Sunday, February 08, 2009

தம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்

ஆலயம்,

ஆலயம்

திருச்சிற்றம்பலம்

நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே

பிரமனும் அரியும் பிழைபடத் தாமே
பெரியவர் என்றென்னும் சிறுமை
புரிபடச் செய்ய முடிவிலா மலையாய்த்
தோன்றினார் பெரும் புகழாளர்
அரியயன் செருக்கு அடங்கிய பின்பு
அவர்கட்கும் நல்லருள் புரிந்தார்
கரிதனை உரித்துப் போர்த்திய நிர்மலர்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கானிடைச் சென்று வேட்டுவ வடிவில்
காண்டீபனுடன் சமர் விளைத்து
வானிடை எற்றி வரம்பல ஈந்த
மாபெரும் வானவர் தலைவர்
தானெனும் முனைப்பு உடையவர்க் கென்றும்
தரிசிக்க முடியாத முதல்வன்
தேன்மலர்ச் சோலையும் வயல்களும் சூழ்ந்த
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தேவர்கள் துயரம் தீர்த்திட எண்ணி
தேரூர்ந்து சென்றவர் அங்கே
மூவர்கள் உறையும் முப்புரங்களையும்
முறுவலால் எரிபடச் செய்தார்
சேவலைக் கொடியாய்க் கொண்ட செவ்வேளைச்
செந்தமிழ்க் கடவுளாய் நல்கும்
காவலர் எங்கள் சிவபெருமானார்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கன்றினால் எறிந்து விளாங்கனி உதிர்த்த
கண்ணனின் தங்கையை மணந்தார்
மன்றுனில் ஆடும் கூத்த பிரானை
மறந்திடா திருந்திடும் பெரியோர்
என்றுமே துன்ப இடர்தனில் சிக்கார்
ஏற்றமே அருளுவார் ஈசர்
குன்றென உயர்ந்த தென்னைகள் சூழ்ந்த
கோயில் குடியிருப்பு அமர்ந்தாரே.

குளத்தினில் மூழ்கிய தந்தையைக் காணாக்
குழந்தையின் அழுகுரல் கேட்டு
அளப்பெரும் அன்பொடு அம்மையாய் அப்பராய்
அச்சிறு குழவி முன் தோன்றிக்
கிளர்ந்திடும் ஞானப் பாலமு தூட்டிக்
கிருபையைப் புரிந்த கோணேசர்
வளத்தினில் சிறந்த வயல்களால் சூழ்ந்த
கோயி;ல் குடியிருப் பமர்ந்தாரே

மாதவம் மிகுசெய் மணிவாசகரின்
மனத்துயர் அகற்றுதற்காக
வேதத்தின் முடிவாய் விளங்கிடும் ஈசர்
விரைந்தனர் பரித்திரள் சூழ
பாதி நள்ளிரவில் பரியெல்லாம் நரியாய்
ஆக்கியோர் அற்புதம் புரிந்த
மாதுமை பங்கர் வயல் வெளி சூழ்ந்த
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கல்லுடன் பிணித்துக் கடலினுள் எறிந்தும்
கஷ்டங்கள் ஏதுமே இன்றி
நல்லிசைப் பாடலால் நாதனின் நாமம்
நவின்றிடும் நாவுக்கு அரசர்
வல்வினை அகற்றி வைத்தவரான
வானவர் போற்றிடும் தலைவர்
நெல்மணிப் போர்கள் நெருக்கமாய்த் தோன்றும்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தோழமை உயர்வை உலகினுக் குணர்த்த
சுந்தர மூர்த்தியின் மனையாள்
நீழ்விழி நங்கை பரவையா ரிடத்தில்
நயந்துரையாடித் தன் அன்பர்
வாழ்வது சிறக்க வழிவகை செய்த
வல்லவரான எம் பெருமான்
ஆழ்கடல் சூழ்ந்த இலங்கையிலுள்ள
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

அம்மையை இடப்புறம் இருத்தி இவ்வுலகோர்
இல்லற வாழ்க்கையின் புனிதச்
செம்மையை உணர அம்மை அப்பராய்
சிறப்புற அவர் கொண்ட கோலம்
தம்மையே துதித்து உரிகிடுவோரின்
தழைஎல்லாம் பொடிபடச் செய்து
இம்மையில் முத்தி அருளிடும் முதல்வன்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

மாயஇவ்வுலக வாழ்க்கையில் சிக்கி
வருந்திடும் அடியவர் தமக்கு
நோய்தனை அகற்றும் மருத்துவர் போல
நோக்கினால் திருவருள் புரிவார்
தாயினும் பரிவு கொண்டு இவ்வுலகத்
தலைமையைத் தாங்கும் பேரிறைவன்
கோயிலும் வயலும் நீருடன் சூழ்ந்த
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தொல்லைகள் சூழ்ந்திடும் துயரங்கள் நேர்ந்திடும்
போதவர் நாமம் நினைந்தால்
அல்லல்கள் அகன்றிடும் ஆனந்தமோங்கிடும்
அகத்தினில் புத்தொளி வீசும்
தில்லையில் திரு நடம் செய்தருள் புரிகின்ற
தெய்வமே இப்பதி மாந்தர்
வல்வினை போக்கிடும் கருணையினால் வந்து
கோயில் குடியிருப்பில் அமர்ந்தாரே.

திருச்சிற்றம்பலம்

தம்பலகாமம்.க.வேலாயுதம்






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete