Monday, May 19, 2014

தம்பலகாமம் தந்த பெண் எழுத்தாளர் திருமதி காயத்ரி நளினகாந்தன்


“பட்டிகள் கட்டியதால் பட்டிமேடு” என கவிஞர் க.வேலாயுதம் அவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற பட்டிமேட்டில் ‘வைராவியார்’ குடும்பத்தைச் சார்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி அவர்களுக்கும், அவரது மனைவி ஞானசோதி அம்மையாருக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தவர்தான் நமது தம்பலகாமத்தின் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி.காயத்ரி நளினகாந்தன் அவர்கள்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், உயர்கல்வியையும் பெற்ற இவர் பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக பல அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றியதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு சமூகப்பிரச்சனைகளை மையமாக வைத்து தனது கருத்துக்களை எழுத்தோவியங்களாக வடித்துள்ளார்.

பால்நிலைச் சமத்துவம் தொடர்பாக திருகோணமலையில் கடந்த காலங்களில் வெளிவந்த சஞ்சிகைகளான ‘மலர்ச்சி’ ‘குளக்கோட்டன்’ போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளராக செயற்படுவதோடு, பெண்கள் தொடர்பாக தெற்காசிய நாடுகளில் நடைபெறும் மாநாடுகளில் இலங்கைப் பிரதிநிதியாக இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளுக்குச் சென்று கலந்து கொண்டுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகள் தினக்குரல், வீரகேசரி, தினகரன் வார தினசரிப் பதிப்புகளில் பிரசுரமாகியுள்ளன. பெண்கள் தொடர்பாகவும் தற்கால அரசியல் தொடர்பான விமர்சனங்களையும், திருகோணமலையில் வாழ்ந்த வாழும் பெரியார்கள் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளையும் எழுதி வருவதோடு சில இணையத்தளங்களுக்கும் கட்டுரைகளையும் பேட்டிகளையும் வழங்கியுள்ளார்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி நளிகாந்தன் அவர்களை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக்கி தமக்கென மட்டும் வாழாது பிறருக்காகவும் வாழ்ந்து வருகின்றனர் இத்தம்பதிகள். ஆசிரியரான திரு.நளினகாந்தன் அவர்கள் ‘காந்தி சேவா சங்கத்தை’ அமைத்து அதனூடாக பல சமூகப்பணிகளை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.

‘யுத்த இழப்புகளின் தாக்கத்தை சுமக்கும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் ‘வன்னியூர்ச்செல்வி’ என்ற புனைப்பெயரில் இவர் எழுதியுள்ள கட்டுரை யுத்தத்திற்குப் பிறகு ‘குடும்பப் பாதுகாப்பில்லாமலும் சமூகப் பாதுகாப்பில்லாமலும் போருக்குப்பின்னர் வாழும் பெண்களின் இருண்ட பக்கங்களை துல்லியமாகப் படம் போட்டுக் காட்டுகிறது.

‘சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறை’ என்ற கட்டுரை தினக்குரல் ‘சாளரம்’ பகுதியில் பிரசுரமாகியுள்ளது. இவருடைய கட்டுரைகளை வாசிக்கும் பொழுது தான் சொல்ல வரும் விடயங்களுக்கான தரவுகளை மிகவும் துல்லியமாகச் சேகரித்த பின்னரே கட்டுரைகளை எழுதுகிறார் என்பது தெரிகிறது. அரசியல் தொடர்பான கட்டுரைகளில் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இவர் தயங்குவதில்லை.

‘தமிழர்களின் அரசியல் நகர்வை ஒருபடி உயர்த்திய மாமனிதன் அருணாசலம் தங்கத்துரை’என்ற தலைப்பில் அமைந்த இவரது கட்டுரையில் மறைந்த மாமனிதர் தங்கத்துரையின் அரசியல் சாணக்கியத்தையும் அவரது கல்விச் வேவையையும் மக்கள் சேவைக்காக அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ‘13ஆவது திருத்தத்தை வலியுறுத்திச் செயல்பட்ட நந்தகோபன்’ ‘இனப்பிரச்சினையில் தமிழ் அரசியல் கட்சிகளின் பங்கு’ ‘பெண்கள் மீதான வன்முறையின் இரட்டைப் பொறுப்பாளிகள்?’ ‘ஈழத் தமிழரின் வரலாற்று ஆவணமாக திருக்கோணேஸ்வரம்’ போன்ற கட்டுரைகளும் தினக்குரல் வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

இலங்கையில் பெண்கள் அரசியலில் போதுமான பங்களிப்பை செய்வதற்கான சூழ்நிலை இன்னமும் பலவீனமாகவே இருப்பதாக B.B.C யின் பேட்டி ஒன்றுக்குப் பதிலளிக்கும் பொழுது திருமதி காயத்ரி நளினகாந்தன் கூறியுள்ளாhர்.’ ‘உலகுக்கு முதலாவது பெண் பிரதமரைத் தந்த நாடாக இலங்கை இருந்த போதிலும் இங்கு இன்னமும் அரசியல் ஆண் ஆதிக்கத்தால் சூழப்பட்டஒன்றாக இருப்பதும் இலங்கைக் குடும்பங்கள் பெண்களை வீட்டை நிர்வகிப்பதற்கான ஒருவராக மாத்திரமே வளர்க்க முனைவதும் கடந்த 30 வருடகாலப் போரும் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கான கணிசமான சூழலை இங்கு ஏற்படுத்தவில்லை என்றும்’இந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

வேலாயுதம் தங்கராசா.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    எமது திருமலை மண்ணில்பிரவசம் கொண்ட திருமதி காயத்ரி நளினகாந்தன் என்ற எழுத்தாளர்பற்றி தங்களின் எழுத்துருவினால் மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்...மேலும் எழுத்துலகில் வளர எனது வாழ்த்துக்கள் ... பதிவாக அறியத்தந்தமைக்கு தங்களுக்கும் எனது பாராட்டுக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Dear Dr
    Thanks for introducing Ms.Kayathri. She can do wonders not only by writing, but also in action. It is nice to read your father Thanka - The lazy mans writings. Shen is the releasing the book?
    Kernipiththan

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete