Sunday, June 28, 2009

தம்பன் கோட்டை தந்த குறுநாவல்


தம்பன் கோட்டை வரலாறு சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.

கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.

ஆனால் கலிங்க விஜயபாகு,  கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.

இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்
(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.

தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).



இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயபாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.

தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்ததுமில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.

(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.

தம்பலகாமம்.க.வேலாயுதம்



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

  1. வரலாற்று நிகழ்ச்சியை தெரியப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  2. அருமையான படைப்பு. நீண்ட நாட்களின் பின் நான் வாசித்த, அழகிய தமிழில் எழுதப்பட்ட தரமான ஈழத்து அரச நாவல். கல்கியின் பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் நாவல்களும் ஒன்றிணைந்த கலவை போன்றிருந்தது.

    ஆனாலும் உதயகுமாரனின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறந்த தளபதி எந்தச் சிந்தனையில் இருந்தாலும் அவனுள் பாதுகாப்பு பற்றிய உணர்வு விழித்தேயிருக்கும் (தூங்கும் போது கூட). அந்த விதத்தில் பார்க்கும் போது "ஆள்காட்டிப் பறவை ஒன்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு பறந்தது.

    அதன் ஓசையில் விழித்துவிட்ட தனியன்" என்னும் போது நிச்சயமாய் அந்தச் சத்தத்தில் உதயகுமாரனும் விழித்திருக்க வேண்டும். எப்படியிருப்பினும் இந்நாவல் சரித்திர இடங்களை மையமாக வைத்துக் காதலையும் அரசியலையும் சேர்த்து எழுதப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது.

    ReplyDelete
  3. You are really doing a great job. Keep it up.

    ReplyDelete
  4. நன்றி யூர்கன் க்ருகியர்.....

    ReplyDelete
  5. நன்றி உங்கள் கருத்துரைக்கு Renuka Srinivasan அவர்களே

    ReplyDelete
  6. கம்பன் கடலை சித்திர வேலாயுத சுவாமி ஆலய வரலாறு அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete