Tuesday, November 12, 2013

‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்

விஸ்வாமித்திரர்’

எண்ணூறு வருடகால வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ குளக்கோட்டு மாமன்னன் காலத்திலிருந்து பெரிதும் பேசப்பட்ட இடமாகும். குளக்கோட்டனால் சிறப்பாக உருவாக்கப்பட்ட அருவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த ‘நாயன்மார் வேள்வி வளாகம்’ இத்திடலில் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இத்திடல் ‘நாயன்மார்திடல்’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வேள்வி வளாகத்திற்கான காணியை தென்னமரவடியைச் சேர்ந்த திரு.நமச்சிவாயம் என்னும் பெரியார் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் இங்கே குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும்.

இத்தகைய வரலாற்றுப் புகழ்மிக்க ‘நாயன்மார் திடலில்’ மிகப்பிரபலியமான குடும்பத்தில் புகழ்பெற்ற சித்தமருத்துவராக விளங்கியவர் ‘பத்தினியர்’ என்னும் பரியாரியாகும். ‘நாயன்மார்திடல் வேள்வி வளாகத்திற்கு’ எதிராக இவரது வீடு அமைந்திருந்தது. திரு.பத்தினியர் பரியாரியாருக்கும் அவரது தர்மபத்தினி வீரக்குட்டி அபிராமிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தவர் தான் நமது மதிப்பிற்குரிய வேலுப்பிள்ளை அண்ணாவியார். வேலுப்பிள்ளை அண்ணாவியார் சிறந்த ‘ராஜபாட்’ நடிகராக விளங்கினார்.

நினைத்தவுடன் ஒரு நாடகத்தை மேடையேற்றும் ஆற்றல் அவரிடமிருந்தது. சிறந்த சித்தவைத்தியராக விளங்கிய இவர் ‘ஆர்மோனியம்’வாசிப்பதிலும் ‘வாய்ப்பாட்டிலும்’சிறந்து விளங்கினார். எந்த நேரமும் “ஆர்மோனியப் பெட்டியுடனே’ காணப்படும் இவர் தனக்குப் பிடித்தமான ‘இராகங்களை’ இசைத்துக் கொண்டே தன்னிடம் மருந்திற்காக வரும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கி அவற்றை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியும் விபரமாக எடுத்துக் கூறுவார்.



நாடகங்களை நெறிப்படுத்தியதோடல்லாமல் இவரும் சில பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இதன்காரணமாக செல்லமாக மக்கள் இவரை ‘யமன்’ என்றும் ‘விஸ்வாமித்திரர்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தகால கட்டத்தில் இந்தியாவிலிருந்து ஆர்மோனியவித்துவான் சின்னையா சாய்வும், மிருதங்கவித்துவான் மதறிசாவும், பிற்பாட்டுக்காரர் கறீம்பாயும் தம்பலகாமம் வந்து நாயன்மார்திடலில் தங்கியிருந்தனர்.இவர்களிடம் வேலுப்பிள்ளை அண்ணாவியார் ஆர்மோனியம் மிருதங்கம் வாய்பாட்டு ஆகிய கலைகளைத் துறைபோகக் கற்றுக் கொண்டார். பின்னாளில் இவர்களுடன் வேல்நாயக்கர் , எஸ்.ஆர்.கமலம் போன்ற இந்தியக் கலைஞர்களும் வந்து இணைந்து கொண்டனர். கலையார்வம் மிக்க இவர்கள் அனைவரும் இணைந்து தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் தரமான பல நாடகங்களை அடுத்தடுத்து மேடையேற்றினர்.

தம்பலகாமத்தில் ‘கல்விமேட்டில்’ கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியாரும், நாயன்மார்திடலில் பத்தினியர் வேலுப்பிள்ளை அண்ணாவியாரும் சமகாலத்தில் சிறந்த சித்த வைத்தியர்களாகவும் அண்ணாவிமார்களாகவும் புகழ்பெற்ற ‘ஆர்மோனிய வாசிப்பாளர்களாகவும்’ சிறந்து விளங்கினர். பத்தினியர் வேலுப்பிள்ளை அண்ணாவியார் நெறிப்படுத்திய ‘ஸ்ரீ விக்கிரம சிங்கன்’ என்ற வரலாற்று நாடகம் ‘கல்வி மேட்டிலுள்ள’ ஆலையடி வேள்வி வளாகத்தில் அரங்கேறியது. இந்நாடகம் மக்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றது. தொடர்ந்து ‘நளதமயந்தி’  மயில் இராவணன்’ ‘பவளக்கொடி’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

தொடர்ந்து மேடையேற்றப்பட்ட இந்நாடகங்கள் அனைத்தும் வேலுப்பிள்ளை அண்ணாவியாருக்கு வெற்றிமேல் வெற்றியளித்தன. தம்பலகாமத்தின் முதுபெரும் எழுத்தாளரும் கவிஞருமாகிய திரு.க.வேலாயுதம் அவர்களும் இந்நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார் என அறியக் கூடியதாயுள்ளது. பழமையில் ‘நாயன்மார் கோவிலில் இடம் பெறும் மடை வைபவம்’ மிகவும் பிரசித்தமானது.

நாயன்மார் திடல்

இந்த மடை வைபவத்திற்கு தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் முக்கிய தொழும்பாற்றும் கங்காணம், அடப்பன்மார், தானத்தார் ,வரிப்பத்து ,ஆகியோர் சம்பூருக்குச் சென்று அங்கு வதியும் ‘கட்டாடி’ என்னும் பிரதம பூசகரை மேற்கட்டி, நிலப்பாவாடை போன்ற சீர்வரிசைகளுடன் அழைத்து வந்து அவரது தலைமையில் பன்னிரு மறிகாரர்களும் இணைந்து இப்பூசைவழிபாட்டை வெகுசிறப்பாகக் கொண்டாடுவர். இலட்சுமி நாராயணர் வேண்டுதலாக இவ்விழா ஒருநாள் முழுவதும் நடைபெறும். இந்த அற்புதமான வழிபாட்டைக் காண்பதற்காக ஊரே திரண்டுவரும். வருடத்திற்கு ஒருமுறை இவ்விழா சிறப்பாக இடம்பெற்று வந்துள்ளதாக வயதுவந்த பெரியவர்கள் கூறுகின்றனர்.

பத்தினியர் வேலுப்பிள்ளை அண்ணாவியாருக்கும் அவரது தர்மபத்தினி பசுபதிப்பிள்ளைக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்களில் ஒருவர் பெண், மற்றவர் தம்பலகாமம் தந்த பல்துறைக்கலைஞர் திரு.வேலுப்பிள்ளை மகாலிங்கம் அவர்கள். திரு.வே.மகாலிங்கம் அவர்களின் மகன் கண்ணன் அவர்கள்’டோல்கி’ அடிப்பதில் கைதேர்ந்தவர். இவரது பேரன் திரு.சி.தர்ஷன் அவர்கள் வீடியோ படம் எடுப்பதிலும் படத்தொகுப்புச் செய்வதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.

இதே போல வேலுப்பிள்ளை அண்ணாவியாரின் பெண்பிள்ளையின் வாரிசுகளும் கலையார்வம் மிக்கவர்களாகவே காணப்படுகின்றனர்.குறிப்பாக தியாகராசா சித்திரவேல் அவர்கள் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞராகவும் ‘மென்ரிலின்’இசைக்கலைஞராகவும் விளங்கினார். வேலுப்பிள்ளை அண்ணாவியார் நெறிப்படுத்திய ‘தூக்குத்தூக்கி’ ‘வள்ளிதிருமணம்’ ‘சத்தியவான் சாவித்திரி’ போன்ற நாடகங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். திருமதி. மாணிக்கராசா தங்கேஸ்வரி ‘ஆர்மோனியம்’வாசிப்பதில் தேர்ச்சிபெற்றிருந்தார் எனினும் மேடைகளில் இவர் ‘ஆர்மோனியம்’ வாசித்ததாக கேள்விப்படவில்லை.

இதே போல இளைப்பாறிய தம்பலகாமம் பாரதிபுர பராசக்தி வித்தியாலய முன்னாள் அதிபராகிய திருமதி.சின்னமணி குமாரவடிவேல் அவர்களும் அவரது தங்கை திருமதி கமலேஸ்வரன் கமலா அவர்களும் திருமதி. பரமானந்தராசா வசந்தி அவர்களும் சிறப்பாகப் பாடும் ஆற்றல் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். திருமதி.குமாரவடிவேல் சின்னமணி அவர்கள் கதை கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றிருந்தார் எனினும் அக்கலையை தொடர்ந்து பேணி வளர்க்கவில்லை. இவரது மகளான திருமதி.குணராசா அஸந்தா அவர்களும் தாயைப்போல சிறப்பாகப் பாடக்கூடியவர். ஆசிரியரான திரு.கணேசபிள்ளை அகிலன் அவர்களும் அவரது சகோதரர் திரு.கணேசபிள்ளை குகன் அவர்களும் நன்றாகப் பாடக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வேலுப்பிள்ளை அண்ணாவியாரின் பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. Dear Dr
    I have read and enjoyed. Your father is doing wonderful research. Thanka should include Alankerny too in this. Kanapathipillai Annaviyar trained Alankerny youths and staged lots of dramas in Alankerny and Thamplalkamam. To conduct 'velvi 'is not a joke. The people go to to sampoor and invite Kaddady the chieftain to conduct the velvi. The people have to take 'pachchai peddy.' That mean fresh vegetables, rice, cloths, and everything in a big 'kadakam' a box made of palmairah leaves. to get the consent of the leader to conduct the velvi. I t is very interesting event . We can not imagine those wonderful and golden days. Anyhow I was enjoyed the article when I read. Thanks for your efforts. Kernipiththan

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete
  3. கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள தானத்தார் பற்றி தகவல் தேடலில் இக்கட்டுரையை பார்க்க முடிந்தது. தானத்தார் என்போர் தற்போது வழக்கிலுள்ள ஒரு சமூகத்தினரா என அறிய விரும்புகிறேன். - விஜய்
    dhasikaa@hotmail.com

    ReplyDelete
  4. வணக்கம்

    தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய தொழும்பாளர்களில் வைராவியார் எனும் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களை தானத்தார் என்றும் அழைப்பர்.

    பார்க்க http://www.geevanathy.com/2014/11/kulakoddan.html


    இன்றைய நாட்களில் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய 18ஆந் திருவிழாவின்போது வைராவியாருக்கு அலகு பாய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆனால் பண்டைய நாட்களில் பன்னிரண்டு வருடங்களுக்கொருமுறை வைராவியார் தொழும்பு முறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் இளம்பெண் ஒருவரை திருவிழா இறுதிநாளன்று பலியிடும் வழக்கம் இருந்தது. எனினும் இந்த வழமை பின்னர் திருகோணமலை பூபால வன்னியனார் தலையீட்டினால் ‘வைராவியாருக்கு அலகு பாய்ச்சும்’ நிகழ்வாக மாற்றியமைக்கப்பட்டதாக மரபுவழிக் கதைகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.

    எனவே தானத்தார் என்பது காரணப்பெயராக இருக்கலாம்.

    நட்புடன் ஜீவன்.

    ReplyDelete