Monday, January 20, 2014

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்

ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றுதான் திருகோணமலையைச் சேர்ந்த இராஜேந்திர சோழவளநாடு. திருகோணமலை நகரமும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதியான இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.
சோழர்காலத் திருகோணமலையில் இருந்த வளநாடுகள் பற்றி  திருகோணமலையிற் சோழர்கள்  - பகுதி - 1  இல் பார்த்திருந்தோம்.

இனி.....
மானங்கேணி என்று அழைக்கப்பட்ட பிரதேசம் இன்று திருகோணமலை நகர மத்தியில் பரபரப்பு நிறைந்த மின்சார நிலைய வீதியில் கட்டடங்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயமாகும்.


சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்

பரம்பரை வழி வந்த கதைகளின் படி பண்டைய நாட்களில் திருக்கோணேஸ்வர ஆலய மகோற்சவ முடிவில் கோணேசர் நகர்வலம் வரும்போது ஒருநாள் இவ்வாலயத்தில் தங்கிச் செல்வதாகவும், கோணேஸ்வர ஆலய தெப்பத்திருவிழா இவ்வாலயத்திற்கு அருகில் இருந்த குளமான மானாங்கேணியில் இடம்பெற்று வந்ததாகவும் கருதப்படுகிறது.
குளக்கோட்டு மன்னன் திருக்கோணேச்சரத்தில் திருப்பணிகள் செய்தபோது அமைக்கப்பட்ட இக்குளத்தின் பெயரான மானாங்கேணியே அதனைச் சூழ்ந்த பிரதேசத்திற்கும், ஆலயச் சூழலுக்கும் வழங்கி வந்ததை காணக்கூடியதாக உள்ளது.

குளக்கோட்டன்

வெள்ளை வில்வமரங்களால் சூழப்பட்ட இவ்வாலயமும் அருகில் இருந்த மானாங்கேணி குளமும் 1624 ஆம் ஆண்டில் திருக்கோணேச்சரத்தை போர்த்துக்கேசர் இடித்தழித்ததைத் தொடர்ந்து பராமரிப்பற்றுக் கைவிடப்பட்ட நிலையில் சிதைந்து போனது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆலயச்சூழலை துப்பரவு செய்தபொழுது ஒரு கல்வெட்டும், மகாவிஷ்ணு, பார்வதி ஆகியோரின் கற்சிற்பங்களும், ஒரு நந்தித்தேவரும், ஆவுடையாரும் கண்டெடுக்கப்பட்டன. திருத்த வேலைகளுக்காக நிலத்தினை அகழ்ந்த பொழுது அங்கு ஒரு புராதன ஆலயமொன்று இருந்து அழிவடைந்தமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றது.

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்
சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்
சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்
சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்

மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து திருகோணமலை மானாங்கேணி என்னுமிடத்தில் ஒரு கல்வெட்டும், புராதன சின்னங்களும் இருப்பதாகவும் அவற்றில் இருக்கும் தகவல்களை வெளிப்படுத்த தொல்லியளாளர்கள் தேவையெனக் குறிப்பிட்டு 01-02-1972 இல் தினகரன் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியது. இச்செய்தியினை வழங்கியவர் சாம்பல்தீவு பிரதேச சபைத்தலைவரான திரு.தம்பிராசா அவர்கள். இவரே திருகோணமலையில் காணப்பட்ட பல சோழர்கால தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுக்களையும் தேடி வெளி உலகிற்கு அறியத்தந்த பெருமைக்குரியவர்.

திரு.தம்பிராசா அவர்களின் அழைப்பு பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்விளைவாக 17-06-1972 இல் சோழ இலங்கேஸ்வரன் தொடர்பான மானாங்கேணி, கந்தளாய் வரலாற்றுக் கட்டுரைகள் ஷதிருகோணமலையில் இரு சோழர்கால கல்வெட்டுக்கள்| என்ற தலைப்பில் வீரகேசரியிலும் சமகாலத்தில் ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட கல்வெட்டு துண்டமானது, அதன் இரு பக்கங்களும் வெட்டப்பட்டு இருந்ததினாலும், அதன் நடுவில் நீள்சதுரமான துவாரம் காணப்பட்டதாலும் அச்சாசனத்தின் சில சொற்களையும், எழுத்துக்களையும் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக இருந்ததாக செ.குணசிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

சிதைந்திருந்த நிலையில் கிடைத்தாலும் இச்சாசனம் ஒரு பொக்கிசமாகும். இலங்கையில் சோழ இலங்கேஸ்வரன் தொடர்பான தகவல்களைத் தரும் இரு கல்வெட்டுக்களில் இச்சாசனமும் ஒன்றாகும் என்பதே அதன் முக்கியத்துவத்திற்குக் காரணமாகும்.

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்

சோழராட்சியில் பாண்டிய நாட்டுக்குரிய அரச பிரதிநிதியாக சோழவம்சத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்து அவருக்கு சோழபாண்டியன் என்ற பட்டத்தினை வழங்கியதைப் போன்றே இலங்கையை நிர்வகித்த சோழப்பிரதிநிதிக்கும் சோழ இலங்கேஸ்வரன் என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது என்பதனை ஆதாரப்படுத்தும் சாசனம் இதுவாகும்.

திரு செ.குணசிங்கம் அவர்களால் 1974 இல் வெளியிடப்பட்ட மானாங்கேணிச் சாசனத்தின் நிரப்பப்பட்ட மூழுவடிவம்

1. ரான உடையார் ஸ்ரீ சோழ இல(ங்கேஸ்)
2. வரதேவற்கு யான் எ(ட்டாவது)
3. (மும்மு)டி சோழ மண்ட(லத்து)
4. (இராஜே)ந்ர சோழ வள நாட்(டு)
5. சோழவளநாட்(டு) த் திருக்கோ
6. (ண) மலை ஸ்ரீ மந்;ஸ்ய N(கஸ்வ)
7. வரமுடையார் மூலஸ்தானமு(ம்)
8. ஸ்வரமுடையார் கோ(யிலும்)
9. (சோ)ழ மண்டலத்து (இராஜே)
10. (ந்த்ரசி)ங்க வளநாட்டுத்
11. (---நா)ட்டு(க்) க(ஞ்)---ங்
12. வேளாண் கணபதி(எ)
13. (டு)த்த தனிக்-----கு(ம)
14. ---------------------------------


சானத்தின் முதல்வரி சோழ இலங்கேஸ்வரனைக் குறிக்கிறது. இரண்டாவது வரி இச்சாசனம் சோழ இலங்கேஸ்வரனின் ஏழாவது அல்லது எட்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்டது என்பதனை வரையறுக்கிறது. மூன்றாவது வரி முதல் ஐந்தாவது வரையுள்ள வரிகள் இலங்கையான மும்முடிச் சோழமண்டலத்தில் இருந்த வளநாடான இராஜேந்திர சோழவள நாட்டினைக்; குறிப்பிடுவதுடன் அதன் மறுபெயராக ‘மும்முடிச் சோழவள நாடு’ என்னும் பெயரினையும் அறியத் தருகிறது.

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்


தொடர்ந்து வரும் ஆறு முதல் எட்டுவரையுள்ள வரிகள் திருகோணமலை ஸ்ரீ மத்ஸ்யகேஸ்வரத்தின் மூலஸ்தானம் பற்றியும் ஈஸ்வரமுடையார் கோயில் ஒன்றினைப் பற்றியும் சொல்கிறது. அதன் பின வரும் பகுதி சோழமண்டலத்து இராஜேந்திரசிங்க வளநாட்டு மூவேந்த வேளாண் கணபதி பற்றியதாக அமைந்திருக்கிறது.
த.ஜீவராஜ்

                                                                                                               தொடரும்..........



மேலும் வாசிக்க
திருகோணமலையிற் சோழர்கள்  

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா.
    அறிய முடியாத மிகச் சிறப்பான தகவலை மிகச் சிறப்பாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் இதைப் போன்று இன்னும் வரலாற்றுப்பதிவுகள் மலர ட்டும்...ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete