Wednesday, April 30, 2014

மூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - புகைப்படங்கள்


வரலாற்றைத் தேடும் பயணங்களில் பல சுவையான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் அவர்கள் வெருகலில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2'  திருகோணமலையில் வெளியிடப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து இந்தப் பயணம் ஆரம்பித்தது.
இதில் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களான திரு.தனுராஜன், திரு.பசில், திரு.செல்வகுமார் ஆகிய மூவரும் ஆர்வத்துடன் இணைந்திருந்தனர். வழமை போலவே குறுகிய நேரத்தில் மிக விறுவிறுப்பாக நடந்தேறிய பயண நிகழ்வுகள் வாழ்வில் மறக்கமுடியாதவையாகும். வெருகல் நோக்கிய எமது பயணத்தில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு தகவல் குறிப்பின் அடிப்படையில் பட்டித்திடல் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.

திருகோணமலை மூதூரில் இருந்து 10 KM தூரத்தில் இந்த பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் உள்ள இந்தக்  கிராமம் பல இடப்பெயர்வுகளையும், படுகொலைகளையும் முன்னைய காலங்களில் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஆலயத்தில் தற்பொழுது திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றது. எதிர்பார்த்தது போலவே அங்கு நான்கு  நவீனயுகக் கல்வெட்டுக்கள் கிடைத்தன.

பண்டையகாலங்களில் நிகழந்த நிகழ்வுகள், போர்வெற்றிச் செய்திகள், ஆலயங்களுக்கான தானங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை கற்சாசனங்களில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது நாம் அறிந்ததே. அதுபோலவே 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களும் சில முக்கிய செய்திகளைப் பதிவு செய்ய கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதனை ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் இவை. அண்மைய நாட்களில் பழுகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறப்புத்தொடர்பான கல்வெட்டுக்களும் இந்த வகையைச் சேர்ந்தனவையே என்பது குறிப்பிடத்தக்கது.

வாசலில் உள்ள கற்தூண் 21.09.1976 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆலய கும்பாவிஷேக நிகழ்வினை பதிவு செய்திருக்கிறது. க(கொ)டுமையான யுத்தம், பலமுறை இடம்பெற்ற இடப்பெயர்வுகள்  என்பனவற்றைத் தாண்டி இச்செய்தி இன்று நமக்குக் கிடைக்கிறது.


இதுதவிர ஆலயச்சூழலில் மூன்று கல்வெட்டுக்கள் அவ்வாலயப் பெயரினைத் தாங்கிக் காணப்பட்டது. இவற்றில் ஒன்றில் 1960 ஆம் ஆண்டெனப் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Professor-S-Pathmanathan

இவற்றினைப் பார்வையிட்ட பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் 1960 ,1976 காலப்பகுதியில் வாழ்ந்த மூதூர் பட்டித்திடல் மக்கள் தங்கள் ஆலய நிகழ்வுகளைப் பண்டைய நாட்களைப்போல கல்வெட்டுக்களாகப் பொறிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதனை இதன் மூலம் அறியக்கூடியதாக உள்ளது என்றார்.அத்துடன் கல்வெட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்கள் பட்டித்திடலில் இருந்த புராதானமான ஆலமென்றினைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத்தான் கருதுவதாகவும் கூறினார்.

தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் வெருகல் நோக்கிய பயணமொன்றின் வழியில் நவீனயுகக் கல்லாவணங்களைக் காணக்கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
                                                                                                 த.ஜீவராஜ்

பயணம் தொடரும்........பயணம் தொடரும்........பயணம் தொடரும்........


மேலும் வாசிக்க

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    இருளில் கிடந்த வாலாற்றை தூசி தட்டி உலகத்தின் பார்வைக்கு பறைசாற்றியமைக்கு பாராட்டுக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. 'நவீனயுகக் கல்வெட்டுக்கள்' என்ற சிந்தனை அருமை. பட்டித்திடல் விநாயகர் வாசலில் உள்ள தூணை நான் 2010ம்ஆண்டு பகுதியிலிருந்து 3வருடம் அடிக்கடி பார்திருக்கிறேன். அது பற்றி மேலோட்டமாக ஆர்வம் காட்டினேன். அது கங்கு வேலிப்பகுதியில் இருந்து கொண்டு வந்ததாக அங்கிருந்த மூத்தவர்கள் எனக்கு சொன்னார்கள். அதிலுள்ள எழுத்துக்கள் பழமையானவை இல்லை என்பதால் அதை நான் பெரிது படுத்தவில்லை. ''நவீனயுகக் கல்வெட்டுக்கள்'' என்ற கோணத்தில் யோசிக்கவே இல்லை. சமீபகாலமாக மீண்டும் பட்டித்திடல் கல்வெட்டை பார்க்க வேண்டும் என்று உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. நீங்கள அதை நிவர்த்தி செய்து விட்டீர்கள்
    நன்றி

    ReplyDelete