Monday, April 27, 2009

துகிலுரிதலும்,பார்த்துக்கொண்டிருத்தலும்...


இன்றுவரை எனக்கு மர்மங்கள் பலநிறைந்த வாழ்வியல் ஆவணமாகத் தென்படுகிறது மகாபாரதம்.

சிலநாட்களாகவே மகாபாரதத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்த அந்த மிகக்கொடூரமான நிகழ்வான ‘துகிலுரிதல்’ சம்மந்தமான சில காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி விடைதெரியாத பலகேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்கிறது.

பீஷ்மர், விதுரர், கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார் போன்ற பெருமக்களால் நிறைந்திருந்த திருதராஷ்டின மன்னனுடைய அவையில் அநாகரிகமான முறையில் துச்சாதனனால் சபைக்கு அழைத்துவரப்படுகிறாள் அபலைப் பெண் திரௌபதி. நிகழ்வின் காரணமாக அப்போது அந்த மாபெரும் சபையில் இருந்த மேற்சொன்ன பெரியோர்கள், துரியோதனன் முதலான கௌரவர்கள், பாண்டவர்கள், சிற்றரசர்கள், மந்திரிகள், பணியாளர்கள், காவலர்கள் என்று எல்லோருமே மெல்ல மெல்ல மறைந்து போக மனதில் திரௌபதை மட்டுமே விஷ்வரூபம் எடுத்து நிற்கிறாள்.

திடீரென அடிமையான அந்த முன்னாள் அரசியின் மனநிலை அந்நேரத்தில் எப்படி இருந்திருக்கும். துகிலுரியும்படி துச்சாதனனை துரியோதனன் ஏவியபோது அத்தனை பெரிய மனிதர்கள் வீற்றிருக்கும் அந்த அவையில் சீச்சீ அப்படியெல்லாம் ஒருபோதும் நடைபெற அனுமதிக்கமாட்டார்கள் என்னும் எண்ணம் ஒருகணமேனும் அவள் மனதில் ஓடிமறைந்திருக்குமா? ஏனெனில் அங்கு கூடியிருந்தவர்கள் யாவருமே குலப் பெருமையால், வீரத்தால் இன்னும் பலவற்றால் பேரும், புகழும் படைத்தவர்கள். திடமான முடிவுகளை எடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள். எனவே இவர்கள் எல்லாம் இந்த அநீதியைப் பார்த்துக்கொண்டா இருந்துவிடுவார்கள் என்ற எண்ணம் நிட்சயம் வந்திருக்கும்.

இவர்கள் பற்றிய நம்பிக்கையெல்லாம் இறுதியில் துர்ச்சாதனன் கையில் அகப்பட்ட சேலையாய் உருவப்பட்டபோது திரௌபதியிடம் எஞ்சியிருந்த மனிதர்கள் மீதான நம்பிக்கை மரணித்துப்போயிருக்கும் என நினைக்கிறேன்.



திருதராஷ்டினன், பீஷ்மர், விதுரர், கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார் என்று அவைப் பெரியோரெல்லாம் உறவுமுறை, செஞ்சோற்றுக்கடன் என்று கண்முன் நடப்பதைத் தடுக்க திரணியல்லாது ஆறுதல்வார்த்தைகள், அறிவுரைகள் கூறிக்கொண்டிருக்க, சுற்றியிருந்த சிற்றரசர்களோ தமது பிராந்திய நலன், வர்த்தக நலன் கெட்டுவிடக்கூடாதே என்ற பயத்தில் அசைவற்று இருக்க,சிலர் முற்பகை காரணமாக ஆதரிக்க நடந்தேறியது துகிலுரிதலும், பார்த்துக்கொண்டிருத்தலும் நிகழ்வு.

திரௌபதி ஒவ்வொரு பெரியவராக இந்தக் கொடுமையிலிருந்து காத்தருளுமாறு வேண்டிப் பின் அவர்களால் எந்தப்பலனுமில்லை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்றறிந்துகொண்ட ஒவ்வொருமுறையும் மனதளவில் பலமுறை துகிலுரியப்பட்ட கொடுமையை அனுபவித்திருப்பாள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
ஒருவேளை இதுதானோ உலக நீதியும், தர்மமும்! தெரியவில்லை.....
த.ஜீவராஜ்
2009.04.27
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

14 comments:

  1. திரௌபதி ஒவ்வொரு பெரியவராக இந்தக் கொடுமையிலிருந்து காத்தருளுமாறு வேண்டிப் பின் அவர்களால் எந்தப்பலனுமில்லை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்றறிந்துகொண்ட ஒவ்வொருமுறையும் மனதளவில் பலமுறை துகிலுரியப்பட்ட கொடுமையை அனுபவித்திருப்பாள் என்றே எண்ணத்தோன்றுகின்றது

    :)....

    ReplyDelete
  2. மிகவும் அருமையான படைப்பு ஜீவன். இன்றைய காலகட்டத்திலும் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  3. நன்றி Renuka Srinivasan
    காட்சிகளில் காலமாற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. நிகழ்வின் கொடூரமும், வலியும் , வேதனைகளும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது...

    ReplyDelete
  4. எனக்கு துரோண, கிருபாச்சாரியார்கள் பற்றித்தெரியாது
    ஆனால் தமிழறிந்ததால் தலை குனிகிறேன். உங்களின்
    ஒவ்வொரு எழுத்தும் இங்கிருக்கும் இறைச்சல், அங்கிருக்கும்
    விசும்பலுக்கொன்றும் செய்ய லாயக்கில்லை.எனக்கு துரோண, கிருபாச்சாரியார்கள் பற்றித்தெரியாது
    ஆனால் தமிழறிந்ததால் தலை குனிகிறேன். உங்களின்
    ஒவ்வொரு எழுத்தும் இங்கிருக்கும் இறைச்சல், அங்கிருக்கும்
    விசும்பலுக்கொன்றும் செய்ய லாயக்கில்லை.

    ReplyDelete
  5. உங்களின்
    ஒவ்வொரு எழுத்தும் தகிக்கிறது

    ReplyDelete
  6. //ஒவ்வொரு எழுத்தும் தகிக்கிறது//


    நன்றி காமராஜ் அவர்களே

    ReplyDelete
  7. ஏன் எந்தக் கண்ணனும் உதவ இல்லை
    {இங்கு}

    ReplyDelete
  8. ஈழ மக்களின் நிலையும் இன்று திரெளபதியின் நிலையில்தான். யார் அந்த "நீல நிறக்" கண்ணன்?

    http://meenagan.blogspot.com/

    ReplyDelete
  9. யார் அந்த "நீல நிறக்" கண்ணன்?
    ??????

    நன்றி sanjeeth

    ReplyDelete
  10. ஒரு இந்துவாய் இருந்தால் கூட எங்களிடத்திலுள்ள அதிமிஞ்சிய கற்பனைகளும் புனைவுகளும் ஏராளம் என்பதனை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் உட்பட இன்னும் பல இதிகாசங்கள் சொல்லும் கதைகளிலெல்லாம் உண்மைதன்மையைவிடவும் கற்பனைகளின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பது தெளிவு. அவ்வண்ணமே எனது பார்வையில் மகாபாரத்தின் இக்காட்சியும்கூட அதன் ஆசிரியரால் கிருஷ்ணரின் அவதார பராக்கிரமத்தை வெளிப்படுத்த மேற்கொண்ட கற்பனையின் உச்சமாகவே நோக்கப்படுகின்றது. பெரும்பாலான படைப்புக்கள் படைப்பாளிகளைவிடவும் விமர்சகர்களாளேயே ஆழமாய் உற்றுநோக்கப்படுகின்றது,அதுவே ஆசிரியரின் பார்வையில் தட்டுப்படாத நியாயமான கருத்துக்கள் விமர்சகன் பார்வியில் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது,அதன்வெளிப்பாடே ஆரோக்கிய விமர்சகம். எனவே புராணங்களை வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்துவதையும் உதாரணமாய்க்காட்டுதலையும் தவிர்த்து மனித வாழ்வியலைமட்டும் எம் பாதை முன் வைப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மகா பாரதத்தை படிப்பவர்கள்
      ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

      புராணங்களை அப்படியே
      ஏற்றுக்கொள்ளக்கூடாது

      அதில் கூறப்பட்டுள்ள நல்லவைகளை
      வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

      அதில் வரும் கதாபாத்திரங்கள் போல்
      நாமும் அந்த ஹிமாலய தவறுகளை செய்து
      துன்பத்தில் உழலக்கூடாது.

      1. சூதாடுவது தவறு. சூதாடுவது
      அரச தர்மம் என்று தர்மபுத்திரர் நியாயப்படுத்தியதும் தவறு..
      அப்போதே அவர் தர்மத்தின் வழி நிற்பவர்
      என்ற தகுதிக்கு அருகதைஅற்றவர் ஆகிவிட்டார்
      என்பது என் கருத்து

      2. அவர் சூதாடி தோற்றதுமட்டுமல்லாமல்
      தன்னை சேர்ந்தவர்களையும் வைத்து சூதாடி
      அனைத்தையும் இழந்தது தவறு.

      3.பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் பெண்களுக்கு
      ஆண்வர்க்கம் சுதந்திரம் வழங்கவில்லை .
      அவர்களை மதிப்பதில்லை
      அவர்களின் உணர்வுகளை சட்டை செய்வதில்லை .
      அவர்களை ஒரு பொருளாக ,
      அதுவும் போகப்பொருளாக தான் இன்றும் பார்க்கிறார்கள்.
      என்பதே இன்று உலகில் நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றன.

      அவர்களுக்கு ஒரு வகையில் சுதந்திரம் அளிப்பதுபோல்
      அளித்துவிட்டு அவர்களை தங்கள் வலையில்
      எளிதாக விழ வைத்து அழித்துவிடுகிறார்கள்.

      பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
      இல்லையேல் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டே இருக்கும்.

      ஆனால் உண்மையில் படித்தவர்களும் சரி
      பாடங்களை கற்றுகொள்ளுவதில்லை .

      படங்கள் எடுப்பவர்களும்
      அவைகளை வலியுறுத்துவதில்லை.

      பட்டிமன்றத்தில் பேசுபவர்களும் அப்படிதான்.
      பேசி பேசியே வாழ்நாளை ஓழிக்கிரார்கள்.

      அயோக்கியர்களிடம் தந்திரமாகத்தான்
      நடந்துகொண்டு அவர்களை வெல்லவேண்டும்.
      என்பதை கற்றுக்கொள்ளவெண்டும்.

      இதைதான் கண்ணா பரமாத்மா
      பாண்டவர்களுக்கும் நமக்கும் நடைமுறைபடுத்தி
      காட்டினான் போரின் போது .

      அதை விடுத்து அவர்களுடன்
      நான் தருமத்தைதான் கடைபிடிப்பேன் என்றால்
      அவதிப்படவேண்டியதுதான் என்பதை
      உணர்ந்துகொண்டு அதன்படி செயல்படவேண்டும்
      .

      Delete
  11. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete