Tuesday, February 10, 2009

ஆதி கோணநாயகர் அருள வேண்டும்.

ஆலயம்
தம் பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து
தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்
தம்பலகாமம் எனும் பேரைப்பூண்டு எங்கள்
தாயகமாம் உழவர்குலம் தழைத்த பேரூர்
செம் பவளத்திருமேனி உடையோனாகச்
சீவர்களை ரெட்சிக்கும் கருணை வள்ளல்
எம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு
இருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.

சிற்றூர்கள் ஓர் வளைவில் திடல் திடலாய்த்
தெருக்களால் தொடர்புற்றுத் தென்னை சூழ்ந்து
சிற்றாறு பலவாறாய்ப் பிரிந்து ஓடிச்
செந்நெல்லுக்கு நீர் பாய்ந்து தேங்கி நிற்கும்
வற்றாத தடாகங்கள் அவைகளிலே
வளர்ந்திருக்கும் தாமரைகள் செங்கழுநீர்
முற்றாகப் பரந்திருக்கும் பசுமைக்காட்சி
முழுவதிலும் மருதநில எழில்க் கோலங்கள்
பொங்கி வரும் கந்தளாய் நீர் வயலில் பாயும்
புதுப் புனலால் நிறைகின்ற தடாகங்களில்
சங்கினங்கள் வயிறுளைந்து ஈன்ற முத்துக்கள்
தாமரையின் இலைகிடக்க நீர்ப்பறவைகள்
தங்களது முட்டை என்று அடைகாக்கும்
நீர்வளமும் நிலவளமும் நிறைந்த இவ்வூர்
மங்கையரும் ஆடவரும் சேர்ந்துழைத்து
வயல் வெளியில் நெல் விளைத்து மகிழும் ஊர்.
ஆலயம்கோணேசர் கோயில் கொண்டு இருப்பதாலே
கோயில் குடியிருப்பு அதற்கு இப்பால்
குணதிசையில் குஞ்சடப்பன், மாக்கைத்திடல்கள்
ஐயனார் நாயன் மார் திடல் களுக்கு
அண்மையில் நடுப் பிரப்பந்திடல் முள்ளியடி
வர்ணமேடு வன்னிச்சியார் கரைச்சைத் திடல்கள்
கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளி மேடு
கடலோரம் சம்மான்துறை சிப்பித்திடல்கள்

கூட்டங்கள் கூடியதால் கூட்டாம் புளி
கூட்டமாய்ப் பசு வளர்த்த பட்டி மேடு
காட்டு நிலமாய் இருந்து பின் திருந்திக்
கனதியாய்த் தமிழர்கள் நெருங்கி வாழும்
மேடான புதுக் குடியிருப்பு பாலம் போட்டார்
மேற்கினிலே குடியேற்றம் இவ்வளவும்
நெடிதன்று சங்கிலித் தொடர்போல் ஊர்கள்
நிறைந்துள்ள தமிழ் ஊரே தம்பலகாமம்.

கன்னல் வேலி வரம்புடுத்த கயல்கள் துள்ளும்
கழனி சூழ்ந்த தம்பலகாமம் வாழும் மக்கள்
செந்நெல்லை அமோகமாக விளையச் செய்து
சேமிப்பாய்க் கொட்டுகளை நிரப்பலுடன்
இன்னலுறும் யாழ்ப்பாண மக்களுக்கு
இரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பிவைத்து
தன்னிறைவில் விருந்தோம்பி வாழ்வதொன்றே
தமிழ் உழவர் கடைப்பிடித்த வாழ்வு நிலையாகும்.

மழை விட்டும் தூவானம் நின்றிடாத
மகிழ் வற்ற காலமாக இருப்பதாலே
உழவர்க்குத் தொழில்க்குறைவு உணவுப் பஞ்சம்
ஊக்கமாய் செயல்புரிய வழியும் இல்லை
களை கட்டும் போர் மேகம் கலைவதெப்போ?
கஷ்டங்கள் எமைவிட்டு அகல்வதன்று
அழுகின்ற நிலை மாறி முன்போல் வாழ
ஆதி கோணநாயகர் அருளவேண்டும்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

  1. //சங்கினங்கள் வயிறுளைந்து ஈன்ற முத்துக்கள்
    தாமரையின் இலைகிடக்க நீர்ப்பறவைகள்
    தங்களது முட்டை என்று அடைகாக்கும்//

    அழகான கற்பனை...இதுவல்லோ கவிதை..
    இட்டதற்கு மகிழ்ச்சி

    இங்கு காணும் "சென்னெல்" எனும் சொல்லைப் பிரித்தெழுதிலால்; எப்படிப் பிரியும் எனச் சந்திபிரிக்கக் கூடியோர் பிரித்துக் கூறினால் நன்று.

    ReplyDelete
  2. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  3. நான் நினைக்கிறேன். செந்நெல் என்பது சென்னெல் என அச்சுப் பிழையாகியிருக்கலாம்.
    வேறு கட்டுரையில் செந்நெல் எனத் தான் உள்ளது.

    ReplyDelete
  4. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே
    பதிவு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது...

    ReplyDelete
  5. "கடலோரம் சம்மான்துறை சிப்பித்திடல்கள்...."
    இங்குள்ள சம்மான்துறை சிப்பித் திடலகள் என்றால் என்ன. தகவல் தந்தால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete