Sunday, December 07, 2008

வலிக்கும் வார்த்தைகள்

கவிதை
நிறையவே நான் வருந்தியதுண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் போனதுக்குமாக


இப்போது நினைத்தாலும்
நெஞ்சின் ஏதோவோர் மூலையில் வலிக்கிறது
என் ‘நா’ கக்கிய தீக்கள்
எதிராளியை விட ஏராளம்தரம்
என்னையே பொசுக்கிப் போயிருக்கிறது

ஏவமட்டுமே முடிந்த- மீள
எடுக்கமுடியாத அம்புகளவை
எத்தனையோமுறை நெஞ்சுருகி அழுதாலும்
கழுவிடமுடியாத கறைகள்

நிதானக் கடிவாளத்தை
நித்தமும் கொண்டுதிரிவதுண்டு நான் இருந்தும்
நினைத்திரா வேளைகளில்
படம்மெடுத்தாடும் பாம்பாய் –நா
விசம்கக்கி விடுகிறது

ஆறுதல் படுத்துவதைவிடுத்து
மற்றவர் நெஞ்சை
அழித்திடும் ஆயுதமாகவே
ஆகிடுமோ என்ற அச்சம்
இப்போதொல்லாம் என்னை
அயரவே விடுவதில்லை
விழிப்புடனே இருக்கிறேன்

வலி
வாளினால் மட்டுமல்ல
வார்த்தைகளாலும் வருமென்பதால்.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

16 comments:

  1. விழிப்புடனே இருங்கள்! கவிதை அருமை!!

    ReplyDelete
  2. நிதானக் கடிவாளத்தை
    நித்தமும் கொண்டுதிரிவதுண்டு நான் இருந்தும்
    நினைத்திரா வேளைகளில்
    படம்மெடுத்தாடும் பாம்பாய் –நா
    விசம்கக்கி விடுகிறது

    ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று வள்ளுவரும் எத்தனை அழகாக சொன்னார்
    .நம்மையும் மீறி நம் நாவு சில வேளை
    சுடத்தான் செய்கிறது.நா காப்பதே பெருமை .

    ReplyDelete
  3. வலி
    வாளினால் மட்டுமல்ல
    வார்த்தைகளாலும் வருமென்பதால்//


    வார்த்தைகளால் அதிகமென்பதால்னு கூட வந்திருக்க்கலாம்..கவிதை அருமை தங்கராசு

    ReplyDelete
  4. நன்றி நினா.கண்ணன்,பூங்குழலி,தணிகை.ஜெ.
    எழுதுவது என்னவோ இலகுவாகத்தான் இருக்கிறது கடைப்பிடிப்பதுதானே கஷ்டமான காரியம்.

    ReplyDelete
  5. நல்ல கவிதை நண்பரே ...

    தவறவிட்ட பூக்களை அள்ளிவிடலாம் ...
    வார்த்தைகளை அள்ளுவது கடினம் ...

    நல்ல அர்த்தமுள்ள கவிதை ....

    நானும் என்னால் முடிந்தவரை வார்த்தைகளை தவறாமல் இருக்க முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறேன் நண்பரே ...

    ReplyDelete
  6. நன்றி நண்பரே
    நா காப்பது நம் எல்லோருக்கும் நல்லது.

    ReplyDelete
  7. /வலி
    வாளினால் மட்டுமல்ல
    வார்த்தைகளாலும் வருமென்பதால்./

    /நிறையவே நான் வருந்தியதுண்டு
    சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
    சொல்லாமல் போனதுக்குமாக/

    அருமையான வரிகள்

    அண்மையில் படித்த மற்றும் எழுதிய இரண்டு கவிதைகள் நினைவிற்கு வருகிறது

    படித்து பாருங்கள்

    வார்த்தைகள் ( முதல் கவிதை )

    வார்த்தைகள் ( இரண்டாவது கவிதை )

    ReplyDelete
  8. நன்றி திகழ்மிளிர்


    ///வார்த்தைகள் ( முதல் கவிதை )
    வார்த்தைகள் ( இரண்டாவது கவிதை )///

    இரண்டும் அருமையான கவிதைகள்.....

    ReplyDelete
  9. ///நிறையவே நான் வருந்தியதுண்டு
    சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
    சொல்லாமல் போனதுக்குமாக///

    சொல்ல முடியாமல் போனதும் நிறைய!!!
    தேவா..

    ReplyDelete
  10. உண்மை தான் பேசாத வார்த்தைகளுக்குத் தான் நாம் எஜமான்
    பேசிய வார்த்தைகள் தான் நமக்கு எஜமான்

    கவிதை நன்றாகவுள்ளது..

    ReplyDelete
  11. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete
  12. ஏவ மட்டும் முடிந்த மீள எடுக்க முடியாத அம்புகளை ,,,,,,,,,,,,,,,, உண்மைதான் நா சுழல்வது தெரிவதில்லை, தங்களை அறிமுகப்படுத்திய ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. தொடர்வோம். வாருங்கள் பாலமகிபக்கங்கள்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete