Tuesday, February 10, 2009

திருக்கோணேஸ்வரத்தின் தெய்வீக வரலாறு.

ஆலயம்
தந்தையின் சரிதம் கூறத் தனையனின் அருளை நாடும்
எந்தனின் இறைஞ்சுதலுக்கு இரங்குவாய் என்று ஏற்றிக்
கந்த வேள் தனக்கு மூத்த கணபதி கழல் பணிந்து
வந்தனை செய்யும் எந்தன் மனத்தினில் திறன் அருள்வாய்.


பாவினைச் சிறக்கச் செய்யும் பக்குவம் இல்லையேனும்
கோவிலில் சிறந்த திருக் கோணேஸ்வரப் பெருமை கூறும்
ஆவலால் இதனைச் செய்ய அவாவினேன் அறிஞராவோர்
தேவனின் சரிதமென்றென் செய்பிழை பொறுத்தருள்வீர்.

உலகம் முன் தோன்றும் போது பிரளய சமுத்திரத்தில்
அலைகள்மேல் குமிழியாகச் சக்தியின் ஆற்றல் தோன்றும்
நிலையினைக் கண்ட முக்கண் நிர்மலனான எங்கோன்
தலை அசைத்ததனை நெற்றிக் கண்களால் வற்றச் செய்தான்.

குமிழியாய் இருந்த வஸ்தே கோமானின் பார்வை பட்டு
திமு திமு என வளர்ந்து கைலை மா மலையாய்த்தோன்ற
அமுதினும் இனிய செவ்வாய் அம்மையும் அப்பனுமாய்
அமர்ந்திருக்கத் தேவர் அனைவரும் தொழுதுநின்றார்.

நின்ற அவ்அமரர் தம்மை நிர்மலன் கனிந்து நோக்கி
என்றும் இவ்வுலகை ஆக்கல் பிரமனின் கடமை என்றார்.
நன்றுற நிலை நிறுத்தல் மாலினுக்குரியதென்றார்.
கொன்றுயிர் அழித்தல் எல்லாம் உருத்திரனுக்குரிய தென்றார்.

உலகத்தைத் தாங்கும் பேற்றை ஆயிரம் சிரங்களுள்ள
பலமிகு ஆதிசேடன் பொறுப்பினில் விட்டேன் என்றார்
அலைத் திரள்போலத் தேவர் ஆர்ப்பரித் தகமகிழ்ந்து
பலத்தினில் மிக்கோன் ஆதி சேடனே எனப் புகழ்ந்தார்.


உலகினைச் சுமக்கும் பேற்றை உடையவனான சேடன்
பலத்தினைச் சுரர்கள் போற்றும் பாங்கினைக் கண்டு வாயு
கலக்கமும் நெஞ்சில் கோபம் கன்றிட அமரர்க்குள்ளே
பலத்தினில் மிக்கோன் யானே என்று மார்தட்டலானான்.

அரவமும் காற்றும் தம்முள் தாமேதான் பல வானென்று
உரமுற உயர்ந்து பேசும் உணர்வினைக் குறைப்பதற்காய்
சுரர்பதி அவரைப்பார்த்துச் சொல்லுவான் நீங்கள் இந்தக்
கிரிதனை ஒருவர்காக்க மற்றவர் தகருமென் றான்.

தேடுதற்கரியனான சிவபிரான் உறை மலையை
சேடன் தன்பேருடலால் பலமுறை வளைந்து சுற்றி
படத்தினால் முடிதனையும் மறைத்திடும் பாங்கு கண்டு
அடக்கிடமுடியாச் சீற்றம் அடைந்தனன் காற்றின் வேந்தன்.

ஊழியில் குதித்தெழுந்து உலகினை அழித்தல் போல
நாழிக்கு நாழி காற்று நானிலம் நடுங்க வீசி
ஆழியைப்புரட்டி இந்த அகிலத்தை அழித்தல் போலப்
பாழ்நிலை அடைதல் கண்டு அமரர் கோன் இதனைச்சொன்னான்.

அன்பர்கள் உங்கள் கோபம் அடங்குவீர் அகிலம் எல்லாம்
இன்றுடன் அழிந்து போகும் இடர்தனைத் தவிப்பீர் என்று
மன்றாடும் மகபதியின் வார்த்தையைப் புறக்கணித்துக்
குன்றினை மோதி மோதிக் குதறினான் வாயுதேவன்.

சினத்தினை தணிப்பீர் உங்கள் செய்கையால் தோன்றுகின்ற
அனைத்தையும் அழிப்பீர் என்று இந்திரன் அடுத்துச் சொல்ல
மனத்திடை அதனை ஏற்கா வாயுவின் செருக்கைக் கண்டு
தணித்திடு படத்தை என்றான் சேடனும் அதனைச் செய்தான்.

சேடனின் படம் சுருங்கத் தெய்வமாமலை முடிகள்
நீடொளி விளங்கக்கண்டு நெருங்கிய வாயுதேவன்
படீலென முறித்துத் தெற்கேவீசிய முடியிலொன்றே
பாடல்கள் போற்றும் திருக் கோணேஸ்வர மாகும்.


திருமுறை தந்து சைவ சிவப்பணிபல புரிந்த
பெருமையில் மிக்க ஞான சம்பந்தப் பெருமான்நல்கும்
அருள்மிகு பதிகம் பெற்ற ஆலயம் கோணேஸ்வரத்தைச்
சிர சில் கைகூப்பித் தொழச் சிவபிரான் அடியிற் சேர்க்கும்.
(வேறு)
முன்னர் வீழ்ந்திடுசிகிரி காளாத்தியாய் மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரா மலை என்னும் பிறங்கல்
அன்னதற் பின்னர் வீழ்ந்தது திருக்கோணமாமலை.
இன்ன மூன்றையும் தட்சணகைலை என்றிசைப்பர்.
(செவ்வந்திப் புராணம்)


தம்பலகாமம்.க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment