▼
Wednesday, April 29, 2009
Monday, April 27, 2009
Monday, April 20, 2009
காலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு
TRINCOMALEE WAR CEMETERY
திருகோணமலை நகரத்திற்கு வெளியே, நிலாவெளிக்குப் போகும் பாதையில் மூன்று மைல் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மயானம் பிரிட்டிஸ் காலணித்துவத்தின் கடைசிச் சின்னங்களாக நமக்கு காட்சி தருகிறது. 228 பிரிட்டி்ஸ், 48 இந்தியர்,13 இலங்கையர் அடங்கலாக 362 பேரின் கல்லறைகளைக் கொண்டமைந்துள்ள இம்மயானத்தில் பெரும்பாலானவை போர்வீரர்களின் கல்லறைகளாகக் காணப்படுகின்றன. இலங்கையின் ஆளுமைக்கு இப்பிரதேசம் உட்பட்ட பின்னரும் இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.
நான் போனபோது சூரியன் தன் அன்றைய நாளுக்கான பயணத்தை முடிக்கும்தருவாயில் இருந்தார். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஒருகாலத்தில் சூரியனே மறையாத தேசத்துக்காக போராடிய வீரர்களின் அந்தக் கல்லறைகளின் மேல் மெல்ல ,மெல்ல நிழல் விழ ஆரம்பித்திருந்தது. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான்.இப்போது அவர்கள் கல்லறைக்குள் என்றாலும், அவர்களது சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.
காலனித்துவ காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாறு கணநேரத்தில் மனத்தில் நிழலாடி மறைந்தது. அன்றைய காலணித்துவ ஆட்சியில் எம்முறவுகள் அனுபவித்த துன்பங்களை எனக்குக் கிடைத்த வாசிப்புக்களும்,செவிவழிக்கதைகளும், ஒலி, ஒளிப்படக்காட்சிகளும் ஞாபகப்படுத்தின. இருந்தும் காலனித்துவத்துக்குப் பின்னான இனவன்முறையின் கோரதாண்டவத்திற்கு, பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நானும்மோர் சாட்சியாக இருக்கின்றேன் என்ற உணர்வு வந்தபோது ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.
கைத்தொலைபேசி நகருக்கு சொல்லும் வீதியில் ஏதோ பிரச்சனையாம் என்றலறியது. திடுக்கிட்டு என் ஞாபகச்சிதறல்களில் {??சுடலைஞானம்} இருந்து விடுபட்டு பதைபதைப்புடன் அடையாள அட்டை,மற்றும் ஆவணங்களை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டு வீதியில் இறங்கினேன். பாடசாலை.அலுவலகம்,அயலவர்வீடு என்று இன்னபிற காரணங்களுக்காகச் சென்ற தங்கள் குடும்ப அங்கத்தினரைத்தேடியோடும் மக்களால் வீதி நிறைந்திருந்தது.
வீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது. காலாகாலமாய், பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.
த.ஜீவராஜ்