Thursday, November 21, 2013

கர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை

நாகராஜா கணபதிப்பிள்ளை

மிக எளிமையான தோற்றம், அன்புகனிந்த வார்த்தைகள், ஆன்மீகச் சிந்தனையால் பண்பட்ட உள்ளம், கர்மயோகிகளின் சலியாத உழைப்பு என உயர்ந்த மதிப்பீட்டில் நம் மத்தியில் வாழ்ந்த நண்பர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் இன்றில்லை என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கின்றது. மனதைக் கனக்கச் செய்யும் அவரது பிரிவு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் மிக விசாலமானது. அவருடைய தேவை என்றும் வேண்டும் என எண்ணிக்கொள்ளும் வகையில் அவருடைய நட்பு இருந்தது. 1970களின் பின்னர் திருகோணமலையை அடையாளப்படுத்திய மிக முக்கிய முகவரிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.

அவரை நினைவுபடுத்த இரு தேவைகள் உண்டு. ஆன்மீகம் அவர் தேர்ந்தெடுத்த அகப்பயணம். சமரசமில்லாத ஆன்மீகவாதியாக வாழ்ந்து காட்டியவர். அவரது அகப்பயணத்தின் மைய வழிகாட்டியாக கீதை என்றும் துணையாக இருந்தது. கீதைப் பிரியன் என்ற புனைவுப் பெயருடன் கீதையின் கர்மயோகம் குறித்து மிக விரிவான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

நண்பர் தன் இறுதி மூச்சை நிறுத்துவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு "அறிவு" சஞ்சிகைக்காக கர்மயோகம் குறித்து மிக விரிவான விளக்கக் கட்டுரையை எழுதி முடித்திருந்தார். அதுவே அவர் எழுதிய இறுதி வசனங்கள். ஆழ்ந்த மொழிப்பற்றோடு, ஆன்மீகச் சிந்தனையால் கவரப்பட்ட அமரர் அவர்கள் திருக்கோணேஸ்வரம் குறித்து எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் எண்ணிக்கையில் அதிகம்.


திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கணபதிப்பிள்ளை அவர்கள் கௌரவிக்கப்பட்டபோது.

திருகோணமலை குறித்த அவருடைய வரலாற்றுத் தேடலுக்கு நிழற்படங்களைக் கருவியாக்கினார். Dr பாலேந்திரா திருக்கோணேஸ்வர விக்கிரகங்கள் குறித்து எழுதிய (The Trincomalee Bronzes" written by Dr.A.W.Balendra in 1953.) ஆங்கில நூல் குறித்து ஒரு மிக விரிவான விமர்சனங்களை முன்வைத்தார். அங்கே தான் ஒரு நிழற்படக் கலைஞனுக்கு மேலாக அவருக்குள் இருந்த சிற்ப நுட்பங்கள் குறித்த அறிவு வெளிப்பட்டது.

1960களில் தொல்லியல் அகழ்வில் கண்டறியப்பட்ட கோணேசர் ஆலய விக்கிரகங்களின் சிற்ப முத்திரைகள், தாந்தரீகக் குறியீடுகள் குறித்து மிக விரிவான அறிவைப் பெற்றிருந்தார். இதுவே அவரை ஏனைய நிழற்படக் கலைஞர்களில் இருந்து வேறுபடுத்தி உயர்த்தி வைத்தது.

அவர் கடந்து சென்ற நெடும் பயணங்கள் அமர்நாத், பத்ரிநாத், காசி, இராமேஸ்வரம் என இந்தியப் பெரு நிலப்பரப்பின் பல முனைகளைத் தொட்டது. அவரது ஆன்மீகக் குறிப்புக்களில் அவர் பெற்ற அனுபவங்கள் காட்சியாக வெளிப்படும். அவரது எழுத்துக்கள் மரபுசார்ந்த ஆய்வாக இருந்தபோதிலும், இடைவிடாத அவரது ஆழமான தேடலின் வெளிப்பாடு எவருக்கும் வியப்பை அளிக்கும். அவருடைய அறிமுகம் பலருக்கு நிழற்படம் தொடர்பாகவே இருந்தது.

திருகோணமலை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை நிழற்படங்கள் வழியாக சாதித்தவர். இன்று வரலாற்று ஆவணங்களாகப் பேசப்படும் பல படங்களை எடுத்து களஞ்சியப்படுத்தி மற்றவர்களுக்கு கைமாறு எதிர்பாராமல் கொடுத்துதவிய மிகச் சிறந்த நண்பர் அவர்.

அமரர் திரு நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் ஆழ்ந்த இன, மொழிப் பற்றோடு ஆன்மீகச் சிந்தனையால் உயர்ந்துவிளங்கிய பெருமகன். உள்ளதை உள்ளபடியே கூறும் இனிய பண்பாளன். இன்முகத்தாலும், இனிய நற் பேச்சாலும் எல்லோர் மனங்களிலும் என்றும் நிறைந்து வாழ்ந்தவர். தன் வாழ்நாளில் திருகோணமலை நலனில் மிகுந்த அக்கறைகொண்ட மனிதராக வாழ்ந்ததோடு, பொது நிகழ்வுகள் அனைத்திலும் தவறாது சமூகமளித்து தன் பங்களிப்பைச் செய்த பெருமகனார் ஆவர்.

ஊர் போற்றும் பண்புமிக்க நல்மக்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தாலும், மிக எளிமையான தன் வாழ்வால் இறுதிவரை உயர்ந்து நின்றவர். இரக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்து மறைந்த எங்கள் நண்பர் ஒரு ஒப்பில்லாத உதராணம்.

கனகசபாபதி சரவணபவன்விருந்தினர் பதிவு
கனகசபாபதி சரவணபவன்



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    அமரர் நாகராஜா.கணபதிப்பிள்ளை மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற வரலாற்று நூல்களை படிக்கும் போது.. அவர் எம் தமிழர்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றார் என்பது மிகையாகது...அவரைப்பற்றிய நினைவுப் பதிவு அருமை..அவர் விட்டுச்சென்ற பணியை இளைய தலைமுறையினர் தொடர வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete