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்திருப்பதே ஒரு தனியழகு. ஊருக்குள் நுழையும் போதே தென்னஞ்சோலைகளுக்கு மேலாகத் தெரியும் ஆதிகோணேநாயகர் ஆலயக்கோபுரம் மனதிற்குப் பரவசமூட்டுவதாக இருக்கும். இங்கு 665 குடும்பங்களைச் சேர்ந்த 2240 தமிழ்மக்கள் (2014) வாழ்கின்றார்கள்.


எனது தந்தை கலாபூசணம்.வே.தங்கராசா, அவருக்கு கல்வெட்டுப் பற்றிய தகவல் தந்திருந்த  வயலூர்ப் புலவன் எனும் புனைப்பெயருடைய கவிஞர் திரு.மா.புவேந்திரராசா ஆகியோருடன் கள்ளிமேடு நோக்கிப் பயணித்தேன். கள்ளிமேடு ஒரு சிற்றூர். யுத்த அனர்த்தங்கள் ஏற்படுத்திய இடப்பெயர்வின் பின் இன்று 272 (2014) மக்கள் வாழும் ஒரு இடமாக இது காணப்படுகிறது. தம்பலகாமத்தின் புகழ்பூத்த பல கலைஞர்களும், அண்ணாவிமார்களும், சுதேச வைத்திர்களும் கள்ளிமேட்டினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இதனால் பின்வந்த காலங்களில் கள்ளிமேட்டினைப் பலர் “கல்வி மேடு” என சிலர் அழைக்கத் தலைப்பட்டனர்.






பண்டைய நாட்களில் கள்ளிமேட்டிலுள்ள வேள்வி வளாகத்தில் வருடந்தோறும் கண்ணகியம்மன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. கண்ணகி கோவலன் விழாவாக நடைபெறும் இவ்வேள்வி தம்பலகாமம் ஆதிகோணநாயகர் வெளிச்சுற்று வழிபாடுகளில் முக்கியம் பெற்ற ஒன்றாகவும் இருந்தது.

நாங்கள் தேடிச் சென்ற கல்வெட்டு கள்ளிமேட்டு வேள்வி வளாகத்திலிருந்து சிறிது தூரத்திலுள்ள வீட்டின் வளவொன்றில் காணக்கிடைத்தது. வீட்டின் தற்போதைய உரிமையாளரான பெண்மணி அதனை ‘ஐய்யனார் சுவாமி கல்’ என அடையாளப்படுத்தினார். அவர் கூறியது போல் கல்லின் அடிப்பாகத்தில் சில எழுத்துக்கள் தென்பட்டாலும் கல்லின் ஏனைய பகுதிகளனைத்தும் சேற்றுமண் நிறைந்து காணப்பட்டது.



கல்லினை நன்றாக நீரூற்றி தென்னந்தும்பினால் தேய்த்துக் கழுவியபோது எழுத்துக்கள் துல்லியமாகத் தெரியத் தொடங்கின. அருகில் இருந்த கடையில் கோதுமைமா வாங்கி கல்லின் மேல் பூசிய பின்னர் எளிதில் யாவரும் வாசிக்கும் வண்ணம் எழுத்துக்கள் வெளிப்பட்டன.

கல்லின் மேற்பகுதி பரவளைவானது. கல் 50 Cm உயரமும், 40 Cm அகலமும் உடையது. கல்லின் நிலத்தில் நிறுத்தப்பட்ட அடிப்பகுதி நிலத்திற்கு மேல் 20 Cm உயரமுடையது. அது ஒரு நடுகல். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் வருமாறு:

1. நள வருடம் தை.மீ.உ.(ங)   -  (பரவளைவாக எழுதப்பட்டது)
2. காராள குல
3. கந்தப்பர் மகன்
4. கணபதிப்பி(ள்ளை)
5. தேகவியோகம்
6. தம். கள்ளிமேடு
7. மகன்
8. க.ஐயாத்துரை


இக்கல் ஒரு நடுகல். அது கந்தப்பர் கணபதிப்பிள்ளை அவர்களின் இறப்பினைப் பதிவு செய்கிறது. குறித்த நபர் பற்றிய தகவல்கள் தற்போதைய குடியிருப்பாளருக்கு தெரியாத போதும் இக்கல்லினை வீட்டின் முன்னைய உரிமையாளரான திரு.கந்தையா கிருபானந்தன் அவர்கள் வணங்கிச் செல்வதாக ஒரு முக்கிய தகவலினைத் தந்தார் அவர்.

அற்புதக்கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன்

திருகோணமலையில் தற்போது வசித்துவரும் இளைப்பாறிய கிராமசேவையாளரும், சிற்பக்கலைஞரும், நாடக நடிகருமான திரு.க. கிருபானந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்த நடுகல் அவரது பரம்பரைக்குச் சொந்தமானது என்பதனை உறுதிசெய்ய முடிந்தது. எனினும் மேலும் விபரங்களைத் தெரிந்து கொள்ள வைராவியார் குடும்பத்தைச் சேர்ந்த திரு.தெய்வேந்திரம் துரைநாயகம் அவர்களை எனது தந்தையின் உதவியுடன் அணுகினேன்.

அவர் தந்த தகவல்களின் அடிப்படையில் திரு.க. கிருபானந்தன் அவர்களின் தந்தையின் பெயர் கந்தையா விதானையார். கந்தையா விதானையாரின் தந்தை ஐயாத்துரை. ஐயாத்துரை அவர்களின் தந்தை கணபதிப்பிள்ளை. கணபதிப்பிள்ளை அவர்களின் தந்தை கந்தப்பர். இவ்வாறாக நடுகல்லில் குறிக்கப்பட்ட அமரர் கந்தப்பர் கணபதிப்பிள்ளை அவர்களை இனங்காண முடிந்தது.

திரு.க. கிருபானந்தன் அவர்களின் தந்தையான கந்தையா பிறந்தது 1920 களில் என்பதனால் அவருக்கு இரண்டு தலைமுறை முந்தியவரான கணபதிப்பிள்ளை அவர்களின் காலம் கி.பி 1860 முதல் 1920 வரை இருக்கலாமென பலரது வாய்மொழித் தரவுகள் மூலம் அனுமானிக்க முடிந்தது. அதாவது இற்றைக்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளிமேட்டில் கணபதிப்பிள்ளை அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்.

விதானையாளராகக் கடமையாற்றிய அவர் கல்வியறிவில் சிறந்து விளங்கியவராக இருந்ததை அறியமுடிகின்றது. அவரிடம் நிகண்டு முதலான பல அரிய ஓலைச்சுவடிகள் இருந்ததாகச் சொல்கின்றார்கள். அவரது மரணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அண்ணளவாக 1910 – 1920 காலப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. எனவே இந்நடுகல் இன்றைக்குச் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனபதனை உறுதிப்படுத்த முடிகிறது.

எம்மை அழைத்துச்  சென்றவர் அதனைக் ‘கல்வெட்டு’ என்றதற்கும், வீட்டின் தற்போதைய உரிமையாளர் அதனை ‘ஐயனார் கல்’ என்றதற்கும் அக்கல்வெட்டு முழுமையாக வாசிக்கப்படாமையே காரணம் என்றாலும் அவர்கள் மக்கள் குடியிருப்பின் நடுவில் ஒரு நடுகல்லினை எதிர்பார்க்கவில்லை என்பதும் இன்னொரு காரணமாகும்.

கணபதிப்பிள்ளை அமரத்துவம் அடைந்தபோது அவரது நினைவாக ஐயாத்துரை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நடுகல் ஊருக்கு வெளியே இருக்கும் ஐயனார் தீவில் அவர்களுக்குச் சொந்தமான காணியில் நிறுவப்பட்டிருக்கின்றது. பின்னர் திரு.கிருபானந்தன் அவர்களின் தந்தையாரினால் மாட்டுவண்டியின் உதவியுடன் அந்நடுகல் கள்ளிமேட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

நடுகல் 

நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். நினைவுக்கல் உருவாக்கும் வழக்கம் ஒரு குறித்த பண்பாட்டினருக்கோ, குறித்த பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ சொந்தமானதல்ல. மிகத்தொன்மையான காலம் முதல் இவ்வழக்கம் இருந்து வருகின்றது.

கடவுள் உருவங்களின் தோற்றத்திற்கு இறந்த முன்னோர்களின் வழிபாடே அடிப்படையாக இருந்தன என்பது ஆராட்சியாளர்களின் முடிவு.
தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகிற்கு வெளிக்காட்டும் சான்றாதாரங்களுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு என்று பல பண்டைய தமிழ் இலக்கியங்களில் நடுகல் பற்றிய செய்திகள் பரவிக்கிடக்கின்றது.

வீரர்களுக்கு என உருவாக்கப்பட்ட நடுகற்கள் “வீரக்கற்கள்” என அழைக்கப்பட்டன. நடுகல் இறந்தவர் தொடர்பான விபரங்களைத் தருவதோடு சில வரலாற்றுச் செய்திகளையும் நமக்கு அறியத்தருவதாக இருக்கிறது. இந்த அடிப்படைகளின் கீழ் தம்பலகாமம் கள்ளிமேட்டு நடுகல் சொல்லும் வரலாற்றினை சற்று விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

நடுகல்லின் மேற்பகுதிக்கு ஏற்றவாறு முதல்வரி பரவளைவாக எழுதப்பட்டுள்ளது. அது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் இறந்த தினத்தினைப் பதிவு செய்கின்றது. நளவருடம்.தை.மீ.உ(ங) என்ற முதல்வரி குறிப்பில், நளவருடம் ஆண்டைக் குறிக்கின்றது. இந்துக்களின் ஆண்டுமுறையில் 60 வருடங்கள் ஒரு வட்டமாகக் கருதப்படுகின்றது. அதில் வரும் 50வது வருடம் நளவருடமாகும். சித்திரை முதல் நாளை புதிய ஆண்டின் தொடக்கமாகக் கொண்ட இந்த ஆண்டுமுறைப்படி நளவருடம் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.

ஆங்கில வருட முறைப்படி இனி நளவருடம் (2036 - 2037) ஆம் ஆண்டில் வரும். எனவே நளவருடம் இதற்கு முன்பாக 1976-1977, 1916-1917, 1856-1857, 1796-1797 என்ற ஒழுங்கில் வந்திருக்கும். ஏலவே நாம் பார்த்திருந்தபடி இறந்தவரின் குடும்ப வரலாற்றனை அடிப்படையாகக் கொண்டு இந்நடுகல் இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கணித்திருந்தோம். அந்த அடிப்படையில் இங்கு குறிப்பிடப்படும் நளவருடம் 1916  -  1917 என்பதனை உறுதி செய்யலாம்.

அடுத்துவரும் சொற்களான தை.மீ.உ(ங) என்பது இந்துக்களின் ஆண்டு முறைப்படி எழுதப்பட்டிருந்தால் நள வருடம் தை மாதம் 23 ஆம் திகதியாக ( உ- 2, ங - 3 தமிழ் எண் முறைப்படி) இருக்கும்.

நடுகல்லின் இரண்டாவது வரி இறந்தவரின் குலத்தினைச் சாதிரீதியாகக் குறிப்பிடுகிறது. ‘காராளர் குல’ என்ற சொற்றொடரில் காராளர் எனக்குறிக்கப்படுவது சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும் பெயராகும். காராளர் என்பதன் நேர்ப்பொருள் மேகத்தை அல்லது மழையை ஆள்பவர் என்பதே. காராளர் என்பது வேளாளர்களைக் குறிக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டாலும் தம்மைக் கார்காத்த வேளாளர் எனக் குறிப்பிட்டுக் கொள்ளும் பகுதியினரைக் குறிப்பதற்கு சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்துவரும் மூன்றாவது, நான்காவது வாசகங்கள் இறந்தவரின் விபரத்தினைத் தருகின்றது. கந்தப்பர், மகன். கணபதிப்பி(ள்ளை) என்ற சொற்றொடர் இறந்தவர் கந்தப்பர் கணபதிப்பிள்ளை என்பதனைக் குறிக்கின்றது. இங்கு இறந்தவரான கணபதிப்பிள்ளையின் பெயரில் ‘கணபதிப்பி’ என்ற பகுதி தெளிவாகத் தெரிகிறது. கல்வெட்டுக்களை எழுதும் போது கல்வெட்டுச் செய்தியினை ஓலையில் எழுதி பின்பு அச்செய்தியினை கல்லின் மேல் ஓவியம் போல் வரைந்து அதன்மீது உளி முதலான கூரிய கருவிகளால் வெட்டுவது வழமை. கணபதிப்பிள்ளை என கல்லில் எழுத முனைந்தபோது சரியாக இடக்கணிப்பீடு செய்யவில்லை போலுள்ளது. அதனால் அவர்களால் ‘ள்ளை’ என்ற எழுத்துக்களை சிரமத்துடன் பொறிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

நடுகல்லில் எழுதப்பட்டுள்ள ஐந்தாவது வாசகம் “தேகவியோகம்”என்பதாகும்.  இது அவரது இறப்புச் செய்தியினைச் சொல்கிறது. “உடலில் இருந்து உயிர் நீங்கிச் செல்லுதல்” என்பதற்குரிய வடமொழிச்சொல் இதுவாகும். அந்நாட்களில் இப்பிரதேச எழுத்து வழக்கில் வடமொழி கொண்டிருந்த செல்வாக்கினை இது உணர்த்துவதாக இருக்கிறது. பரமபதம் அடைதல், தெய்வீகமடைதல்,  மரணமடைதல், தேகாந்தம் என்பன இந்நடுகல் எழுதப்பட்ட சமகாலத்தில் இலங்கைச் சாசன வழக்கில் இறப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட செற்களாகும்.

அதனைத் தொடர்ந்து வரும் ஆறாவது வாசகமான “தம்.கள்ளிமேடு” இறப்பு இடம்பெற்ற இடத்தினைக் குறிக்கின்றது. தம்பலகாமத்தைச் சேர்ந்த கள்ளிமேடு என்பதனையே இது சுருக்கமாகச் சொல்கின்றது. இதன் மூலம் தம்பலகாமத்தில் இருந்த சிற்றூர்களை அடையாளப்படுத்தும் போது ‘தம்’ என்று அவற்றின் தாயூரான தம்பலகாமத்தை குறிக்கும் வழமை அக்காலத்தில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

இந்த நடுகல் எழுதப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட வீடு, வயல், காணி உறுதிகளிலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தமிழ் ஆவணங்களிலும் ‘திரு.தம்.கந்தளாய், திரு.தம்.கிண்ணியா, திரு.தம்.ஆலங்கேணி’ போன்ற சொற்றொடர்களைக் காணலாம். அத்துடன் இன்று வழக்கொழிந்து போய்விட்ட “புறோநோட்டு” என்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்களிலும் இவ்வகையிலேயே தம்பலகாமப்பற்றின் கீழிருந்த சிற்றூர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

இங்கு திரு.தம்.ஆலங்கேணி என்பது திருகோணமலையைச் சேர்ந்த தம்பலகாமத்திலுள்ள ஆலங்கேணி எனும் ஊர் எனப் பொருள்படும். ‘தம் கள்ளிமேடு’ என்ற பதம் இன்னொரு முக்கிய விடயத்தையும் சுட்டி நிற்கிறது. அதாவது இன்றைய நாட்களில் கல்வி மேடு என்று சிலர் குறிக்கப்படும் இப்பிரதேசம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ‘கள்ளி’ மேடு என்றே வழங்கப்பட்டிருக்கிறது. என்பதனை இந் நடுகல் ஆவணப்படுத்துகிறது.

இறுதியாக நடுக்கல்லினைப் பொறிக்கச் செய்தவர் பற்றிய தகவல் ஏழாம், எட்டாம் வரிகளில் இடம்பெற்றுள்ளது. அவர் இறந்தவரின் மகன். அவரது பெயர் க.ஐயாத்துரை என்பதாகும். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அறியப்படும் ஐயாத்துரை அவர்களுக்குச் சொந்தமான திருமுகாற்றுப்படை முதலான ஓலைச்சுவடிகளை  இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. ஐயாத்துரை அவர்களுக்கு தன் தந்தைக்கு நடுக்கல் நாட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு அவரது பரந்த இலக்கிய அறிவு காரணமாக இருந்தது என ஊகிக்கலாம். அவர் தன் தந்தைக்கு எடுத்த இந்நடுகல் மூலம் சுமார் நூறுவருடங்களுக்கு முந்திய சில வரலாற்றுப் பதிவுகளை நமக்காக விட்டுச்சென்றுள்ளார்.


நடுகல்லினை நீரூற்றிக் கழுவியது முதல் அதன்மேல் மா பூசி எழுத்துக்களை வெளிப்படுத்தியதுவரை எங்கள் செயல்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை உற்சாகப்படுத்தி அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

வரலாற்றை அறிதலும் , ஆவணப்படுத்தலும் எத்தனை முக்கியமானதோ அதேயளவு முக்கியத்துவம் கொண்டது அதன்மீது அடுத்த தலைமுறையும் ஆர்வங்கொள்ளச் செய்வது.

 பயணம் தொடரும்........
ஜீவன்


                                        நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com






குறிப்பு - ஆவணப்படுத்தலுக்காக தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்'  பற்றிய தகவல்கள்  பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

8 comments:

  1. அருமையான ஆய்வுக் கட்டுரை

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete
  3. தமிழ் வாழ்ந்த மண்ணின் வரலாற்று சான்றுகள் எத்தனையோ வடிவமைவில்; உருவாக்கம் பெற்றுள்ளது. எம்முன்னோர் எமக்கு இட்டுச்சென்ற பூர்வீக தலைமுறை,வழிமுறையான அடையாளங்களை தெரிந்து கொள்ளவேண்டிய கடமை தமிழராகிய எமக்கு உண்டு, இதன் பெருமையும் எமக்கே உண்டு....ஆகா அற்புதமான பதிவுகள், நன்றி ஐயா!

    ReplyDelete
  4. அருமை தங்கள் தேடல் எங்களையும் தேடவேண்டும் என்ற ஆர்வத்தை ஏறுபடுத்துகின்றது.தெளிவான விளக்கமான கட்டுரை

    ReplyDelete
  5. அற்புதமான கட்டுரை

    ReplyDelete
  6. மிக்க நன்றி

    ReplyDelete