Saturday, February 28, 2009

‘ரங்கநாயகியின் காதலன்’

 தம்பலகாமம்
{குறுநாவல்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை.

தம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

வரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒருகணம் பிரமிப்படைய வைத்துவிட்டது.

Wednesday, February 11, 2009

நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி !




திருமலைகளத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்
தமிழ் இனத்தின் தாய் மொழியாகத் தமிழ் இருந்து வருகின்றது. ஆயினும் தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள் உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொது காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது. 

Tuesday, February 10, 2009

தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு

ஆலயம்
திருச்சிற்றம்பலம்
(விநாயகர் துதி)

கங்கை சூடிய கோணயங்கடவுளின் கருத்தை விட்டகலாத
மங்கை தன்னோடு தம்பலகாம மெனும் பெரும்பதியினிலமர
இங்கு மோருயர் ஆலயமமைந்த சரிதையைச் செய்யுளிற் சமைக்க
துங்கமாமுக விநாயகன் மலரடி தொழுவது நம் கடனாகும்.

அவையடக்கம்
கல்வியிற் சிறந்த மேலவரியற்றும் கவிவளம் பொருள்நயமுள்ள
நல்லிசைப்பாடலால் அமைத்திடும் திறமை எனக்கில்லையாயினும் ஈசன்
வல்லமையொன்றே துணையென நம்பி வரைந்திடும் வலராற்றிலேதும்
சொற்பொருள் குற்றம் உளதெனில் பெரியோர் பொறுத்தருள் செய்திட வேண்டும்.

ஆதி கோணநாயகர் அருள வேண்டும்.

ஆலயம்
தம் பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து
தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்
தம்பலகாமம் எனும் பேரைப்பூண்டு எங்கள்
தாயகமாம் உழவர்குலம் தழைத்த பேரூர்
செம் பவளத்திருமேனி உடையோனாகச்
சீவர்களை ரெட்சிக்கும் கருணை வள்ளல்
எம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு
இருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.

சிற்றூர்கள் ஓர் வளைவில் திடல் திடலாய்த்
தெருக்களால் தொடர்புற்றுத் தென்னை சூழ்ந்து
சிற்றாறு பலவாறாய்ப் பிரிந்து ஓடிச்
செந்நெல்லுக்கு நீர் பாய்ந்து தேங்கி நிற்கும்
வற்றாத தடாகங்கள் அவைகளிலே
வளர்ந்திருக்கும் தாமரைகள் செங்கழுநீர்
முற்றாகப் பரந்திருக்கும் பசுமைக்காட்சி
முழுவதிலும் மருதநில எழில்க் கோலங்கள்

திருக்கோணேஸ்வரத்தின் தெய்வீக வரலாறு.

ஆலயம்
தந்தையின் சரிதம் கூறத் தனையனின் அருளை நாடும்
எந்தனின் இறைஞ்சுதலுக்கு இரங்குவாய் என்று ஏற்றிக்
கந்த வேள் தனக்கு மூத்த கணபதி கழல் பணிந்து
வந்தனை செய்யும் எந்தன் மனத்தினில் திறன் அருள்வாய்.


பாவினைச் சிறக்கச் செய்யும் பக்குவம் இல்லையேனும்
கோவிலில் சிறந்த திருக் கோணேஸ்வரப் பெருமை கூறும்
ஆவலால் இதனைச் செய்ய அவாவினேன் அறிஞராவோர்
தேவனின் சரிதமென்றென் செய்பிழை பொறுத்தருள்வீர்.

Monday, February 09, 2009

நாடகக் கலை அருகி,அழியும் நிலை

 தம்பலகாமம்இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பழமைஉடைய தமிழ் உழவர்களின் வாழ்விடம் தம்பலகாமம். இங்கு சங்கீதக்கலையும், ஆயுள்வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.

Sunday, February 08, 2009

தம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்

ஆலயம்,

ஆலயம்

திருச்சிற்றம்பலம்

நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே

பிரமனும் அரியும் பிழைபடத் தாமே
பெரியவர் என்றென்னும் சிறுமை
புரிபடச் செய்ய முடிவிலா மலையாய்த்
தோன்றினார் பெரும் புகழாளர்
அரியயன் செருக்கு அடங்கிய பின்பு
அவர்கட்கும் நல்லருள் புரிந்தார்
கரிதனை உரித்துப் போர்த்திய நிர்மலர்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே